பிரிட்டிஷ் அரசு உயர்கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளதையும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 40% அளவுக்குக் குறைத்துள்ளதையும், ஏறத்தாழ 70 சதவீத ஏழை மாணவர்கள் பயனடைந்து வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டதையும் எதிர்த்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரிட்டனில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ""முதலாளிகளின் நெருக்கடிகளுக்கு நாங்கள் பணம் செலுத்த மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆதரித்ததோடு, அவற்றை முறைப்படுத்தி நடத்தவும் வழிகாட்டினர். லண்டன் மட்டுமின்றி பிரிட்டனின் அனத்து பெருநகரங்களிலும் இப்போராட்டம் தீயாகப் பரவியது. பிரிட்டிஷ் மாணவர் போராட்டத்தை ஆதரித்து பிரெஞ்சு மாணவர்கள் பாரீஸ் நகரிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராடினர். கிரேக்க நாட்டின் மாணவர்கள் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐரோப்பிய கண்டத்தில், நாடுகளின் எல்லைகளைக் கடந்து முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் பரவி வருகிறது.