இவை பற்றி பல்வேறு கட்டுரைகளில் (எமது தோழர்கள் உள்ளடங்க) நாம் மிகத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றோம். இருந்தும் குறிப்பாக

1."இலங்கை இறையாண்மை என்ற போதி மூட்டையின் பின் வைத்து சொல்லுவது ஏன்?"

நாங்கள் சர்வதேசியத்தைக் கடந்து, இதை அணுகவில்லை.

1.1.வாழ்வுக்காக மீன்பிடிக்கும் தமிழக, இலங்கை (தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள) மீனவர்கள் தம் எல்லை கடந்து மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியே வருகின்றோம். எமது முந்தைய கட்டுரைகளில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1.2.இலங்கையின் இறையாண்மை பற்றி நாம் பேசும் இடம் எப்போது என்னால், இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராகத்தான். மூலதனத்துக்காக அத்துமீறி மீன்பிடிக்கும் போக்கையும், அதை ஆதரிக்கும் அரசியல் போக்கை எதிர்த்துதான், நாம் இலங்கை மக்களின் இறையாண்மை பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்தவகையில் ஈழ தமிழினவாதிகளையும், இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துதான், இலங்கை மக்களின் இறையாண்மைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்த இடத்தில் இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் நிலை என்னவாக இருக்கின்றது என்பது இதுவரை புதிர்தான்.

2."ஒரு அடிப்படையான விசயத்தை மறந்துவிட்டு பேசுவதுதான் இவ்வாறு பார்ப்பதற்கு ஏதுவாகிறது. 40 கிலோ மீட்டரே உள்ள சிறு பிராந்தியத்தை நம்பி 2 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர் (இரு நாடுகளிலும் சேர்த்து, தோராயமாக) என்பதும் இரு நாட்டு மீனவர்களுமே பாரம்பரியமாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதும், எல்லைகள், இறையாண்மை போன்றவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகான விசயம் எனப்தையும், மீன்வர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்பதையும் ஏன் தோழர் ராயகரன் உள்ளிட்ட இலங்கை மார்க்ஸியர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்?"

இப்படி நாம் கூறுவதாக கூறுவது தவறானது. வாழ்வுக்காக மீன்பிடிக்கும் இந்திய இலங்கை மீனவர்களுக்கு எல்லை அவசியமில்லை. இது தான் எமது சர்வதேசிய நிலை. வாழ்வுக்காக மீன்பிடிப்பவர்கள் மீன்வளத்தை அழிப்பதில்லை. அதைப் பாதுகாத்து வாழ்பவர்கள்.

 

 

இதில் உள்ள அடிப்படை விடையம் என்னவென்றால், இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் இந்தியப் பெரு மூலதன மீன்பிடியை சாதாரண மற்றைய மீனவர்களுடன் ஒன்றாக காட்ட முற்படுவதுதான். வேறுபடுத்திப் போராடின், இதில் முரண்பாடு எழ வாய்ப்பில்லை. இங்கு எல்லை கடப்பது இந்திய மீனவர்கள். அதனால் இதன் சாதக பாதக அம்சங்களை ஆராயாது அணுகுவது தான் இந்திய தரப்பின் நிலை. பெருமுதலாளிகள் என்ன கோருகின்றனர். இலங்கைக் கடலிலும் மீன் பிடிக்கக் கோருகின்றனர், நியாயமான நிபந்தனைகளுடன். இதை இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் எதிர்க்கின்றவா?

3.ஆயினும், ராயகரன் முன் வைக்கும் மைய்யமான வாதங்களில் ஒன்று அந்த 45 கிலோமிட்டர் அகலத்தில் இலங்கையாண்டை இருக்கின்ற 30 கிலோ மீட்டர் பரப்பில் ஈழப் போர் காரணமாக சில பத்தாண்டுகளாக மீன் வளம் அழிக்கப்படாமல் இருந்துள்ளதாம், இந்த காலத்தில் இந்திய மீனவர்கள் தமது வளத்தை அழித்துவிட்டு இலங்கைப் பரப்பிலும் தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கினர், இப்போது போர் முடிவுற்ற நிலையில் இலங்கை மீனவர்கள் தமது கடற்பரப்பின் மீதான உரிமை கோரும் போது முரண்பாடு எழுகின்றது என்கிறார். மேலும், இந்தியப் பரப்பில் அழிவு ஏற்படுத்திய தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் எதிர்ப்பதொன்றும் ஆச்சர்யமில்லை என்கிறார் ராயாகரனும் பல்வேறு இலங்கை மார்க்ஸியர்களும்-கலையரசன் உள்ளிட்டு. முரண்பாடு இருப்பது உண்மைதான். அது இருக்கும் என்பதும் உண்மைதான் (கேரளா-தமிழக, ஆந்திரா-தமிழக மீனவர், தமிழகத்திலேயே மீனவக் குப்பங்களிடையேயான முரண்பாடுகள் போன்றதே அது). அதுவல்ல இங்கு பிரச்சினை. இதனை மீறி இங்கு வேறு சில அரசியல் சக்திகள் செயல்படுகின்றனவே அவற்றின் நோக்கங்கள் வினையாற்றுகின்றனவே அதுதான் இங்கு முன்னெழுகின்றது."

இங்கு வேறு சக்திகள் பல தளத்தில் இயங்குகின்றன. ஏன் இந்திய மீனவர் கைதின் பின்னணியில் கூட. இதில் முரண்பாட்டுக்கு இடமில்லை. இங்கு இந்த விடையத்தில் உள்ளடக்கத்தை விட்டுவிட்டு சென்று விடுகின்றீர்கள். நாங்கள் றோலர் கொண்டு மீன்பிடிப்பதையும், தடை செய்யப்பட்ட வலை கொண்டு மீன்பிடிப்பதையும் தான் இதில் எதிர்க்கின்றோம்;. அதை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள். இது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒன்று. இலங்கை தடைசெய்ததால் இதை நாம் எதிர்க்கவில்லை. அது மீன்வளத்தை மட்டுமின்றி, சிறு மீனவர்கள் வாழ்வையும் அழித்து விடுகின்றது.

இந்த அரசியல் நிலைப்பாட்டை இந்திய மார்க்சிட்டுகள் எடுக்கவில்லை. றோலர் மீன்பிடி முறையை இந்தியாவில் தடைசெய்யப் போராடுவதன் மூலம் தான், எமது சரியான நிலையை நீங்கள் காணமுடியும். அதுவரை இது தவறாக புரிந்து விளக்குவதாக மாறுகின்றது.

இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களிடம் கோருவது என்ன? ரோலர் மீன்பிடியை நிறுத்தவும், தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்த வேண்டாம் என்பதுதான். இந்தச் சரியான கோரிக்கை தான், எங்கள் கோரிக்கையும். இதை இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் ஆதரிக்கின்றனவா? எதிர்க்கின்றனவா? இதுதான் இந்த விடையத்தில் உள்ள அடிப்படையான முரண்பாடு. எதிரி யார் என்பதில் அல்ல.

பருத்தித்துறைக் கடலில் வைத்துப் பிடிக்கப்பட இந்திய ரோலர் படகுகள்.

4."இத்தனை ஆண்டுகள் வடகிழக்கு இலங்கையின் வளம் குறிப்பாக மன்னார் முதல் யாழ் வரையான பாக் சல சந்தியின் இலங்கைப் பகுதி வளம் இந்திய மீனவர்களால் அழிபடாமல் எப்படியிருந்தது? (இலங்கை மார்க்ஸியர்கள் சொல்வது படி இந்திய மீனவர்கள் யுத்த சூழலின் அனுகூலத்தில் அங்கு வெகு காலமாக மீன் பிடிக்கிறார்கள் எனில் அங்கும் அழிவு ஏற்பட்டிருக்க வேண்டுமே?)"

இந்தியக் கடல்வளம் அழியவில்லையா? அழிந்தது என்றால் யாரால்? இந்த தர்க்கத்தில் உள்ள, தரவு சார்பு முரண்பாடு இதுவாகும். இந்திய மீனவர்கள் இன்று போல் யுத்த காலத்தில் சுதந்திரமாக இலங்கைக் கடலில் மீன்பிடிக்கவில்லை. காரணம் யுத்தமும் இதன் கோரமும் மட்டுமின்றி, இலங்கை கரையை அண்டிச் செல்வதில் பாரிய நெருக்கடி இருந்தது.

5."சேது சமுத்திரம்-பாக் சல சந்தியின் இலங்கைப் பகுதி, இந்தியப் பகுதியின் மீன்வளப் பகிர்மானம், கடல் மண்படுகை என்ன வகைப்பட்டதாக உள்ளது? ஏனெனில் யாழ் குடாப் பகுதி மற்றும் கச்சத்தீவு பகுதிகள் மீன்பிடிப்புக்கு மிக அனுகூலமான இடங்களாகச் சொல்லப்படுகின்றன."

பிரச்சனையே இதுவல்ல. எப்படி, எந்த உபகரணத்தைப் பயன்படுத்தி, எந்த நோக்கத்துக்காக, யார் மீன்பிடிப்பது என்பதுதான் இங்கு பிரச்சனை. இதை தெளிவுபடுத்தினால் இதில் பிரச்சனை கிடையாது.

6.தமிழக மீனவர்கள் இரட்டை மீன் வலை (இங்கும் தடை செய்யப்பட்டதுதான்) உபயோகித்து சுரண்டுகிறார்கள் சரி. இதனை எதிர்க்கும் இலங்கை மீனவர்கள் என்னவிதமானதை செய்யப் போகிறார்கள்? தற்போதைய இலங்கை அரசின் மீன்வளத் துறையின் திட்டங்கள், கொள்கைகளை நோக்கும் பொழுது அவை இன்னும் அபாயகரமான சுரண்டலை இந்தக் கடற்பரப்பில் கட்டவிழ்த்தும் விடும் நோக்கில் இருப்பது தெரிகிறதே?"

இலங்கை அரசு மீனவர் சார்ந்ததல்ல. அதன் நோக்கம் மிகத் தெளிவானது. இலங்கை மீனவர்கள் ரோலர் கொண்டு மீன்பிடிப்பதில்லை. என்ன வகையான வலையைப் பயன்படுத்துகின்றனர் என்பதை எமது தோழரின் விரிவான கட்டுரையில் பார்க்கவும்.

7." இந்தப் பக்கம் தமிழக மீனவர்களின் சுரண்டல் என கை காட்டி விட்டு அந்தப் பக்கம் கேரின் நிறுவனத்தின் (இந்திய அரசு நிறுவனமான ஓ என் ஜி சி-ன் நிறுவனம்) எண்ணைய் கிணறு தோண்டும் திட்டத்தை மன்னாரில் எதிர்ப்பின்றி செய்து வருகிறதே இலங்கை அரசு? இந்தத் திட்டம் உருவாக்க இருக்கும் பாரிய கடற் அழிவல்லவா இங்கு முக்கியமானது? இதே போன்று வட கிழக்கு இலங்கையின் மீன் வளத்தை ஏற்றுமதிக்கானதாக சுரண்ட பெரும் அளவில் அமெரிக்க, சீன, ஜப்பான நிதியுதவி கொட்டப்பட்டு வருகிறதே இலங்கையில். இவை சிறு மீனவர்களை வாழ வைக்குமா அல்லது ஓட விரட்டுமா?"

எம்மை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புவது நியாயமா? பாருங்கள் கட்டுரைகளை.

8.ஒருவேளை இந்திரா காந்தி இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை தலைகீழாக மாற்றி தற்போதைய இலங்கை மீன்வருக்கான கடற்பரப்பு உரிமை தமிழக மீனவருக்கு வழங்கப்படுமானால் ரயாகரன் போன்றோர் அப்போதும் இறையாண்மைப் பிரச்சினையின் ஊடாக இதனை பார்ப்பார்களா? அப்படிப் பார்த்தால் அது இலங்கை மீன்வருக்கு பாதகமாக போய்விடாது? சர்வதேச சட்ட வரையறைகளின்படி தற்போதைய எல்லைப் பிரிப்பு ஒரு கேலிக்கூத்து என்பது தோழர் ரயாகரனுக்கு தெரியவில்லையா?"

இங்கு ஆளும் வர்க்க இறையாண்மை பற்றி நாம் என்றும் பேசவில்லை. இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி பேசுகின்றோம். மூலதனத்தின் நலனை முன்னிறுத்திய இந்தியா இறையாண்மை மூலமான விஸ்தரிப்புவாதத்தை பேசும் போதுதான், இலங்கை மீனவரின் இறையாண்மை பற்றி நாம் பேசுகின்றோம்;.

கச்சைத்தீவு சுற்றி பிரச்சனை இருப்பதாக காட்டுவது, ஈழத் தமிழ்தேசிய அரசியலாகும்;. கச்சைதீவு அல்லாத இலங்கைக் கரையோரம் வரை இந்த பிரச்சனை உள்ளது. கச்சதீவு இந்தியப் பகுதியாக இருந்தாலும் கூட, இந்த பிரச்சனை என்பது, ரோலரும், பயன்படுத்தும் வலையும் தான். அத்துடன் மூலதனத்தின் நலனும் தான்.

9.விசயம் என்னவென்றால், இலங்கை – தமிழக சிறு மீன்வர்களின் பொருளாதார நலன் முதலாளித்துவ பொருளாதார நலன்களுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுவிட்டது. இந்த முரண்பாடு உருவாக்கும் போட்டிச் சூழலே இங்கு இலங்கை-தமிழக மீனவர் மோதலாக உருவெடுக்கிறது. உண்மையில் 45 கிலோமீட்டர் அகலமே உள்ள இந்த கடற்துண்டில் இரு தரப்பு மீனவர்களுக்குமே உரிமை உண்டு என்ப்தை அங்கீகரிப்பதில் இருந்தும், இவர்களின் முரன்பாட்டுக்குக் காரணமான பொது எதிரிகள்தான் முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பொது அரசியல் நோக்கிலிருந்துதாம்தான் இந்தப் பிரச்சினையை அணுக இயலும். இதை விடுத்து சிங்கள இன வெறி அரசின், இந்திய விரிவாக்க அரசின் பிரச்சாரத்திற்கு பலியாகியதாகவே இலங்கை மார்க்ஸியர்களின் நோக்குநிலை உள்ளது."

இது வேடிக்கையானது. பிரச்சனை "இந்த கடற்துண்டில் இரு தரப்பு மீனவர்களுக்குமே உரிமை உண்டு" என்பதில் முரண்பாடு இல்லை. ஆனால் இந்திய மீன்பிடியிலுள்ள பெரு மூலதனத்துக்கான உரிமை அல்ல. அத்துடன் றோலர், மற்றும் அதன் பயன்பாட்டுக்குரிய வலைகளுக்கான உரிமையுமல்ல. இதை வகைப்படுத்திக் காட்டாத உரிமை, மொத்த மீனவர்களுக்கும் எதிரானது. "இந்திய விரிவாக்க அரசின் பிரச்சாரத்திற்கு பலியாகியதாகவே இலங்கை மார்க்ஸியர்களின் நோக்குநிலை உள்ளது." என்பது அபத்தத்திலும் அபத்தம்.

குறிப்பு : அறிக்கை பு.ஜ.ம.முன்னணியினுடையது. அதை என் பெயரில் விமர்சிப்பது தவறானது.

 

பி.இரயாகரன்

19.02.2011

 

இவை பற்றிய விரிவான கட்டுரைகள்

அறிக்கை பு.ஜ.ம.முன்னணி:

1. இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!

 

மணலை மைந்தன்:

2. இந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும் - (பகுதி -1)

3. இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – (பகுதி 2)

4. இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 3

இன்னும் வரும்.....

 

பி.இரயாகரன்:

5. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

6. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

7. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 03)

8. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 04)

9. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 05)

10. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (இறுதி பகுதி – 06)

11. தமிழக மீனவர் விடையத்தில் புதிய திடீர் திருப்பம்