நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த பு.ஜ.தொ.மு.வின் மூத்த தோழரும், மதுரா கோட்ஸ் ஆலையின் முன்னாள் தொழிலாளியும், புதிய ஜனநாயகம் இதழின் நீண்டகால முகவருமான தோழர் ஏ.எஸ். முத்து, திடீர் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

தோழர் ஏ.எஸ். முத்துவின் தந்தையாரான திரு. ஆண்டி அவர்கள், சி.பி.எம். கட்சியின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டவர். தந்தையின் வழியில் தோழர் முத்துவும் சி.பி.எம். கட்சியில் ஊக்கமாகச் செயல்பட்டு வந்தார். பின்னர் 1985இல் நக்சல்பாரி புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய அவர், புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உற்சாகமாகச் செயல்பட்டார். அவரது தந்தையார் சி.பி.எம். கட்சிக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தபோது, தோழர் முத்து தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினார். இதனால்முரண்பாடு முற்றி, அவரது தந்தையார் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய போதிலும், பல்வேறு இழப்புகளும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்ட போதிலும், இரத்தப் பாசத்தை விட மார்க்சியலெனினிய புரட்சிகர இலட்சியத்தின் மீதான பற்றும் பாசமும்தான் உயர்வானது என்று தனது இறுதிக்காலம்வரை புரட்சிகர இயக்கத்தில் உணர்வோடும் பற்றுறுதியோடும் அவர் செயல்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் இதழின் முன்னுதாரணமிக்க முகவராகச் செயல்பட்ட தோழரது மரணம் புதிய ஜனநாயகம் இதழுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் முத்துவின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவரது இலட்சியக் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்!

பு.ஜ. ஆசிரியர் குழு