மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்க, மக்களை அரசு தோற்கடித்துவிட்டது என்ற உண்மையை கொண்டு, புலியை நியாயப்படுத்துகின்றனர். இங்கு மக்கள் புலியை தோற்கடித்ததை மறுப்பதே, தீபச்செல்வனின் இன்றைய அரசியல். உண்மைகளை மறுப்பதன் மூலம், வலதுசாரியம் தன்னைத்தான் தக்க வைக்க முனைகின்றது.   தீபச்செல்வன் கூறுகின்றார் "புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு  தோற்கடித்திருக்கிறது" என்கின்றார். இங்கு அரசு புலியைத் தோற்கடிக்கவில்லை. புலி தன்னைத்தான் தோற்கடித்தது. அதாவது மக்களுக்கு எதிரான புலி அரசியல் மூலம், புலி தன்னையே தோற்கடித்தது. மக்களைப் பார்வையாளராக்கி, ரசிகர் கூட்டமாக்கினர். புலிகள் வேறு மக்கள் வேறு என்ற இடைவெளி, அதிகாரமும் பணமும் குவிந்த போது மேலும் அகலமாகியது.  பேரினவாத அரசு இதற்குள் புகுந்து, மக்களை தன் பங்குக்கு மேலும் தனிமைப்படுத்தியபடி புலியை இலகுவாக அழித்தது. இந்த நிலைமை என்பது புலியின் சொந்த அரசியல் மூலம் உருவானது.

இங்கு "புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம்" என்று கூறுவதன் மூலம், அவர்கள் சிதைவில் இருந்து விழித்தெழும்புவார்கள் என்ற பிரமையை ஏற்படுத்துவதன் மூலம் தீபச்செல்வன்கள் வாழுகின்றனர். வேறு எந்த மக்கள் அரசியலிலும் இருந்தல்ல. புலிகள் இனி விழித்தெழ, அவர்கள் உறங்கவில்லை. ஆனால் வலதுசாரிய புலிச்சிந்தனை முறை அப்படியே தான் கற்பிக்கின்றது, கற்பித்து இருக்கின்றது. தொடர்ந்து அரசின் இனவெறிக் கொள்கை மாற்றமின்றி இருக்கின்ற அரசியல் தளத்தில், புலிச்சிந்தனை முறை என்பது அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகவில்லை. இடதுசாரியம் இதன் மேல் தன் போரை நடத்தவில்லை. அதாவது தேசியம் சார்ந்த தன் அரசியல் நிலையை இதன் மேல் நிறுவவில்லை. 

கடந்தகாலத்தில் புலிச் சிந்தனை முறை தமிழ்மக்களை அழித்தது மட்டுமின்றி, இன்று அது தமிழ்மக்களின் மீட்சிக்கு தடையாகவும் மாறி இருக்கின்றது. இந்த நிலையில் அதை அரசியல் ரீதியாக யாரும் மறுதலித்து, அதற்கு எதிராக போராடுவது என்பதை நடைமுறை ரீதியாக கொள்ளாத இடதுசாரியம் தான், அதை உயிர் வாழ வைக்கின்றது.        

இந்த உண்மை தான், தீபச்செல்வன்களின் மீள் கருத்தாக்கமாக வெளிவருகின்றது. "யுத்தம் முடிந்தவுடன் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று சொல்ல முடியாதளவில் ஈழத்துச் சூழல் குழம்பியிருந்தது." என்கின்றார். யுத்தத்தை உருவாக்கிய அரசியல் முரண்பாடு, அரசியல்ரீதியாக அப்படியே தொடர்ந்து நீடிக்கின்றது. இதனால் அழிந்த புலியையும், அது கொண்ட அரசியலையும் மீள நிலைநிறுத்திவிடலாம் என்பது, நப்பாசை சார்ந்தது. அது நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு அலைகின்றது. உண்மையில் இதை மாற்றியமைக்கும் இடதுசாரிய சிந்தனைமுறை ஈழத்தில் நடைமுறையில் இல்லாமை முதல், இதைக் கேள்விக்குள்ளாக்கும் இடதுசாரி விமர்சனப்போக்கும் கூட இல்லாத அரசியல் வெற்றிடத்தில் தான் எமது சமூகம் உள்ளது. மீண்டும் யார் வென்றனர் தோற்றனர் என்ற வலதுசாரிய மீட்சிக்கான அரசியல் குதர்க்கத்தை, இலங்கையின் சூழல் சார்ந்த அரசியல் உண்மையைக் கொண்டு புலியை மீள உருவாக்கிவிட முடியாது.

இந்த முரண்பாடு நிலவிய காலத்தில்தான், புலி தன் அரசியலின் கையாலாகாத்தனத்தினால் தன்னைத்தான் அழித்தது. புலி இந்த முரண்பாட்டை கையாண்ட அரசியல் வழிமுறை என்பது, மக்களை ஒடுக்கி அவர்களை இறுதியில் அழிப்பதில் தான் முடிவுற்றது. அந்த மக்கள் தான் புலியைத் தோற்கடித்தனரே ஒழிய, இங்கு அரசல்ல. இங்கு அரசு அதை தனதாக்கியது.

இப்படி உண்மையிருக்க "இப்பொழுது புலிகள் உண்மையில் தோற்றார்களா என்பதை மறுபடியும் யோசித்துப் பார்த்தால், நான் நினைக்கிறேன் புலிகள் தோற்கவில்லை." என்கின்ற அரசியல், மக்களை மீண்டும் மீண்டும் மறுதலிக்கின்றது. மக்கள் தான் வரலாற்றைப் படைப்பவர்கள் என்ற உண்மையை, மறுபடியும் புலியரசியல் மூலம் தான் இங்கு மறுதலிக்கப்படுகின்றது.

அரசியல் முரண்பாடும், அது உருவாக்கிய அரசியல் வழிமுறைகளும், அதைப் பற்றிய சிந்தனைமுறையும் இன்று அரசியல் ரீதியாக  கேள்விக்குள்ளாகவில்லை. அது இன்னும் அப்படியே நீடிக்கின்றது. ஆனால் இங்கு இன்று புலியில்லை. இந்த முரண்பாடு தான், புலி தோற்கவில்லை என்ற கற்பனையையும், அரசு தோற்றதாக கூறுகின்ற அரூபமான, ஆனால் மிக நுட்பமான வலதுசாரிய வாதத்தையும் முன்தள்ளுகின்றது.

இந்த இன முரண்பாடும் மறுபடியும் எப்படித் தீர்க்கப்படும் என்ற கேள்வியும், தீர்வும், மறுபடியும் புலியாக காண்கின்ற அரசியல்மாயையை உருவாக்குகின்றது. ஆனால் அதை மறுபடியும் உருவாக்குகின்ற, ஒரு சமூக அமைப்பு இன்று இல்லாது போயுள்ளது. முரண்பாட்டின் மற்றொரு வடிவம் இது. நிலவிய அரசியல் முரண்பாட்டின் மேல் தொடர்ந்து புலிகள் இருக்க முடியாது போன உண்மை, இதற்கு தெளிவாகவே பதிலளிக்கின்றது. குறித்த முரண்பாட்டின் மேல் இருக்க முடியாது போன புலி, எப்படி தொடர்ந்து அதே முரண்பாட்டில் மீண்டும் புலியாக இருக்க முடியும். சமூக சிதைவை முன்னிறுத்தும் வெற்றிடம் தான், புலி சிந்தனைமுறை உருவாக்கும்.

இந்த முரண்பாட்டுக்கு தீர்;வு என்ன? இது அடிப்படையான கேள்வி. முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில், இலங்கை மக்களைச் சார்ந்து நின்று போராடுகின்ற அரசியலை முன்னிறுத்துவதன் மூலம்தான், கடந்தகால மக்கள் விரோத அரசியல் வழிகளை நிராகரிப்பதன் மூலம் தான் இதற்கு தீர்வு காணமுடியும். 

இதுவல்லாத வழியில் ஏற்பட்ட தோல்விகள், மறுபடியும் புலிப் போராட்டத்தை நடத்தும் என்பதும், முரண்பாடுகள் அதை தோற்றுவிக்கும் என்பதும், கற்பனையில் புலி அரசியலை மீள முன்னிறுத்தி அதை கொண்டு வலதுசாரிய பிழைப்புவாதத்தை தீர்வாகவும் நம்பவைப்பதுதான்.   உண்மையில் தோல்வியை கற்றுக்கொள்ள மறுப்பதாகும். வார்த்தைகள், வார்த்தை ஜாலங்களுக்கு பஞ்சம் கிடையாது. "மக்கள்தான் தோற்றார்கள் என்பதுதான் தாங்க முடியாதது. ஆனால் மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்குகின்றன என்று நான் கருதுகிறேன்." என்பது, வார்த்தை ஜாலங்கள் கொண்டதும், உண்மையின் ஒருபக்கமுமாகும்;. 

"தோல்விகள் தான் போராட்டங்களை உருவாக்குகின்றன" என்பது ஒரு அரசியல் உண்மையாக இருக்க, தோல்விக்கான அரசியல் சுயவிமர்சனத்தை செய்தால் மட்டும்தான் அது சாத்தியம். தோல்வி ஏன் எதனால் ஏற்பட்டது என்ற அரசியல் சுயவிமர்சனம் இன்றி, சமூகத்தில் இருந்து மறுபடியும் போராட்டங்கள் உருவாகாது. அதைச் செய்யாதவராக நீங்கள் எல்லாம் இருக்கும் வரை, சமூகம் தன் தோல்வியைக் கற்றுக்கொள்ள முதலில் நீங்கள் அனுமதிப்பதில்லை. சுயவிமர்சனமற்ற உங்கள் வலதுசாரிய அரசியல், மறுபடியும் போராட்டத்தை உருவாக்காது. மாறாக அதை இல்லாதாக்குகின்றது. எப்படி புலிகள் போராட்டத்தின் பெயரில் போராட்டத்தை  அழித்தனரோ, அதையே நீங்கள் செய்கின்றீர்கள். சுயவிமர்சனத்தை தடுத்து, மீள ஒரு போராட்டம் உருவாகாத வண்ணம் அதை அழிக்கின்றீர்கள். 

உண்மையில் ஆயுதமேந்திய போராட்டம் தொடங்கிய போதே, மக்கள் தோற்றுப்போனார்கள். மக்கள் இதற்கு எதிராக போhராட முனைந்தபோது, அவர்கள் பல முனைகளில் ஒடுக்கப்பட்டார்கள். இன்று அரசு அதைச் செய்கின்றது. உள்ளிருந்து தன்னை சுயவிமர்சனம் செய்யாத வரை, அதை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாத வரை, மக்கள் போராட்டங்கள் தானாக தன்னியல்பாக உருவாகாது. இதற்கு எதிராக குண்டு தான் வைக்கலாம்.

பி.இரயாகரன்
தொடரும்      

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

 

 

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

 

12புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)

 

13. "உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)

 

 

14.மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)

15.அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15)