இதையெல்லாம் யார் கூறுகின்றனர். இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக உள்ளவர்கள் இதைக் கூறுகின்றனர். இதுதானாம் மக்களின் விடுதலைக்கான ஒரு பாதை என்கின்றனர். மக்களுக்கு எதிரான தமது துரோகத்தை பறைசாற்றும் இவர்கள், 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு" இந்த 'எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்கின்றனர்,

இந்த எலும்பு சூப்பிகள். செழியன் மீதான தனிமனித தாக்குதலை மையப்படுத்தி நடத்தும் தமது வாதத்தில் தான், இவர்கள் இதைக் கூறுகின்றனர். எலும்பு பறிபோய் விடக் கூடாது என்ற அற்பத்தனம், இதை மக்களின் விடுதலைக்குரியது என்கின்றது.

 

பேரினவாதம் தமிழரை அழிக்க வைக்கும் இராணுவத் தீவுக்கு ஏற்ப, அரசியல் தீர்வு என்ற எலும்பைத் தான் போட்டனர். இப்படி நாய்களை வேட்டைநாயாக்கி, புலி வேட்டைக்கு தயார்ப்படுத்தும் பேரினவாத சதி இது. தமிழனை தமிழனைக் கொண்டு அழிக்கும் மற்றொரு சின்ன, அனால் சதித்தனமான முயற்சி.

 

எலும்பைக் கண்டது தான் தாமதம், பாய்ந்த வீழ்ந்து அதற்காகவே குலைக்கிறார்கள். இது நிரந்தர (தமிழீனத்தின் நிரந்திரமான அழிவக்கான பாதை) தீர்வுக்கான பாதை என்கின்றனர். எறியப்பட்ட இந்த எலும்பு தொடர்பாக செழியன் தெரிவித்த கருத்து, எலும்புக்காக குலைப்பவர்கள் மேல் கல்லெறிவதாக அவர்களுக்குப்பட்டது. புலிவேட்டைக்கு புறப்பட்டவர்கள், போகும் வழியில் செழியனை கடித்துக் குதறுவதைத் தவிர வேறு வழியில்லை. செழியனுக்கு எதிராக, புலியெதிர்ப்பு இணையமான தேனீயில், பொ.சந்திரகுமார் என்ற எலும்பு பொறுக்கி, பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் என்கின்றார்.

 

அவரே கூறுகின்றார் 'அல்லல்படும் எனது மக்களுக்கு எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியுமானால் அதையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைவேன்." என்று. எலும்பு உங்களுக்கானதே ஒழிய, மக்களுக்கல்ல. மக்களின் பெயரில் எலும்பைப் பெறுவது தான், இவர்களின் அரசியல் எல்லை.

 

சரி மக்கள் எதைத்தான், எலும்பாக பெறுவார்கள் என்பதையாவது சொல்லுங்கள். சிங்கள பேரினவாத அரசான பெரும் தேசியம், எதைத்தான் சிங்கள மக்களுக்கு கொடுத்துள்ளது. அதையாவது சொல்லுங்கள், அதாவது தமிழ் மக்களுக்கு கிடைக்குமா என்று பார்ப்போம். மாறாக பேரினவாத அரசு, ஏகாதிபத்தியத்துக்காகவே உழைக்கின்றது. நீங்கள் கூறுவது போல் மக்களாவது, மண்ணாங்கட்டியாவது. இப்படி இந்த பேரினவாத அரசு, தன்னுடைய மக்களுக்கு எதையும் கொடுத்தது கிடையாது. இப்படி இருக்க, எதைத்தான் புதிதாக தமிழ் மக்களுக்கு கொடுத்துவிடும்.

 

முதலில் அதைச் சொல்லுங்கள். நீங்கள் எலும்பை நக்கலாம், தமிழ் மக்களுக்கு நக்க எதைத்தான் கொடுப்பார்கள், அதையாவது சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சி அடைவது உங்களுக்கான எலும்பைக் கண்டுதான். உங்களிடம் எந்த மக்கள் நல அரசியலும் கிடையவே கிடையாது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு கூலிக்கு மாரடிக்கும் ஒரு கும்பல். இவர்கள் மக்கள் பற்றி பேசுவதே நகைச்சுவை.

 

இன்று டக்கிளஸ் ஜயா நக்குவது போல், அவருடன் சேர்ந்து நக்கித் தின்னும் கூட்டத்தில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். மக்கள் முழுக்க அவ:வாறு இருக்க முடியுமா! இதை நக்குபவன் செய்யலாமே ஒழிய, வேறு எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரமுடியாது. புலிகள் எப்படி தமிழீழத்தில் எதையும் தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாதோ, அதைப் போல் தான் இந்த எலும்பு நக்கிகளும், அவர்கள் அரசியலும்.

 

'எனது மக்களை உண்மையாக நேசிப்பவன் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வு வரும் போது அதை எதிர்ப்பவர்களை, குழப்பியவர்களை நிச்சயமாக விமர்சித்துக் கொண்டேயிருப்பேன்." ஜயோ பாவம். உண்மையாக எதைத்தான் நேசிக்கின்றாய். எலும்பைத் தானே. உண்மையில் மக்களை நேசிப்பவனுக்கு, இந்த பேரினவாத அரசுடன் என்ன கூடி நிற்க, என்ன அதனிடம் கிடைக்கின்றது. அரசை எதிர்க்காது, தமிழ் சிங்கள மக்களுக்கு, ஒரு நாளும் உண்மையாக இருக்கவே முடியாது.

 

இப்படி இருக்க, யதார்த்தம் பற்றி பேசுவது வேடிக்கை. எது தான் யதார்த்தம்? யதார்த்தம் என்பது புலிகளைப் போல், பேரினவாதமும் தமிழ் மக்களை கொல்வது தான். இதில் புலிகள் தேர்ந்தெடுத்து கொல்வார்கள், பேரினவாதம் தமிழன் என்றாலே கொல்லும் என்பதுதான், அதன் யதார்த்தம். இப்படி யதாhத்தம் என்ற பசப்புக்குள் , தமிழ் மக்களையிட்டு யாருக்கும், எந்த அக்கறையும் கிடையாது. அவனவனுக்கு எலும்புகள் மீதுதான் அக்கறை. இதுதான் யதாhத்தம். இலங்கை இநதிய அரசின் பினனால் கைகட்டி கூலிக்கு மாரடிக்கும் அரசியல், கொலை கொள்ளை முதல் அனைத்தையும் செய்வதே அவர்களின் யதார்த்தமாக உள்ளது.

 

'மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வுவரும் போது.." என்கின்றீர்கள். 'ஏதாவது" என்று, நீங்களே அதுபற்றி எதுவும் தெரியாது என்ற யதார்த்தத்தில் நின்று அல்லவா உளறுகின்றீர்கள். அந்த 'ஏதாவது" என்ற ஒன்றுக்காக, மக்களுக்கு துரோகத்தை தொடர்ந்து செய்வதே உங்களின் யதார்த்தம். உங்கள் எலும்பு சார்ந்த இந்தக் கோட்பாடு 'ஏதாவது தீர்வுவரும் போது.." என்று உளறும் அதே நேரம் 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பமேயன்றி" என்று மீளவும் உளற வைக்கின்றது. இதுவா யதார்த்தம்.

 

உங்களுக்கு எப்படித் தெரியும், இது நிரந்தர தீர்வுகான ஆரம்பமென்று. நீங்கள் சொல்ல, உலகம் தலைகீழாக நின்று நம்ப வேண்டுமோ! சரி, எலும்பைப் போடுகின்ற டக்கிளஸ் ஜயாவா சொன்னார். 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பம்" என்று! இதுதான் யதார்த்தம் என்று அவரா சொன்னார்? அவர் தனது எலும்புக்காக குலைக்கிறார். 'மக்களை உண்மையாக நேசிப்பவன்" என்ற கூறும் நீங்களுமா! வெட்கக் கேடு.

 

தீர்வு, நிரந்தர தீர்வு என்று கதை சொல்லுகின்றீர்கள். 60 வருடமாக இந்தக் கதையைத் தானே, அனைவரும் சொல்லி வந்தனர், வருகின்றனர். இப்படி சொல்லித் தான் எலும்பை நக்கியது, பிழைப்புவாதக் கூட்டம். உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்த பேரினவாதம், எதையும் கொடுக்கத் தயாராகவே இல்லை. மாறாக பேரினவாதத்தைப் பாதுகாக்க துணை நிற்கும் கும்பலுக்கு, எலும்புகளை போடுவதில் மட்டும் தெளிவான கொள்கை கோட்பாடு உண்டு. ஆனால் இக்கட்சிகள் தமிழ் மக்களுக்கு இதுதான் தான் தமது கட்சியின் தீர்வு என்ற சொல்லி, கட்சி நடத்துவது கிடையாது. இப்படிப்பட்ட நிலையில், எலும்பை போட்டவுடன் அதற்காக குலைக்கின்றனர்.

 

மலையக கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் அரசை நக்கி வாழ்ந்து, எதைத்தான் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுத்தனர். இதைத் தான் தமிழ் தலைவர்கள் இந்தா தீர்வு என்று கூறி, மறுபடியும் மறுபடியும் செய்ய முனைகின்றனர்.

 

எல்லா சுயத்தையும் இழந்து, நக்கிப் பிழைப்பதையே அரசியலாக கொண்டவர்கள் தமிழ் மக்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது. இப்படி எல்லாவற்றையும் இழந்து, கோமணத்துடன் நிற்கும் உங்களுக்கு வெட்கமாவது, மண்ணாங்கட்டியாவது. 'எலும்புத் துண்டுகளைத்தனிலும் கொடுக்க முடியுமானால்" என்று கூறுவது, உங்கள் அரசியல் பிழைப்புக்கு பொருத்தமானது. நீங்கள் டக்கிளஸ் மாதிரி என்ன ஒத்த உருவா? சரி யார் கொடுப்பது, யார் பெறுவது. மக்கள் உங்களிடம் பிச்சையா கேட்கின்றனர். சரி நீங்கள் கொடுக்க, நீங்கள் யார்? உங்கள் அரசியல் தான் என்ன? உங்கள் சுயம் தான் என்ன? முதலில் நீ யார்?

 

மக்கள் கேட்பது பிச்சையல்ல, தமது அடிப்படை உரிமைகளை. இதுதான் யதார்த்தம். இதை விட்டுவிட்டு 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு ஏதாவது தீர்வுவரும் போது" என்று உரிமைக்குப் பதில் பிச்சை போடுவதை ஆதரிப்பது தான், யதார்த்தத்தில் வக்கிரமானதும் கடைந்தெடுத்த உரிமை மறுப்புமாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை கொள்கையளவில் கூட அங்கீகரிக்க மறுக்கின்றவர்கள் தான் நீங்கள். ஒரு அரசு சொந்த மக்களுக்கு, 'நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆரம்பம்" என்று கூறி, பிச்சை போடப்போவதாக கூறுவதை எப்படித்தான் சகித்துக் கொள்ளமுடியும்.

 

இப்படி எலும்பு போடப் போவதாக கூறுவதை அம்பலப்படுத்தும் போது, அதை பாதுகாக்க குலைப்பது மகிந்த கொடுக்கும் எச்சில் சோற்றுப் பருகைக்களின் விசுவாசமாகும். இதனால் தானாம் 'தீர்வுவரும் போது அதை எதிர்ப்பவர்களை, குழப்பியவர்களை நிச்சயமாக விமர்சித்துக்கொண்டேயிருப்பேன்." என்கின்றனர். மக்களுக்கான உண்மையான தீர்வு வரும் போது, மக்களை நேசிக்கும் யாரும் எதிர்ப்பதில்லை. என்ன வகையான தீர்வு, எப்படி மக்களுக்கு தீர்வாகின்றது என்பது தான் முக்கியம். பேரினவாதிகள் தரப்போவதாக கூறுவது, எப்படி மக்களின் பிரச்சனையை தீர்க்கும்.

 

உங்கள் விசுவாசம் புலித்தன்மை வாய்ந்தது. மகிந்த சோறுபோடுவதால், உங்கள் விசுவாசம். பிரபாகரன் சோறு போடுவதால், புலிகளின் விசுவாசம். அரசியல் ரீதியாக மக்களை நேசித்து, மக்களுக்கு விசுவாசமாக இருக்கவோ வக்கில்லை.

 

செழியன் மீது தனிமனித தாக்குதலைச் செய்ய, இதே அளவுகோலைக் கொண்டு செய்வது அம்பலமாகின்றது. 'இயக்கத்தின் பணத்திலேயே... இயக்க வீட்டிலேயே... வாழ்ந்து கொண்டு இயக்கத்தின் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டு அந்த உத்தமர் தோழர் பத்மநாபாவுக்கு எதிராக நயவஞ்சகமாக நடந்து கொண்டதைப பற்றியெல்லாம் எழுதியிருப்பேன்." என்கின்றீர்கள். நல்லது, எந்த தோழருக்காகவோ இப்படிக் குலைக்கும் நீங்கள், அதையே மகிந்தவுக்காக செய்கின்றீர்களே ஏன்? தோழமைக்கே அளவுகோல் கிடையாதோ! சரி 'உத்தமர் தோழர்" அரசியல் என்ன? பத்மநாபாவின் சொந்த இயக்கமா அது. புலி உறுமுகிற மாதிரி இருக்கின்றது! அந்த 'உத்தமர் தோழர்" இயக்கம், இன்று பல கூலிக் கும்பலாகியது ஏன்? மக்களை வழிகாட்டும் அரசியல் எதுவுமற்றுப் போனது ஏன்?

 

சரி 'அந்த உத்தமர் தோழர் பத்மநாபா" இயக்கம் என்ன சொன்னது. தமிழீழம் (ஈழம்) என்றது? நீங்கள் இன்று என்ன சொல்லுகின்றீர்கள்? இதை மறுக்கின்றீர்கள். வேடிக்கை அல்லவா! நீங்களே உத்தமர் என்று கூறி அவரின் ஈழக் கோரிக்கையை மறுத்து, மகிந்தாவின் வாலில் தொங்குகின்றீர்களே ஏன்? அத்துடன் விட்டீர்களா இல்லை 'முழுமையான தீர்வு என்று செழியன் எதைக் கூறுகின்றீர்கள்? புலிகள் கோரும் தமிழீழத்தையா?" என்று கேட்கின்றீர்களே! வெட்கமாகவில்லை. நீங்கள் ஈழத்தை தீர்வாக வைக்கவில்லையா? புலிகள் மட்டுமா தமிழீழத்தை தீர்வென வைத்தனர்! நீங்கள் துரோகியானால், கோரிக்கை பிழையானதாகிவிடுமா! உங்கள் இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு தீர்வைக் கொடுத்துள்ளதா? இப்படி இருக்க, மூட்டை மூடிச்சுடன் பேரினவாதிகளை நக்குவது ஏன்?

 

நீங்கள் மகிழச்சியாக சுவைக்கும் எலும்பை, தமிழ் மக்களின் மகிழ்ச்சியாக காட்டுவது சினிமாத்தனமானது. இது சினிமாவுக்கு மட்டும் பொருந்தும்.

 

அந்த 'உத்தமர் தோழ"ரின் இயக்கம் மக்களின் விடுதலை என்றனரே! அது இதைத்தானா!, அதையா இன்று இந்திய இலங்கை அரசின் காலுக்கு கீழ் இருந்து செய்கின்றீர்கள். 'உத்தமர் தோழர்" பத்மநாபா மக்களின் விடுதலையையா நடைமுறைப்படுத்தினார்? அதன் அரசியல் தான் என்ன?

 

ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க விடுதலை என்று சொல்லிய இயக்கம், அதற்கு எதிராகவே பயணித்தது. இந்த நிலையில் செழியன் - தாஸ் போன்றோர், இயக்கத்தின் கொள்கையின் அடிப்படையில், மக்களின் வர்க்க விடுதலையை முன்வைத்தனர். அமைப்பு மக்களுக்கு சொன்னதை, உணர்வுபூர்வமாக கோரினர். 'இயக்கத்தின் பணத்திலேயே... இயக்க வீட்டிலேயே... வாழ்ந்து கொண்டு இயக்கத்தின் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டு" அதைத்தானே செய்ய முடியும். அப்படி சொல்லித்தானே இயக்கம் கட்டப்பட்டது. தலைமையின் ஒருபகுதி இந்திய உளவு அமைப்புகளின் செல்லப்பிள்ளையானால், அதை எதிர்த்துப் போராடுவது தான் மக்களுக்கு உண்மையாக இருத்தலாகும்.

 

இயக்கம் மக்களுக்காக கட்டப்பட்டது. இந்திய உளவு அமைப்புகளின் தேவைக்காக கட்டப்பட்டதல்ல. செழியனின் போராட்டம் மக்களுக்கானதாக, சரியானதாக இருந்தது. உட்கட்சி வழிமுறைக்கு உட்பட்டது. மாறுபட்ட கருத்துச்சுதந்திரத்தை கொண்ட அமைப்பு என்ற வகையில், இதை இன்று மறுப்பது புலிகளின் பாசிச சிந்தனை முறையாகும்.

 

இதைவிட்டுவிட்டு உங்களைப் போல், இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக இருப்பதையா செழியன் செய்யவேண்டும். மக்களின் பணம், மக்களின் விடுதலை, இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும், அதற்காக போராட வேண்டும். இதைவிட்டு விட்டு நயவஞ்சகமாக மக்களுக்கு எதிராக, இந்தியாவின் கால்களை நக்கிக் கொண்டு துரோகம் செய்வதா அரசியல்.

 

இந்தியக் கூலி அமைப்பாகி, பிரமேச்சந்திரனின் வாலாகி, அந்த அரசியல் துரோகத்துக்கு ஏற்ற தலைவனாக இருந்த, இந்த உத்தமரின் வேஷம் அருவருக்கத்தக்கது. அதுவும் மக்களின் விடுதலையின் பெயரில். தனிப்பட்ட நல்ல பண்புள்ள மனிதர்கள், அரசியல் ரீதியாக துரோகத்தையும் காட்டிக்கொடுப்பையும் செய்யத் தொடங்கிய பின், யார் தான் அவர்களை வெறுக்காமல் உண்மையாக இருக்கமுடியும்.

 

இன்று செழியனை நோக்கி நீங்கள் சொல்வது என்ன? டக்கிளஸ் பின்னால் வாலாட்டுவேண்டுமென்பதையா? அல்லது வரதராஜா பெருமாளின் பின் குலைக்கவேண்டுமென்பதையா அல்லது பிரமச்சந்திரன் பின் நக்குவதா? அதையாவது சொல்லுங்கள். நீங்கள் 'அந்த உத்தமர் தோழர் பத்மநாபா" சார்பாக எங்கே, எப்படி நிற்கின்றீர்கள்? செழியனை எதைச் செய்ய சொல்லுகின்றீர்கள். எதன் பின் போனால், எப்படி மக்களுக்கு 'எலும்புத் துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்பதையா. அதையாவது சொல்லுங்கள். வெட்கத்தை, மானத்தைவிட்டு சொல்லுங்கள். வாருங்கள் வெளியே. எந்த கோவணமுமின்றி, நிர்வாணமாகத்தான் நிற்கின்றீர்கள். ஓடி ஒளித்து விளையாட இடமில்லை. சுற்றப்p பாதுகாப்பாக அதிரடிப்படைதான் உள்ளது.

 

பி.இரயாகரன்
03.02.2008