உமாமகேஸ்வரன் தளத்திற்கு சென்ற போது நக்கீரன் (“தமிழன்குரல்” ஆசிரியர்) என்ற தோழரையும் இந்தியாவில் இருந்து அழைத்துச் சென்றிருந்தார். நக்கீரனை நேரடியாக நாம் இருந்த தண்டனைக் குடிசைக்கு செந்தில் கூட்டி வந்து, “இவரும் இனி உங்களுடன் தான் இருப்பார்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவர் ஏன் எதற்காக எம்முடன் கொண்டு வந்து விடப்பட்டார் என்பது எமக்கு புரியாமையால், எமக்குள் அவர் தொடர்பாக ஒரு பயம் இருந்தது. நாம் என்ன கதைக்கின்றோம் என்று உளவறிய வந்துள்ளாரோ? என்னும் சந்தேகமிருந்தது. தற்போது எமது தண்டனை முகாமில் 10 பேராகி, இடநெருக்கடி அதிகமாகியது. இருந்தபோதும், அதை யாரிடம் யார் சொல்வது? சொன்னால் அடி விழும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததால், அதைப் பற்றி எதுவும் கதைக்காது மவுனமாக இருந்தோம்.

உமாமகேஸ்வரனின் விஜயம் என்பது, எமது முகாமை உலுக்கியது என்றே சொல்லலாம். அவன் வந்து சென்றதும், முகாமில் இருந்த பல தோழர்களுக்கு தாம் அவரை நேராக சந்தித்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. பல தோழர்கள் எம்மை வெளியால் அழைத்துச் செல்லும் போது, உங்களுடன் உமாமகேஸ்வரன் என்ன கதைத்தார் என ஆவலாக கேட்பார்கள். நாம் அவர் ஒன்றும் பெரிதாக கதைக்கவில்லை. நாங்கள் செய்யாத குற்றத்திற்கு தான், தண்டனை அனுபவித்து வருகின்றோம் என்ற அடிப்படையில் தான் கதைத்தார் என்றதும், பலரும் முகம் வாடியபடி என்ன பெரியய்யாவும் உங்களை இப்படியா பாக்கின்றார் என்று ஆதங்கப்பட்டனர். உமாமகேஸ்வரன் வந்த போது முகாமில் ஒரு சம்பவம் நடந்தது.


எல்லோரும் மதிய உணவிற்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களுடன் உமாமகேஸ்வரனும் வரிசையில் உணவுக்காக நின்றான். முகாமில் இருந்த எல்லோரது கைகளிலும் தட்டு காணப்பட்டது. ஆனால் உமாமகேஸ்வரனின் கையில் மாத்திரம் இல்லை. இதை அவதானித்த வளவன், தனது தட்டை கொண்டு வந்து நீட்ட அதை வாங்க மறுத்தான் உமாமகேஸ்வரன். இதைப் பார்த்த பல தோழர்கள் தமது தட்டை நீட்டினார்கள். அன்று சமையலுக்கு பொறுப்பாக இருந்தவர்களும், தமது தட்டுக்களை நீட்டினார்கள். அவற்றில் எதையும் வாங்கவில்லை என்பதால், பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இவனுடன் வந்திருந்த வாமன் (வாமதேவன்) கண்ணன் (சோதீஸ்வரன்)போன்றோர், மற்றவர்களின் தட்டை வாங்கியிருந்தனர். இவன் தட்டை வாங்காத பெரிய சர்ச்சையில் முகாம் திகழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீர் என உமாமகேஸ்வரன் சமையல் அறைக்கு மறுபுறத்தில் நிலத்தில் அழுக்குப்படிந்திருந்த தட்டை எடுத்தான். இத் தட்டில் தான் முகாமில் நிற்கும் நாய்க்கு சாப்பாடு வைப்பது வழக்கம். கிணற்றடிக்கு தானே சென்று கழுவி துப்பரவு செய்து, மீண்டும் சாப்பாட்டிற்கான வரிசையில் வந்து நின்றான். அந்த தட்டிலே தான் உணவை வாங்கிச் சாப்பிட்டான். இது உண்மையில் அந்த முகாமையே அதிரவைத்தது. இவனை தலைவராக மானசீகமாக ஏற்றவர்கள், அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். மற்றவர்களும் கூட பாராட்டினர். இவ்வாறு ஒரு பெரிய நாடகமாடிவிட்டு, முகாமில் இருந்து உமாமகேஸ்வரன் தன் குழுவினரோடு புறப்பட்டான்.


அதன் பின்பு தோழர்களை முகாம் மையத்துக்கு அழைத்த முகாம் பொறுப்பாளர் வளவன், பெரியய்யா நாய் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டுவிட்டு போகின்றார் என சத்தமிட்டான். இதற்கு காரணம் நீங்கள் எல்லோரும் தான் எனக் கூறி, தண்டனை கொடுத்தான். மேலும் சமையலுக்கு அன்று பொறுப்பாக இருந்த ரவிவர்மன் என்ற தோழருக்கும், அவருடன் இணைந்தவர்களுக்கும் கடுமையான தண்டனையினை மறுநாள் கொடுத்தான். பலருக்கு ஏன் இது என்று விளங்கவில்லை. ஒவ்வொருவருக்கும் எனக் கொடுக்கப்பட்ட தட்டைத் தான், அவர்கள் வைத்திருந்தனர். புதிதாக யாராவது வந்தால், அன்று சமையலில் இருப்பவர்களின் தட்டை பாவிப்பது வழக்கம். ஆனால் உமாமகேஸ்வரனோ அதைச் செய்யாது, நாய் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிட்டு ஒரு ஸ்ரண்டு செய்ததற்காக சும்மாயிருந்த மற்றைய தோழர்கள் உருண்டது தான் மிச்சம். ஏன் வளவன் இதைச் செய்தான் என்றால், தலைமையிடம் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவே. இவ்வாறு தான் பலர் தமது விசுவாசத்தைக் காட்ட, மற்றவர்களைத் துன்புறுத்தினர். இது முகாம் பொறுப்பாளர்களிடம் மட்டுமல்லாது சாதாரண தோழர்களிடையேயும் கூட காணப்பட்டது. இதனால் தான் பல காட்டிக் கொடுப்புக்களும், பழிவாங்கல்களும் நடந்தேறின.

இக் காலகட்டத்தில் புதிதாக முகாமிற்கு வந்த தோழர்கள், எம்முடன் சரளமாக கதைக்குமளவிற்கு நெருக்கம் ஏற்பட்டது. அப்போது எனது ஊரவரான பிரகாஸ் என்பவருடன் கதைத்தேன். அவர் எனக்கு நடந்தவற்றை கேட்டு திகைத்தார். அப்போது அவர் தான் புலிக்கு துண்டுப் பிரசுரங்கள் கொடுத்ததாகவும், ஆனால் தன்னை பின்தளத்திற்கு அனுப்ப புலிகள் மறுத்து விட்டனர் என்றும், இதனாலேயே தான் புளட்டுக்கு வந்தார் என்றும் கூறினார். எனது வீட்டாரின் சுகநலங்களையும் அவரிடம் கேட்டு அறிந்தேன். நான் முன்பு குறிப்பிட்டது போல, தளத்தில் இருந்து புளட்டுக்கு ஆட்சேர்ப்பு என்பது எந்த அரசியலையும் கொண்டிருக்கவில்லை. மாறாக கும்பலில் கோவிந்தா என்ற மாதிரி, படகில் ஏற்றி அனுப்பினார்கள். இதனாலும் பல உட்படுகொலைகள் நடந்தேறின.

இவ்வாறு தோழர்களுடன் கதைப்பது போன்றவற்றின் ஊடாக, எமது காலங்கள் நகர்ந்தன. தோழர் சந்ததியார் அமைப்பில் இருந்து ஒதுங்கிய பிற்பாடு, அமைப்பின் அரசியல் பொறுப்பாளராக “பம்மாத்து வாசுவை”(வாசுதேவா) நியமித்தார்கள். இவர் அடிப்படையிலேயே நேர்மையற்றவர் என்பதால் தான், பம்மாத்து என்ற பட்டம் சூட்டப்பட்டது. இவர் அனைத்து முகாம் பொறுப்பாளராக இருக்கும் போது, செய்த தில்லு முல்லுக்கள் பல. தனது நலன் கருதிய இவரது செயற்பாடுகளை பார்த்த பல தோழர்கள், இவர் மீது ஒரு காழ்ப்புணர்வை கொண்டிருந்தனர். தலைமைக்கும், அதன் அடிவருடிகளுக்கும் சேவகம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த இவர், இயக்கத் தோழர்களைப் பற்றி சிந்தித்ததில்லை. பணத்தை மிச்சம் பிடிப்பது என்ற கோரிக்கையின் பின், ஞாயிற்றுக்கிழமைகளில் பாணும் வாழைப்பழமும் காலைச் சாப்பாடாகவும், மதியம் மீன் அல்லது இறைச்சி உணவாகவும் இருந்தது. இதில் வாசு வந்ததும் கழகத்தில் பணம் தட்டுப்பாடு என்று கூறிக் கொண்டு, பாண் வாழைப்பழம் என்ற உணவை நிறுத்தினான். ஆனால் இவர்களின் ஆடம்பர வாழ்க்கை என்பது குறைந்தபாடாக இல்லை. ஒவ்வொருவரும் தமக்கு மோட்டார் சைக்கிள், உண்பதற்கு ஓட்டல்கள் என்று சொகுசு வாழ்க்;கையையே வாழ்ந்தனர். இதைப் பார்த்த தோழர்கள் பலர், தமக்குள்ளேயே திட்டித் தீர்த்தனர். இவ்வாறான ஒருவர் அரசியல் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? மார்க்சியம் என்ற சொல்லுக்கு அப்பால் இவர்கள் முன்னேறவில்லை.
அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த வாசு (வாசுதேவா)அரசியல் பொறுப்பாளராக பதவியேற்றப்பட்டது, எம்மிடையே பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதை எமக்குள் கதைத்தபடி இருந்தோம். அக்காலத்தில் வாகன ஒட்டுனராக இருந்த வெள்ளை அண்ணர் முகாமிற்கு பொருட்களை கொண்டு வரும் போது, முகாம் தோழர்கள் ஊடாக எமக்கு சில தகவல்களைத் தருவார். அவ்வாறு தரப்பட்ட தகவல்கள் தான் சுழிபுரம் படுகொலை, சந்ததியார் கைது, ..... போன்றவை.

எமக்கு தற்போது அடி விழுவதில்லை. எம்மை சந்திக்க வருபவர்கள், வாமன் (வாமதேவன்)உட்பட எம்முடன் சரளமாக கதைக்க ஆரம்பித்தனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின் பாபுஜி வருவதில்லை. அதன் பிற்பாடு அவரை இந்தியாவில் நான் சந்திக்கவில்லை. ஒரு முறை எம்மை அரசியல் பொறுப்பாளர் வாசு(வாசுதேவா) சந்திக்க வந்த போது, எமக்கு வாசிக்க புத்தகம் தேவை என்றோம். அதற்கு சிரித்தபடி ஆம் என்று கூறிச் சென்றவர், வேண்டுமென்றே ஒரு சில சிவப்பு புத்தகங்களை அனுப்பி வைத்தார். எமக்கோ பயம். முகாம்களில் அவைகள் படிக்கத் தடையாக இருக்கும் போது, எமக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியுடன் அதை சிறிது காலம் தொட்டுப் பார்க்காமல் இருந்தோம். பின்னர் முகாமில் தோழர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகங்களை, அவர்கள் ஊடாக பெற்றுக் கொண்டோம். அப்போது தான் எமக்கு தாய், வீரம் விளைந்தது பகுதி 1,2, அதிகாலையின் அமைதி, போன்ற புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன. எம்மிடையே ஒருவர் அதை வாசிக்க மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருப்போம். இவ்வாறு காலங்கள் உருண்டோடின. அக்காலகட்டத்தில் படைத்துறைச் செயலதிபர் கண்ணனும்(சோதீஸ்வரன்), காந்தனும் எம்மை சந்திக்க வந்துபோவார்கள். படைத்துறைச் செயலதிபராக கண்ணன்(சோதீஸ்வரன்),  இருந்தாலும், ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்தது காந்தன் என்றே அறிந்தோம். இவர்கள் எம்மை சந்தித்து சாதாரணமாக கதைத்து விட்டு செல்வார்கள். காந்தன் கண்ணனுடன் (சோதீஸ்வரன்), மாத்திரம் அல்ல, உமாமகேஸ்வரன் செந்தில் போன்றோருடனும் முகாம்களுக்கு விஜயம் செய்வார். படைத்துறை நடவடிக்கைகளை கையாள்வதற்கும், அதை பார்ப்பதற்கும் இவர் அடிக்கடி முகாம்களிற்கு விஜயம் செய்துள்ளார். இவர் விஜயம் செய்த முகாம்களில் பீ முகாம் மற்றும் நாம் இருந்த முகாம் போன்றவற்றிற்கு அப்பால், கொமாண்டோஸ் முகாம் போன்றவற்றிற்கு விஜயம் செய்துள்ளார். இதில் பீ முகாமில் நாலாம் மாடியும், நாம் இருந்த முகாமில் எமது சிறையையும் பார்த்தவர் அதைப் பற்றி கேள்விக்கு உட்படுத்தாது, அதை நடத்துபவர்களுடன் இணைந்து செயற்பட்டும் வந்தவர்.

 
இக்கால கட்டத்தில் நோபேட் தளத்தில் இருந்து பின்தளத்திற்கு அழைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்தேறின. இதை அறிந்த சந்ததியார், நோபட்டை பின் தளத்திற்கு வரவேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி என்.எல்.எவ்.ரீ தோழர்களிடம் கொடுத்து விட்டிருந்தார். ஆனால் என்.எல்.எவ்.ரீ யினருக்கு இவர் கேசவன் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்ததால், நோபேட் என்பவர் யார் என அவர்கள் அறிய குறிப்பிட்ட காலம் எடுத்தது. இதற்குள் நோபோட் பின்தளம் வரவழைக்கப்பட்டார். இவருடன் பல விவாதங்கள் நடந்தேறின. இவரை எந்தநேரமும் உளவாளிகள் சுற்றிய வண்ணமே இருந்தார்கள். பின் இவரை தளத்திற்கு பொறுப்பாளராக அனுப்பிவைத்தனர். ஆனால் ஒரு பொம்மை போன்றே இயங்க ஆரம்பித்தார்.

 
திடீர் என ஒருநாள் அமைப்பில் இருந்த மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும், முகாம்களில் உள்ளவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவ்வாறு தப்பித்தவர் காந்தன் என்றும், இவர் தப்பிப்பதற்கு முன் கழகத்தின் ஆயுதங்களுடனும் கண்ணனை(சோதீஸ்வரன்) கொலை செய்ய முயற்சித்தார் என்றும் பொய்ப் பிரச்சாரங்களை கழக முகாம்களுக்கள் கட்டவிழ்த்து விட்டனர். இதனால் பல தோழர்கள் இவரை கடுமையாக விமர்சித்தனர். இவர் தப்பியோடுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர், எம்மைச் சந்தித்து கதைத்திருந்தார். இதனால் இவர் தப்பியோடியதற்கும் எமக்கும் சம்பந்தம் உண்டு எனக் கருதி, கண்ணன்(சோதீஸ்வரன்) வாமன் (வாமதேவன்) வாசு (வாசுதேவா) போன்றோர் வந்து எம்மை தனித்தனியாக வைத்து விசாரித்தனர். அப்போது மீண்டும் அடித்தனர். தம்முடன் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், இயக்க இரகசியங்களை அறிந்தவருமான காந்தன் தப்பித்தது என்பது மிகப் பெரிய அதிர்ச்சியைக் அவர்களுக்கு கொடுத்திருந்தது.


இவரைக் கண்ட இடத்தில் சுடும் அளவிற்கு ஆத்திரத்தில் அன்று கழகம் இருந்தது. இவர் ஏன், எதற்காக தப்பினார் என்று எவருக்கும் தெரியவில்லை. கழகத்தின் எல்லா அராஜக சம்பவங்களிலும் ஒன்றாக நின்ற காந்தன், எதற்காக திடீர் என ஒழித்து ஓடினார் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இவர் தப்பிச் செல்லும் போது கழகத்தின் எந்த ஒரு உடமைகளையும், தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கவில்லை.


இவ்வாறு இவர் தப்பியதும், இயக்கத்தின் பல நடவடிக்கைகள் இரகசிய முறைக்கு மாற்றப்பட்டன. புதிய செயற்குழுவையும் மத்திய குழுவையும் உருவாக்கத் தொடங்கினர். தமது நம்பிக்கைக்கு உரியவர் தப்பித்ததால், மற்றவர்களை நம்பத் தயாராக எவரும் இருக்கவில்லை.


கழகம் எப்போதும் தனிமனித வழிபாட்டிலேயே இயங்கிவந்தது. இதற்கு பலர் மார்க்சியம், தேசியம், இன முரண்பாடு, சர்வதேசியம் போன்ற சொற்பதங்களைப் பாவித்து தனிமனித வழிபாட்டைச் செய்து வந்தனர். இத் தனிமனித வழிபாட்டுடன் பலர் கருத்து ரீதியாக முரண்படவில்லை. அவ்வாறு கருத்து ரீதியாக முரண்பட்டிருந்தால் அதை அம்பலப்படுத்தியிருக்க முடியும். மாறாக அதைச் செய்யாது, தமது நலன் கருதி அதில் தொடர்ந்து இயங்கினர். பின்தளத்தில் தான் அப்படி என்றால், தளத்திலும் அதே நிலைதான். பின்தளத்தில் நடக்கும் விடையங்களை மறுத்து இயங்குவது, இவர்களின் வேலையாக இருந்தது. ஆனால் ஆட்சேர்ப்பில் மட்டும் சோரம் போகவில்லை. தொடர்ந்தும் ஆட்களை பயிற்சிக்கு என அனுப்பி வந்தனர். சுழிபுரப் படுகொலை அதன் பின் மணியம் தோட்டப் படுகொலை (இயக்கத்திற்கு வந்த பெண்கள் கொலை) மேலும் கொலைகளும் அடாவடித்தனங்களும் நடந்த போது, இன்று ஜனநாயகம் மற்றும் புரட்சி பற்றிப் பேசும் பலர் அன்று கழகத்தில் அவற்றினை மூடிமறைத்தனர். பொய்களை கீழ் மட்டத்தினருக்குக் கூறி, பெரியய்யாவிற்கு விசுவாசிகளாக இருந்தனர்.


பின்தளத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு அராஜகம் தலைவிரித்தாடியது. தளத்தில் மக்களோடு மக்களாக இருந்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்களும் பெரியய்யாவிற்கும் அவனது குண்டர் கூட்டத்திற்கும் தாமும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்னும் நிலையிலேயே இருந்தனர்.

உதாரணமாக கொட்டடியை சேர்ந்த நான்கு இளைஞர்களை கழகத்தினர், கொள்ளைகாரர்கள் என கைது செய்தனர். உண்மையில் அவர்கள் கொள்ளைக்காரர்களா என்று பார்த்தால் இல்லை. சிறு திருட்டுகளை செய்யும் திருடர்கள். கொட்டடியைச் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர். யாழ்ப்பாண சமூகத்தால் ஒதுக்கப்பட்வர்கள். வறுமையை வாழ்வாக சாதியம் திணித்து இருந்தது. யாழ் சைவ வேளாள ஆதிக்கத்தில் ஒரு சிந்தனையாக இருப்பது, எங்கு எந்தத் திருட்டு நடந்தாலும் அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரோ அல்லது பொருளாதார வசதி குறைந்தவர்களோ செய்திருப்பார்கள் என்று கூறுவது, சாதிய ஆதிக்க வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே பல இயக்கங்களும் இயங்கின. இதற்கு கழகம் மட்டும் விதிவிலக்காக இருக்கவில்லை.

யாழ்ப்பாண நகரத்தில் எங்கு எது நடந்தாலும், அது தாழ்த்தப்பட்டவர்களான இந்த நால்வரும் தான் செய்திருப்பார்கள் என்ற எண்ணமும் அபிப்பிராயமும் இருந்தது. இந்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் கழகத்தினரால் இந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு மரண தண்டைனை வழங்கப்பட்டது. இவர்கள் நாலுபேரும், நான்கு வெவ்வேறு இடங்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர். வைத்தீஸ்வரா, ஸ்ரீதர், வின்சர், யாழ் பஸ்நிலையச் சந்திகளில், சமூக விரோதிகள் என்ற பட்டத்துடன் சுட்டு மின் கம்பங்களில் கட்டப்பட்டனர். இதை அறிந்த உறவினரும், அவர்களது கிராமமும் கொதித்து எழுந்தது. இதை மூடி மறைப்பதற்காக கழகத்தினர் இவர்கள் சமூகவிரோதிகள் என்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்ததுடன், பொய்யான ஆதாரங்களையும் முன்வைத்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்.


இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது தளத்தில் பொறுப்பில் நோபேட் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல தோழர்கள் இந்த நடவடிக்கையினை எதிர்த்து தமது கண்டனத்தினை எழுப்பிய போது, நோபேட் மௌனத்தையே தனது பதிலாக கொண்டிருந்தார்.

(1984 April )

மேலும் அன்று கழகத்தவர்களால் சிறு திருடர்களை (பசிக்காக பாண் திருடுபவன், கள்ள இளநீர் இறக்குபவர்கள், ....) பிடித்து மொட்டை அடித்து விடுவது வழக்கமாகவிருந்தது. இதனை ஒரு தோழர் எதிர்த்தார். உடனே அவரை உரும்பிராயைச் சேர்ந்த கழகத்தவர்கள் கைது செய்து, ஒரு வீட்டுக்குள் பூட்டி விசாரித்தனர். இதை அறிந்த சுழிபுரம் பகுதி கழகக்காரர்களும், இந்த விசாரணையில் இணைந்தனர். இந்த விடையத்தை அறிந்த நேசனும், நோபேட்டும் கூட கைது செய்யப்பட்டிருந்த தோழரை விசாரிப்பதாக சென்றிருந்தனர். நேசன் தனது கைத்துப்பாக்கியுடன் தான், தனது விசாரணையின் போது பிரசன்னமாகியிருந்தார். அந்த விசாரணை நடக்கும் போது இன்றைய தலித்தியவாதியான சுகனும், (முன்னாள் புளட் தோழர்) பார்வையாளராக அதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் முடிவில் கழகத்தின் முடிவுகளுக்கு மாறாக செயற்பட வேண்டாம் என எச்சரித்து, சிறைப்பட்டிருந்த தோழர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலை தான் தளமெங்கும் புளட்டினுள் பொது நிலையாக இருந்தது. தளத்தில் புளட் சீரழிந்து, மக்கள் விரோத அடாவடித்தனமான அமைப்பாகவே காணப்பட்டது. புளட்டினுள் சகல அதிகாரத்தினையும் இழந்து போன மக்கள்,  விடுதலையினை நேசித்த பல தோழர்கள் விரக்தியடைந்து வாழ்க்கை வெறுத்தவர்களாக காணப்பட்டனர்.


நோபேட்டுக்கும், காந்தன் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் பெரியய்யாவின் ஆட்களின் நெருக்குவாரங்களும் சந்தேகங்களும் எழுந்த போது, இந்தியாவில் கழகத்தை விட்டு தப்பி என்.எல்.எவ்.ரியின் (NLFT) துணையுடன் தலைமறைவானவர்கள். (நோபேட் இன் தியாகத்தை நான் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. அவரின் அரசியல் பாத்திரத்தைத்தான்  இங்கு குறிப்பிடுகின்றேன்)


தமது நிலை ஈடாட்டத்திற்குப் பின்னால் தான், இவர்களுக்கு விழிப்பு வந்தது. அதுவும் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் அல்ல. இதனாலேயே கழகத்தை விட்டு ஒளித்து ஓடினார்கள். இன்று தாம் கழகத்துடன் கருத்து முரண்பாட்டில் தான் கழகத்தை விட்டுப் பிரிந்தோம் என்று கூறுவது சந்தர்ப்பவாதமே. இவர்கள் பிரிந்து செல்லவில்லை மாறாக ஒழித்து ஓடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


(அடுத்த தொடரில் தீப்பொறி உருவாக்கமும் அதனால் ஏற்பட்ட பாதிப்பும்)


குறிப்பு: உரும்பிராயில் கைது செய்து அடைக்கப்பட்ட புளட் தோழர் இன்று ஜரோப்பாவில் வசிக்கின்றார். எனது தொடரை வாசித்த தோழர் என்னுடன் தொடர்பு கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளதுடன், அவற்றினை இத் தொடரில் இணைக்கும் படியும் கோரியுள்ளார். இனிவரும் தொடரில் அவை பொருத்தமான இடங்களில் இணைக்கப்படும்.

 

14. எம்மை புதைக்க, நாம் வெட்டிய குழி – (புளாட்டில் நான் பகுதி 14)

13. சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்று எழுதித் தருமாறு கூறினர் - (புளாட்டில் நான் பகுதி - 13)

12. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும் (புளாட்டில் நான் பகுதி - 12)

11. அடியில் மயங்கினேன், சிறுநீரோ இரத்தமாகவே சென்றது - (புளாட்டில் நான் பகுதி - 11)

10. எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்…புளாட்டில் நான் பகுதி - 10)

9. புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)

8. மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)

7. சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

6. நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

5. தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

4. தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

3. மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)