06_2006.jpg

காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.

 

தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.

 

இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.

 

கர்னாலி ஓர் அற்புதம் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. இமாலயத் தேசமான நேபாளத்தில் பெருக்கெடுத்தோடுகிற சிறிதும் பெரியதுமான 6000 ஆறுகளில் கடைசிக் காட்டாறு கர்னாலியாகத்தான் இருக்கும். இப்பிராந்தியத்தில் ஓடுகிற மிகப் பெரிய ஆறுகளான கண்டக், மஹாகாளி இரண்டுமே இந்தியநேபாள நாடுகளுக்கிடையிலான சமனற்ற ஒப்பந்தங்களினால் நார்நாராகக் கிழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவை. இந்தியப் பெரியண்ணன் எல்லாத் தண்ணீர் மூலங்களையுமே கொள்ளையடித்துவிட்டது; சின்னஞ்சிறு நேபாள நாடோ தீராத வறட்சியிலும், தொலையாத தாகத்திலும் சிக்கித் தவிக்கிறது.

 

கர்னாலி ஆற்றின் மீது ஜப்பானியர் மிக அற்புதமான தொங்கு பாலமொன்றைக் கட்டியிருக்கிறார்கள். காடுகளைப் போலவே இங்கும் இரவு அடர்ந்து கரியதிரை விழும்நேரம் சிஸாபானி கிராமக் குழந்தைகள் பாலத்தின் மேல் குதித்து ஓடியவாறு ""ஜனநாயகம் ஜனநாயகம், குடியரசு குடியரசு'' என்று முழங்குகின்றன. அங்கு நிலவும் சுதந்திர மன எழுச்சியின் மழலைப் பாட்டொலியாக அது பரவசம் ஊட்டுகிறது.

 

இந்தச் சிறிய கிராமத்தின் மக்களும் கூட நெடுஞ்சாலைகளை மறித்து, 19 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ""பராஸ் ஒரு மக்கள் விரோதி. அவனைத் தூக்கிலே போடு.'' (பராஸ், மன்னன் ஞானேந்திராவின் மகன்) ""திருட்டு நாயே ஞானேந்திரா, நாட்டை விட்டு வெளியேறு'' என்று நேபாளம் முழுக்க பிரபலமான முழக்கங்களை எழுப்பினர். நேபாளத்தில் நடப்பது சர்வாதிகார மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயான போர் என்பதை இது மிகத் துலக்கமாகப் பிரகடனப்படுத்துகிறது.

 

ஆனால் மன்னனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ வெளியேற மனமில்லை. மன்னன் ஞானேந்திரா இன்னமும் அங்கு ஒட்டிக் கொண்டே இருக்கிறான். மன்னனைப் போலவே அவனது ராயல் நேபாள ராணுவம் (கீNஅ) இராணுவத் தலைமைத் தளபதியாக இருக்கும் கோமாளி பியார் யங் தாபா, பல வண்ண நிலப்பிரபுத்துவ உள்ளூர்த் தலைவர்களும், பணநாற்றமடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும் இந்த ஏழை நாட்டின் இரத்தத்தையும், வியர்வையையும், இயற்கை வளங்களையும் சூறையாடியும், சுரண்டியும் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

 

பத்திரிக்கைக் குரல்வளையை நெரித்து நீதிபரிபாலனத்தில் தலையிட்டு, அரசு நிறுவனங்களை அழித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள், வக்கீல்கள், வீட்டுப் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சிறைப்படுத்தி, சித்திரவதைக் கூடங்களில் அடைத்து, அரசு பயங்கரவாத நிலையைக் கட்டவிழ்த்து விட்டு, பல ஆயிரக்கணக்கான ஏழை மக்களை, நேபாள மாவோயிஸ்டு கம்யூனிசப் புரட்சியாளர்களைக் கொன்றார்கள்.

 

நாங்கள் கர்னாலி நதியைக் கடக்கும்போது நடுச்சாமத்தின் கரிய இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கட்டுறுதி கொண்ட ஒல்லியான தேகத்துடன் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் பாதைக்குக் குறுக்கே வந்து பின் இருளில் மறைந்து போனார். எங்கள் கார் டிரைவர் குருஜி, ""மாவோயிஸ்ட்'' என்று முணுமுணுத்துக் கொண்டார். கடந்த 9 நாட்களில் சுமார் 1,000 கி.மீ. தூரம் மாவோயிசக் கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களிலே பயணம் செய்ததால், நாங்கள் ஆச்சரியப்படவில்லை.

 

நாங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போர்முனைகள் தகர்க்கப்பட்ட போலீசு நிலையங்கள், மாவோயிஸ்டுகளைக் கொன்று அவர்களது சிதைந்த உடல்களைக் குழிதோண்டிப் புதைத்த பாலத்து அடிகள், தமது இளம்பாலகர்களைப் பறிகொடுத்த கிராமங்கள் என அனைத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் கார் திடீரென ஒரு இராணுவச் சோதனை நிலையம் அமைந்திருந்த யாருமற்ற, வெறிச் சோடிய நெடுஞ்சாலையை அடைந்தது.

 

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் சுட்டுத் தள்ளப்படலாம். அவர்கள் யாரையும் நம்புவதில்லை. இது மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. எனவே அனைத்துப் பாதைகளையும் நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து இராணுவத்தையோ, அல்லது மாவட்டத் தலைநகரத்தையோ தாக்கத் திட்டமிட்டு இருக்கலாம். (கபிலவஸ்துவில் ஏப்ரலில் நடந்தது போல). பெண் தளபதிகள் தலைமையில் 5,000 6,000 என வலிமையான படையோடு தான்சேன் நகரத்தைக் கைப்பற்றியது போன்ற செயலிலும் இறங்கலாம். (மாவோயிச மக்கள் விடுதலைப் படை (கஃஅ)யில் 40மூ பெண்கள் உள்ளனர்.)

 

""யார் நீங்கள்? இந்த இராத்திரியில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' தூரத்திலே ஒரு குரல்கேட்டது. மிகவும் அந்நியமான குரல். அவர்கள் சிலராக இருந்தனர். அந்த ஒளி எங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தபடியே இருந்தது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மிகவும் தடுமாறிப் போனதால் அவர்கள் இராணுவத்தினர் என்பதை உடனடியாக எங்களால் அடையாளம் காண இயலவில்லை. நாங்கள் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் என்பதை குருஜி தெரியப்படுத்திக் கொண்டார். பின்வாங்கிக் கொண்ட குரல் மீண்டும் ஒலித்தது. ""சரி போங்கள், மீண்டும் இரவு நேரத்தில் இங்கே திரும்ப வராதீர்கள்'' என்றது.

 

இந்த மலைப்பிரதேச இராணுவச் சோதனை நிலையத்தைப் போன்று அனைத்துச் சோதனை நிலையங்களும் அபாயம் கொண்டதல்ல. நேபாளம் நீண்டதொரு அடக்குமுறையின் தளைகள் அறுக்கப்பட்டு மெல்ல பல கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் ஜனநாயக மலர்ச்சோலையின் முதல் மகிழ்ச்சி அனுபவத்தின் அரைவாசியைக் கண்டு கொண்டிருந்தது. 19 நாள் வன்முறையற்ற புரட்சி மன்னனை ஒரு மூலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால் அரண்மனைச் சதிகள், துரோகங்கள் மற்றும் சமரசங்கள் பற்றிய கவலை ரேகைகள் எங்கும் பரவியே இருக்கின்றன.

 

ஒரு இடைக்கால அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஏழு கட்சிக் கூட்டணியுடனான மாவோயிஸ்டுகளின் 12 ஒப்பந்தங்கள் முழுதாக இணைத்துக் கொள்ளப்படுமா? அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் அதிகார மன்றம் ஏற்படுத்தப்படுமா? மன்னன் மற்றும் இராணுவத்தின் கதி என்னவாக இருக்கும்?

 

உண்மை என்னவெனில், இப்போது போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் மாவோயிஸ்டுகளே நேபாளத்தின் பெரும்பான்மையான பகுதிகளைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள். முன்பு மன்னனது கட்டுப்பாட்டில் இருந்தவை கடுமையான இராணுவப் பாதுகாப்பு கொண்டிருந்த காத்மாண்டுவும், சில துணை நகரங்களும் மட்டும்தான். 75 மாவட்டங்களின் 75 சதவீதப் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு நேபாள நிலப்பரப்பு முழுவதும் நிலையான செல்வாக்கையும் பெற்றுள்ளது.

 

மக்களிடம் ஒரு பயமும் அதே நேரத்தில் அவர்களின் தியாக வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, வீரம் ஆகியவற்றின் மீது உயரிய மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக வாழ்கிறார்கள், சாகிறார்கள். அவர்களிடையே வேலை செய்து, வாழ்ந்து, பள்ளிகள், சாலைகள் அமைத்துக் கொடுத்து, அனைவருக்கும் நிலம் விநியோகித்து, உடனடி நீதி வழங்கல் முறையை ஏற்படுத்தி, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல், சமூக அதிகாரத்தை அளித்து, நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைத் தாங்கிப் பிடிக்கும் பழைய கட்டுமானங்களைத் தகர்த்து எறிவதில் மாவோயிஸ்டுகள் முன் நிற்கிறார்கள்.

 

மக்கள் மன்னனை வெறுக்கிறார்கள். மன்னன் நடத்திய அரண்மனைப் படுகொலைகளை மக்கள் மறக்கவில்லை. ""மன்னன் மற்றும் அவனது மகன், இருவருமே அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம். மன்னன் அப்புறப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்'' என்று நேபாள்கஞ்ச் பகுதி மாவோயிசத் தோழர் "அதக்' குறிப்பிட்டார். இவர் பேக் மற்றும் பாட்டியாவின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். உத்தராஞ்சல் எல்லையில் உள்ள மகேந்திர நகரில் (புரட்சிக்குப் பிறகு, இப்போது பீம்நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1960களில் மிகப் பெரிய விவசாய இயக்கத்தை மேற்கொண்டு பின்னர் மன்னனின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட பீம் தத் பாண்டே நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது).

 

கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கிருஷ்ணா தத் குறிப்பிடும் போது ""மாவோயிஸ்டுகள் கண்ணுக்கு நேரே புலப்படாத சக்தி. ஆனால் அவர்கள் எங்கும் நீக்கமற உள்ளனர். அரசாங்கத்தில் கண்டிப்பாக அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இந்த மக்கள் எழுச்சியில் (ஜன அந்தோலன்) மிக முக்கியப் பாத்திரத்தை அவர்கள் வகிக்கிறார்கள்.''

 

நேபாளம் நெடுகிலும் 90களின் நடுப்பகுதியில் ரோல்பாவில் மாவோயிஸ்டுகள் முதன்முதலில் தொடங்கிய போராட்டத்தில் காணப்பட்ட பிரச்சாரச் சுவரெழுத்துக்கள் சிவப்பு வண்ணத்தில் எங்கும் மிளிர்கின்றன: ""கொலைகாரக் கிரிமினல் சர்வாதிகாரி மன்னனை அழித்தொழிப்போம். ஒரு ஜனநாயக மக்கள் குடியரசை நிறுவுவோம்.'' அவர்களின் நடவடிக்கைகள் மிகத் தெளிவாக எங்கும் உள்ளன. கடந்த ஏப்ரலில், நகரங்களில் ஆயிரக்கணக்கான கிராம மக்களை அணிதிரட்டியவர்கள் மாவோயிஸ்டுகளே.

 

""வன்முறை நிகழாத அந்த மக்கள் எழுச்சியில் 3 முக்கிய சக்திகள் இருந்தனர் ஏழு கட்சிக் கூட்டணி, மக்கள், மற்றும் மாவோயிஸ்டுகள். சந்தேகமேயில்லாமல், மாவோயிஸ்டுகளே மிகப் பெரிய சக்தி'', என்கிறார் மனித உரிமைகள் வழக்குரைஞர், கோபால் சிவக்குட்டி சிந்தன். மேலும் அவர், "புதிய இடைக்கால அரசாங்கத்தில் மாவோயிஸ்டுகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 1990இன் அரசமைப்புச் சட்டம் தூக்கியெறியப்பட்டு, ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மன்னனும், அவன் மகனும் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்லா அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, சட்ட அதிகார மன்றத்தின் ஆட்சி செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், நேபாளம் நிச்சயமாக இரண்டாவது புரட்சிக்குத் தயாராகும்'' என்று விளக்குகிறார்.

 

நேபாளம் ஏற்கெனவே இரண்டாவது புரட்சி ஒன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

 

பீம்நகரில், ஞானேந்திரா மார்க், ஜனமார்க் என பெயர் மாற்றப்பட்டுள்ளது; மன்னர் மாட்சிமையைப் பறைசாற்றிய பெயர்ப் பலகைகள் நேபாளம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன் காத்மாண்டு பாராளுமன்றத்தில் நேபாள மக்கள் குடியரசின் சின்னமான அரிவாள் சுத்தியல் காட்சி தருகிறது; மன்னன் மற்றும் அவனது மூதாதையர்களின் சிலைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன் புதிய பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன் கிரிமினல்கள் மற்றும் மக்களை ஒடுக்கிய ஒடுக்குமுறையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் மிகவும் உன்னிப்பாக ஏழு கட்சிக் கூட்டணியைக் கண்காணித்து வருகிறார்கள்.

 

வன்முறையற்ற இந்த இயக்கம் 21 உயிர் இழப்புக்களைச் சந்தித்தது. அவற்றில் ஒன்று குகுகயின் முன்னணியாளர் துர்ஜா குமார் ராய் சுட்டுக் கொல்லப்பட்டு, காத்மாண்டுவில் வெட்டவெளியில் தொங்க விடப்பட்டு இருந்தார். ஊனமாக்கப்பட்டவர்கள் பலர். பார்டியா மாவட்டத்தில், குலேரியா கிராமத்தின் விவசாயி யம்லால், காலில் சுடப்பட்டுள்ளார். ""அவர்கள் துரோகம் இழைத்தால் மறுபடி தெருவில் இறங்கிப் போராடுவேன்'' என்கிறார் அவர். அப்போது சுட்டுக் கொல்லப்படும் நிலைமை வந்தால் என்ன செய்வார்? ""நாட்டிற்காக நான் சாவேன். எங்களுக்கு ஒரு குடியரசு வேண்டும். மன்னன் இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்கிறார் தீர்க்கமாக.

 

கஜூரா கிராமத்தின் ஏழை தலித் மக்கள் காலனியில், ஷாகித் சேது பிக்காவின் பலவீனமான 3 குழந்தைகள் எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டே ஜனநாயகத்தை வாழ்த்தி சில முழக்கங்களை எழுப்பியபடி இருந்தன. ""உங்கள் அம்மா எங்கே போயிருக்கிறார்கள்?'' என்று நான் கேட்டேன். ""மன்னன் எங்கள் அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டான்,'' என்று பதிலளித்தான் ஆசிஷ். இருபத்தாறே வயதான சேது 10 கி.மீ. தூரம் நேபாள் கஞ்சுக்குப் பயணம் செய்து இந்தப் போராட்டத்தில் பங்கு எடுத்து உள்ளனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் சுஷ்மா என்ற பெண், ""அப்போது ஒரு லட்சம் மக்கள் நேபாளத் தெருக்களில் நின்றிருந்தார்கள். கண்ணீர்ப் புகைகுண்டு ஒன்று ஆசிஷ் தாய் மீது விழுந்ததால் மூச்சு திணறி இறந்து போனாள்'' என்று சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

 

அந்த நிலப்பரப்பு முழுவதும் இதுபோன்ற வீரமும், தியாகமும் நிறைந்த நம்பமுடியாத பல கதைகள் உள்ளன. சேது இறந்த உடனே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, போலீசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு நேபாள் கஞ்சில் உள்ள ஞானேந்திரா சவுக்கில் அமைந்திருக்கும் ஞானேந்திரா நினைவிடத்தைத் தகர்த்தெறிந்தனர். இப்போது, தகர்க்கப்பட்ட அந்த நினைவிடத்தில் ஒரு புதிய பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது ""ஷாகித் (தியாகி) சேது பிகா சவுக்.''

 

மாவோயிஸ்டுகள் மீதான பயங்கரவாதிகள் முத்திரை நீக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளிப்படையான நடவடிக்கைகளில் உள்ளனர். ஆயினும், ஆபத்தை ஊகித்துணரும் வகையில் எச்சரிக்கை நிலையிலே உள்ளனர். அவர்கள் இந்த இராணுவத்தையும் அரசாங்கத்தையும் நம்பவில்லை. எனில், இப்படி வெளிப்படையாக இயங்குகின்ற நிலையை எப்படி அவர்கள் உணர்கிறார்கள்? இதற்கு தோழர் ரமில்ராம், (வயது 25) விடையளிக்கிறார்: ""எங்களைக் கொல்ல நடக்கும் சதிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்கும். மக்களின் உறுதியான ஆதரவு எமக்கு இருப்பதால், அவர்களே எங்களுக்குப் பாதுகாப்பு. எனவே சண்டை நிறுத்தத்தை அறிவித்ததனால் மட்டுமல்ல, வேறுவழிகளிலும் எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.''

 

இது எப்போதும் சாத்தியமில்லை. தோழர் அதக் கூறும் போது 12,000 மக்கள் கடந்த 10 வருடங்களில் போலீசு மற்றும் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5,000 பேர் மாவோயிஸ்டுகள், 7,000 பேர் சராசரி மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் அனுதாபிகள். இதுபோக 2,000 மாவோயிஸ்டுகள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். 1,400 தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் "காணாமல்' போய் உள்ளனர். அதாவது கொல்லப்பட்டு விட்டனர். போக்ராவுக்கு அருகே கஸ்கி மாவட்டத்தின் துல்கவுடா கிராமத்தில் மளிகைக் கடைக்காரரான ஆர்த்தி ஷர்மாவின் கணவன், தங்கா ஷர்மா "காணாமல் போனவர்'களில் ஒருவர். ""என் கணவர் ஒரு மாவோயிஸ்ட் தான்'' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.

 

சித்திரவதை, கடத்தல், கற்பழிப்புகள் மற்றும் கொலைகள் குறித்த சோகக் கதைகள் நேபாள மக்களின் உண்மைக் கதைகள். ஆனால், மக்கள் காட்டும் உறுதிப்பாடு வியப்புக்குரியது. எளிமையும், அன்பும், உணர்ச்சி வேகமும் கொண்ட நேபாள மக்கள் அனைவரிடமும் உயரிய விழிப்புணர்ச்சி நிலையும், அரசியல் தெளிவும், உறுதியும் இருப்பதை நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம் காணலாம். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை, வறுமை மற்றும் ஒடுக்குமுறைகளால் நொறுக்கப்பட்ட மக்கள் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியைப் பெற்றுத் தரும் ஒரு சுதந்திரக் குடியரசுக்காகச் சாகவும் தயாராக இருக்கிறார்கள்.

 

போக்ராவின் கஸ்கி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான தோழர் சுராஜ், தனது இளமைப் பருவத்திலிருந்தே தலைமறைவாக இருந்தவர். பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் கலந்து கொண்டவர். சமீபத்திய பெனியில் நடந்த தாக்குதலில் 64 தோழர்களை இழக்க நேரிட்டதைக் குறிப்பிடுகிறார். ஹெலிகாப்டர்களில் எங்கள் மீது குண்டு பொழிந்ததும், நாங்கள் அவர்களைத் திருப்பிச் சுட்டதும் ஒரு சாகச அனுபவம். இறந்த தோழர்களின் நினைவுகள் ஏற்படுத்திய வலி பலநாட்களுக்கு என்னை வருத்தியபடியே இருந்தது''. ""எதுவரினும் எங்கள் கடமையைத் தொடர்ந்து தானே ஆக வேண்டும்''.

 

இவரைப் போன்ற இளம் மாவோயிஸ்டுகள் மற்றும் இந்தப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அல்லாத பிரிவினர் அனைவரும் மிகத் தெளிவான தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகமும், அரசியல்கூர்மையும் கொண்டவர்களாக உள்ளனர். ""இப்போது ஒரு அடி முன் நகர்ந்துள்ளோம். அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அதன் உச்சம், சோசலிசத்துக்கும் மேலானதாக இருக்கும்'' என்கிறார், சுராஜ்.

 

அவர் தலைமறைவுக் காலத்தில் காட்டில் வாழ்ந்திருக்கிறார். 8 நாட்கள் வரை பசியுடன் இருந்துள்ளார். இராணுவத்தை பலமுறை எதிர் கொண்டிருக்கிறார். ""அப்போது, அது எனக்குச் சிரமமாகத் தோன்றியது. அனைத்தையும் இப்போது யோசிக்கும் போது சுவாரசியமான அனுபவமாக நினைவுகளில் எழுகிறது'' என்று கூறி, புன்னகைக்கிறார். சுராஜின் 21 வயதான மனைவி நிஷாலும் ஒரு மாவோயிஸ்ட் தோழர். அவருடன் மேலும் 4 பெண் தோழர்களைக் கைது செய்த இராணுவம், சித்திரவதைக்குப் பின்னர் கொன்றொழித்தது. சுராஜ் இன்னொரு திருமணத்தை செய்து கொள்வாரா? ஒரு புன்னகையில் தன் வலியை மறைக்கிறார். ""எங்கள் அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் மணம் முடித்து இருக்கிறோம்... ஆனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள நிலையில், புரட்சியை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டாமா?'' என்று எளிய பதிலளிக்கிறார்.

 

அடுத்தநாள் காலையில், கஸ்கிகரகா கொடுஞ்சிறையில் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவந்திகா வெளிப்படுத்திய துயரப் புன்னகை, சுராஜின் மனச்சுமையை ஒத்திருந்தது. 25 வயதிலேயே 3 முறை கைதாகியிருக்கும் அவந்திகாவின் சிறை வாழ்க்கை 6 வருடங்கள். அவருடன் சிறைப்படுத்தப்பட்டிருந்த இளம் பெண் தோழர்கள் ஆஷா, ஷர்மிளா மற்றும் லீலா ஆகியோர் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இருபது வயதுப் பிராயத்தில் உள்ள 14 பெண்கள் மற்றும் 73 ஆண் மாவோயிஸ்டு தோழர்களும் கோஷங்களை எழுப்பியவாறு சட்டமியற்றும் அதிகாரமன்றம் வேண்டி உணவு உட்கொள்ள மறுத்து வருகின்றனர்.

 

பெண்கள், தாம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து, அவர்கள் தலைகளை தண்ணீர்க் குட்டைகளில் வலியத் திணித்து மூழ்கச் செய்தது, உள் பாதங்களில் திரும்ப, திரும்ப அடித்துத் துன்புறுத்தியது, தூக்கமற்ற இரவுகள் முழுக்க விசாரணை செய்தது என ஏகப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அவர்கள் அனைத்தையும் சொல்லவில்லை. தம்மீது ஏவப்பட்ட இரத்தம் தோய்ந்த வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ள விரும்பவில்லை. ""எதற்காக இத்தனைப் போராட்டங்களும்?'' நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். ""நேபாளத்திற்கு வேண்டிய சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்'' என்றனர். ""உங்கள் மாவோயிசத்தின் இலக்கு என்ன?'' ""நேபாளத்திலும் உலகத்திலும் உலகப் புரட்சி கொண்டு வருவதே'' என்றனர்.

எந்த இன்னலையும் தாங்கிக் கொண்டு போராட உறுதி ஏற்ற இளம் ஆண்களும், பெண்களும் மின்னும் நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்புப் பட்டைகளை தமது தலைகளைச் சுற்றிக் கட்டியவாறு, புரட்சியின் தீர்மானமான சக்தியாக நேபாளம் முழுக்க உள்ளனர். இவர்கள் போலி மோதல் படுகொலையில் கொல்லப்படாத பாக்கியசாலிகள் என்று மட்டும் எனக்குத் தோன்றியது. அஞ்சாத நெஞ்சுறுதி, அரசியல் கூர்மை, தமது அரசியல் நோக்கத்திற்குக் காட்டும் விசுவாசம் அனைத்தையும் வெளிப்படுத்தும் அவர்கள் புன்னகை, மலையிலிருந்து வெளிக்காட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்தை ஒத்திருக்கிறது.

 

நான் விடைபெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்கிய போது என்னைப் பற்றிய கைகளிலிருந்து ஒரு அரவணைப்பும், வீர உணர்வும் என்னுள் படர்வதை உணர்ந்தேன். அநீதிக்கு எதிரான கோபமும், தார்மீக ஆவேசமும் அதன் உக்கிர உணர்ச்சியுடன் ஒன்றாய் மின்னுவதை அவர்கள் கண்களில் பார்த்தேன். தீராத புரட்சி நம்பிக்கை அது ஏப்ரல் புரட்சி நம்பிக்கை போன்றது. ""தோழர்களே உங்களுக்குச் செவ்வணக்கம்'' என்று சொல்லிக் கொண்டு நான் திரும்பி விட்டேன்.

 

பழைமை எண்ணங்கொண்ட, சீரழிந்த, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒருபுறம்; கனவுகளைத் தேக்கி, தமது உயிரைப் பணயம் வைத்து, அவற்றை நிறைவேற்ற துடி துடிப்போடுக் காத்திருக்கும் இளம் லட்சியவாதிகள் மறுபுறம் என நேபாளத்தை இப்போது பார்க்கிறேன்.

 

இளம் தலைமுறையினர் சுதந்திரத்தையும், நீதியையும் இந்த முதல் புரட்சியின் வழியே பெறவில்லையென்றால், அவர்கள் இரண்டாவது மற்றும் இறுதிப் புரட்சியின் வழியே அதை நிச்சயம் நடத்திக் காட்டுவார்கள்.

 

ஆம் அது இரண்டாம் புரட்சியாக இருக்கும்!

 

ஆங்கில மூலம்: அமித் சென்குப்தா, நன்றி: 3.6.2006 தெஹல்கா வார இதழ்.

சுருக்கப்பட்ட தமிழாக்கம்: இளந்தீபன்.