அண்மையில் பாரிஸ் வந்திருந்த சரிநிகர், மற்றும் மேர்ஐ நிறுவனத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர் வெளிப்படுத்திய சில கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது.

சரிநிகர் பத்திரிகையினுள் உள்ள முரண்பாடுகள் பற்றி பேசிய அவர் , சரிநிகரில் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் மூவர் பெயர் குறிப்பிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டார்.

அம்மூவரையும் வெளியேற்ற மேர்ஐ நிறுவன நிர்வாகத்தில் இருந்த ஒருவர் தடுத்து வந்ததாகவும் , அவர் தற்போது இறந்துவிட்டதால் அம்மூவரையும் வெளியேற்ற வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்.

இம் மூவரையும் வெளியேற்றத் தடையாக உள்ள மிகப் பெரிய பிரச்சனை, சிங்கள பெரும் தேசிய இனவாதத்துக்கான சார்பு எனப் பார்க்கப்படும் என்ற பயம் தான் இவர்கள் முன் பிரச்சனையாக உள்ளது. இதை வெட்கம் இன்றி கூறிக் கொண்ட அவர்,  இதைத் தடுக்க ஒட்டுமொத்தமாகவே சரிநிகரை  ஏதாவது ஒரு காரணம் கூறி நிறுத்திவிடுவது நல்லது என நம்புகின்றார்.

அதாவது கொழும்பும், மற்றும் தமிழ் பிரதேசங்களில் , சரிநிகரின் அரசியல் வங்குரோத்துக்கு அப்பால், இன்று உள்ள நிலையில், அதன்  ஆய்வுத்தளங்கள், மனிதர்களின் சிந்தனைத் தளத்தை அகலமாக்குகின்ற அபாயத்தை சிங்களப்பேரினவாதம் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. தேசியம் பற்றி புலிகள் இராணுவவாதமாக சீரழிந்துள்ள நிலையில் சரிநிகர் மட்டும் தான் சிறுசஞ்சிகைக்கு வெளியில், தேசியத்தின் அரசியல் பிரச்சனையைப் பேசுவதும், அதனால் போராட்டம் அரசியலால் ஆயுதபாணியாவதால், அதை தடுக்க சிங்கள பேரினவாதம் முயல்கின்றது.

சரிநிகர் தேசியப் போராட்டம் தொடர்பான சரியான அரசியல் வழியைக் கொடுக்காத நிலையிலும், அது முன்வைக்கும் நியாயமான தேசிய வாதங்கள் பேரினவாதத்துக்கு தலையிடியாக உள்ளதால் , அதை முன்வைப்பவர்களை வெளியேற்றுவது அல்லது நிறுத்திவிட தயாராக அதன் நிர்வாகிகள், ஆசிரியரின் ஒருபகுதி தீவிரமாக முயன்று, அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பா வந்த இந்தப் பேரினவாதப் பிரதிநிதி தனக்கென்று ஒரு அரசியல் இல்லை எனக் கூறியபடி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் எடுபிடியான இவர் , சந்திரிகா அரசு பற்றி வெளிப்படுத்திய நியாயங்களை ஆராய்வோம்.

சந்திரிக்கா அம்மையாரும், பீரிஷ்சும் தமிழ் மக்களுக்கு தீர்வை நிச்சயமாக தருவார்கள் என சாத்தியம் பண்ணிய இந்தப் பேரினவாதி, சந்திரிகா தொடர்ந்தும் ஐனாதிபதியாக இருக்க விரும்புவாதால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்து, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற முனைகிறார். இதற்காக தீர்வை முன்வைப்பார் நம்புங்கள் என்கிறார்.

அதுபோல் பீரிஷ் தான் உலகில் ஒரு சிறந்த ராஐதந்திரி என நிறுவ விரும்புவதால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க விரும்புகிறார் என நம்புங்கள் துரோகம் இழைக்க வாருங்கள் என்கிறார். இருவரும் நோபல் பரிசு பெற முயல்வதால் தீர்வு தருவார்கள் என்று நாளை கூறினாலும் கூறுவார்கள்.

எப்படி ஏமாற்ற முடியும் எப்படி நம்ப வைக்க முடியும் என்ற பேரினவாத சிங்கள சதிராட்டத்தின் வெளிப்பாடு தான் இந்த பேரினவாத வெண்தாமரை கண்டுபிடிப்புக்கள்.

சமாதானம் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புக்களை தமக்கு சாதகமாக காணும் இந்த நரித்தனமான பேரினவாத சக்திகள், தமிழ் மக்களின் அடிப்படை ஐனநாயக உரிமைகளை குழிதோண்டிப் புதைக்க நிற்கும் சதியாளர்களாக பவனி வருகின்றனர்.

மனித உரிமை பற்றி அரசியல் போதனை கேட்க , பேச , விவாதிக்க ஐரோப்பிய ஒடுக்குமுறையாளர்களிடம் வரும் இவர்கள் , மனித உரிமையை யாரும் சொல்லித்தான் தெரியும் நிலையில் , இன்று ஐரோப்பிய விஐயங்களை ஏகாதிபத்திய அழைப்புக்களில் செய்கின்றனர்.

இலங்கை மக்களினது , தமிழ் பேசும் மக்களினதும் ஓடுக்குமுறை , அதன் துன்பங்கள் , துயரங்கள் , ஒரு இனத்தின் ஐனநாயக உரிமை என்பன வெட்டவெளிச்சமானது. இதை நாம் தெரிந்து கொள்ள , ஐரோப்பிய எஐமானர்களின் மனித உரிமை கல்விக் கூடங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.

இப்படிக் கேட்டுத் தெரியும் இந்த மாதிரியான பேரினவாத சிங்கள அடிவருடிகள் , எப்படி தமிழ் மக்களை ஏமாற்றி மனித உரிமை பேச முடியும் என்பதைத்தான், ஏகாதிபத்திய உரிமை ஆய்வுகூடங்களில் கற்றுக் கொள்கின்றனர்.

இவர்களை இனம் கண்டு கொள்வதும் , இவர்களை வேரறுப்பதும் இன்று தேவையான அவசரமான பணியாக உள்ளது.