கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

யாருடைய தலையீடும் இல்லாத, நிர்வாகத்திறன் மிக்க ஆட்சியை ஜெயலலிதா தருவார் என்று பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் கடந்த ஆறு மாதங்களுக்குள்  உடைந்து நொறுங்கிவிட்டது. ஜெயாவின் ஆட்சி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல் சீர்கேடைந்துள்ளது என இந்தியா டுடே போன்ற ஊடகங்களே குறிப்பிடுகின்றன. ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை மூடிமறைத்தும், கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடியும் நேற்றுவரை பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பனப் பத்திரிகைகள், இப்போது  சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதும்,  ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின்  தலையீடு காரணமாகவே ஊழல்கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள் பெருகியதாகவும், ஜெயாவுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும், ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை உத்தமராகக் காட்டி ஒளிவட்டம் போடுகின்றன. சசிகலா வெளியேற்றப்பட்டதை மாபெரும் புரட்சி போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், இனி தலையீடற்ற, ஊழலற்ற நிர்வாகம் தொடங்கப் போவதாகவும், ஜெயாவின் அற்புதமான ஆட்சியில் இருந்த ஒரேயொரு குறையும் அகற்றப்பட்டுவிட்டது போலவும் சித்தரிக்கின்றன. ஜெயலலிதா மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டதாகவும், தொண்டர்களிடம் நிலவி வந்த அதிருப்தி நீங்கிவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன.  அன்றைய ரஷ்யப் பேரரசி ஜாரினிக்கு ஒரு ரஸ்புடீன் இருந்ததைப் போல,  ஜெயா வுடன் ஒட்டியிருந்த மன்னா ர் குடி கும்பல் இலஞ்ச  ஊழல், நியமனங்கள், வெளியேற்றங்கள் அனைத்தையும் ஜெயாவுக்குத் தெரியாமல் செய்ததாகச் சித்தரிக்கும் பார்ப்பன  ஊடகங்கள், ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் அம்மா எதுவும் தெரியாத களிமண் என்பதை எதிர்மறையில் ஒப்புக் கொள்கின்றன.  இவர்கள் கூறும் களவாணிக் கும்பலால் கடந்த 20 ஆண்டுகளாக "ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை'யை வேறென்னவென்று அழைப்பது?

சொந்த சிந்தனை முறையில் ஜெயா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. அந்த வகையில் அவரது தலைமையிலான அ.தி.மு.க. என்ற பொறுக்கி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதும் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்தது. எனினும், ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார். தொடக்கம் முதலே ஜெயாவின் ஊழல்கொள்ளையை மறைக்க இந்தக் கும்பல் மீது பழி சுமத்திப் பார்ப்பன ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. கட்சியிலுள்ள எதிர்கோஷ்டிகளும் சசிகலா கும்பலின் தலையீட்டினால்தான் அமைச்சர்களே கூட அம்மாவை நெருங்க முடியாமல்,  கட்சிக்கும் ஆட்சிக்கும்  கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருத்தை உருவாக்கின.

ஜெயாவையும் அவரது கட்சியையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் அரசியல் விமர்சகராகக்  காட்டிக் கொள்ளும்  துக்ளக் சோ, இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட எவ்வித அதிகார மையமும் செயல்படாமல் முடக்கும் தீர்மானகரமான நடவடிக்கை என்று சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆலோசகரான துக்ளக் சோவின் உறவினர்களும், பார்ப்பனக் கூட்டமும் போயஸ் தோட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கிசுகிசு ஏடுகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. குஜராத்தின் மோடி பாணியில், "ஊழலற்ற நல்லாட்சி', "சிறந்த அரசாளுமை' முதலான முழக்கங்களை முன்வைத்து 2014இல் நடைபெறவுள்ள நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்து கார்ப்பரேட் சேவையில் புதிய அத்தியாயம் படைக்கவும், ஏற்கெனவே ஊழல்கொள்ளைக் கூட்டமாக அம்பலப்பட்டுப் போயுள்ள சசிகலா கும்பலின் மீது பழிபோட்டு தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ளவும் தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

உலகவங்கி எடுபிடிகளான மன்மோகன் சிங் பிரதமராகவும், அலுவா லியா திட்டக் கமிசன் துணைத்தலைவராகவும், தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமித் மித்ரா மே.வங்க நிதியமைச்சராகவும் இருப்பதைப் போல, மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கார்ப்பரேட்  சேவைக் கேற்ற வகையில் அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும், நிபுணர்களும், வல்லுநர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும்; வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற பிரச்சாரத்துடன், நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உலக வங்கித் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இயங்கிய தமது விசுவாசக் கும்பல்களை வைத்துக் கொண்டு இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற இயலாது என்பதால், அந்த இடத்தில் கார்ப்பரேட் சேவைக்கேற்ற ஆலோசகர்களை ஆளும் கட்சிகள் அமர்த்தி வருகின்றன.

மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும் தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை  ஜனநாயக உரிமைகளை நசுக்கி,  கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மா நிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி.