மாணவர்கள் தம் உரிமைக்காக போராடுவது தவறா?

பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை பலமுகம் கொண்டு தொடர்ந்து ஒடுக்கும் அரசு, தனது ஜனநாயகமும் தீர்வும் பன்னாட்டு மூலதனத்துக்கே என்பதை உலகறியப் பறைசாற்றி வருகின்றது.

அதைப் பாதுகாக்க முனையும் அரசு, இன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டாரவைக் கைது செய்துள்ளது. யுத்தத்தின் பின் அரசின் ஜனநாயக விரோத பாசிச செயற்பாடு, இன்று இலங்கையின் முழு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. மாணவர்களின் போராடும் உரிமையைப் பறிப்பதன் மூலம், முழுச் சமூகத்தையும் அச்சுறுத்தி ஒடுக்கி விட முனைகின்றது.

கல்வியை தனியார் மயமாக்குவது தொடங்கி, மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட சந்தை மயமாக்குவதன் மூலம், நாட்டை அன்னிய மூலதனத்துக்கு இன்று தரைவார்க்க முனைகின்றனது.

அரசு என்பது அன்னிய மூலதனத்தைப் பாதுகாக்கும் ஒடுக்குமுறைக் கருவிதான் என்பதைத் தாண்டி, இதுவரை பாசாங்கு செய்து வந்த தனது மனித முகத்தைக் கூட காட்டுவது கிடையாது.

யுத்தத்தின் முன் தமிழனை மட்டும் ஒடுக்குவது தான் அரசு என்ற இனவேசம், யுத்தத்தின் பின் இன்று முழு மக்கள் முன் களைந்து போயுள்ளது.

சஞ்ஜீவ பண்டாரவின் கைது இதைத் தான் மறுபடியும் நிறுவியுள்ளது.

சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்!

கல்வியை தனியார் மயமாக்குவதை உடன் நிறுத்து!!

ஆசிரியர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று!!!

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

23.09.2012