உண்மையை மூடிமறைக்க, சர்ச்சைகளை உருவாக்கி காலத்தை நீடிக்க, அசல் வீடியோவின் பெயரில் போலி வீடியோ ஒன்றை அரசு தயாரித்துள்ளது. மொழிமாற்றம் மூலம் புலிகள் செய்ததாக புனைந்து காட்ட முனைகின்றது. இதனால் தான் முழுமையான வீடியோவை வெட்டி ஒரு பகுதியைக் காட்டுகின்றது. முழுமையான வீடியோ பெண்களை நிர்வாணமாக்கி ரசிக்கின்ற காட்சிகளை உள்ளடக்கியதுடன், அந்தப் பெண் உறுப்பினர் யார் என்று அடையாளம் காணவும் முடிகின்றது.

 

 

 

இந்த போர்க்குற்ற ஆவணத்தின் மேலான சிதைவை இதை ஒளிபரப்பியவர்களும், புலிகளும் செய்தனர். முதலில் காட்சிகளின் ஒருபகுதியை மட்டும் சனல் 4 ஒளிபரப்பியது. பின்னால் சிறிது காலத்தின் பின் அதன் நீட்சியும் வெளியாகியது. சனல் 4 இறுதி வெளியீடு மேலும் ஒரு பகுதியை வெளியிட்டது. முழுமையாக அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. இதைத்தான் அரசு தனக்கு சார்பாக பயன்படுத்தியது.

இங்கு வெட்டுகளும் துண்டுகளுமாக, குறுகிய அரசியல் நலனுடன் காட்சிகள் சிதைக்கப்பட்டன. புலிகள் அந்தக் காட்சிகளை தமது வக்கிரத்துக்கு ஏற்ப மேலும் சிதைத்தனர். இதைத்தான் அரசு தனக்கு ஏற்ப மீளப் பயன்படுத்தியுள்ளது.

தனது தமிழ் பேசும் கொலைகார இராணுவத்தின் கொச்சைத் தமிழ் மூலம், பின்னணியில் குரல் கொடுத்துள்ளது. இதை புலிகள் செய்ததாக புளுகுகின்றது. புலிகள் செய்யமாட்டார்கள் என்பதல்ல. இதை புலிகள் செய்யவில்லை. புலிகள் பெயரால் தயாரித்த போலி வீடியோவில், முழுமையான வீடியோவில் காட்சிகளையும், பின்னணி மொழியையும் மாற்றியது மட்டுமல்ல துப்பாக்கி சுடும் சத்தங்களையும் கூட நீக்கியுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தனியார் தொலைக்காட்சி ஓன்றுக்கு கிடைத்ததாகக் கூறும் அரசு, இதன் பின்னணி மொழி உள்ளிட்ட பலதரப்பட்ட கேள்விகளை நியாயப்படுத்தி, தனக்கு இந்த மோசடியுடன் உள்ள தொடர்பை மூடிமறைக்க முடியாது முழிக்கின்றது.

ஆக சிக்கல்களுக்குள் அரசு மேலும் தன்னை ஆழப் புதைக்கின்றது. எது உண்மை எது பொய் என்ற விசாரணைக்குள் தன்னை குறுக்குகின்றது. தன்ன மூடிமறைக்க மேலும் மேலும் கிரிமினல் நடவடிக்கையில் வலிந்து ஈடுபடுகின்றது. தானாக வலிந்து சிக்கத் தொடங்கியுள்ளது.

1. பார்க்க அரசு வெளியிட்ட போலியான வெட்டிச் சுருக்கிய காட்சியை.

2. பார்க்க முழுமையான காட்சி (வெளியானதில் ஒரு பகுதி இல்லாத காட்சி)

 

 

பி.இரயாகரன்

03.07.2011