நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன4,"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு:

• சிங்கராம் என்ற இடத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட 19 பேர் நக்சலைட்டுகளல்ல, அப்பாவிப் பழங்குடிமக்கள் என்று சொன்ன குற்றத்துக்காக காங்கிரசு எம்.எல்.ஏ கவாசி லக்மாவின் போலீசு பாதுகாப்பை ரத்து செய்தார் மாவட்ட ஆட்சியர். காட்டுவேட்டையை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக்கொள்வதில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்.

• சரணடைந்த நக்சலைட்டுகள் என்று 2007 முதல் சிறைவைக்கப்பட்டிருக்கும் 79 பேரில் பெரும்பான்மையினர் அப்பாவிப் பழங்குடிகளென்றும், சிலர் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் என்றும் பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ பகிரங்கமாக அறிவித்த போதிலும், ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை.• காட்டுவேட்டை குறித்து போலீசு அறிக்கைகள் தவிர எதையும் பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்றும், போலீசுஅறிக்கைக்கு மாறாக எழுதினாலோ, மாவோயிஸ்டுகளின் அறிக்கைகளைப் பிரசுரித்தாலோ அரசைக் கவிழ்க்கும் சதிக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என்று கடந்த செப்டம்பர் மாதம் எல்லாப் பத்திரிகைகளுக்கும் போலீசு நோட்டீசே கொடுத்துவிட்டது. போலீசின் உத்தரவை மீறிய பத்திரிகையாளர்கள் சத்தீஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போலீசு ராஜ்ஜியத்தை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஜக்தல்புரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

• மொத்தத்தில், எந்த வகையில் அதிருப்தி வெளியிட்டாலும் அது கிரிமினல் குற்றம்; அரசுக்கு எதிராக யார் பேசினாலும், எழுதினாலும் அவர்கள் நக்சலைட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். மனித உரிமைப் போராளி மருத்துவர் பினாயக் சென், "சுதந்திர' ப் போராட்ட வீரர் ராம் குமார் அகர்வால், காந்தியவாதி ஹிமான்சு குமார், சுற்றுச்சூழலாளர் ஜெயந்த் போஹிதார் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது. இதுதான் மெக்கார்தேயிசம்!

• பிலாய் உருக்காலை தொடங்கப்பட்டபோது கூட பழங்குடியினரின் நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் 96,000 பேருக்கு அரசுத்துறையில் நிரந்தர வேலை கிடைத்தது. இப்போது நிரந்தர வேலையும் கிடையாது, நிவாரணமும் கிடையாது, நிலத்தைக்கொடு என்று மக்களின் சொத்தையும், தேசத்தின் வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பிடுங்கிக் கொடுக்கிறது அரசு. சென்ற ஆண்டு இரும்புத் தாதுவின் விலை டன்னுக்கு 5,800 ரூபாய் என்று உயர்ந்தபோது, அரசுத்துறை எஃகுஆலைகள் மூடிக்கிடந்தன. ஆனால், பைலதில்லா சுரங்கத்திலிருந்து உயர்தர இரும்புத்தாதுவை ஒரு டன் 400 ரூபாய்க்கு ஜப்பான் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. இவையெல்லாம் வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் பொய். இதுதான் ஏகாதிபத்தியம்!

• கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் தரமறுத்து தீர்மானம் நிறைவேற்றும் கிராமசபை உறுப்பினர்கள் துப்பாக்கி முனையில் போலீசால் மிரட்டப்படுகிறார்கள். மக்கள் கருத்தறிதல் நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசு முற்றுகையின் கீழ்தான் நடத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் மீறி நமது வளங்களைக் காக்கப் போராடும் பழங்குடி மக்களுக்கு நாடே நன்றிக் கடன்பட்டிருக்கிறது.


அவலத்தில் அரசு மருத்துவமனை போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்துவரும் தி.மு.க.அரசு, "கலைஞர் காப்பீடு திட்ட"த்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் ஏகபோக காப்பீடுநிறுவனத்தின் கொள்ளைக்கு பல கோடிகளை அள்ளிக்கொடுத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் திட்டமிட்@ட புறக்கணித்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் மாண்டுபோன பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 1325. இறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததாலும், அப்படியே இருந்தாலும் செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) இல்லாததாலும் மாண்டு போயுள்ளன என்ற உதிரத்தை உறைய வைக்கும் செய்தி கடந்த மாதத்தில் கசியத் தொடங்கியது. விபத்து அவசர சிகிச்சை, பாம்புக்கடி உள்ளிட்ட எல்லா விதமான உயிர் காக்கும் சிகிச்சைகள் தேவைப்படும் பிரிவுகளுக்கும் ஒரேயொரு வென்டிலேட்டர் மட்டுமே இம்மருத்துவமனையில் உள்ளது.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட ஓட்டுக்கட்சி பிரமுகர்களின் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக்காகவே, அரசு மருத்துவமனை எவ்வித அடிப்படை வசதியுமின்றி புறக்கணிக்கப்படுகிறது. அரசின் முழுநேர ஊழியர்களான மருத்துவர்கள் மட்டுமின்றி, இம்மருத்துவமனையின் கல்வி நிலையத் தலைவர் (டீன்) பொறுப்பில் உள்ள மருத்துவர் பாலசுப்பிரமணியமும், தங்கம் மருத்துவமனை என்ற தனியார்மருத்துவமனையை நடத்துகிறார். இதனால் மருத்துவர்களே மருத்துவமனையில் இருப்பதில்லை. காலை ஷிப்டில் செவிலியர்கள், பரிசோதனைக்கூடஆய்வாளர்கள், பணியாளர்கள் என இம்மருத்துவமனையில் ஏறத்தாழ ஆயிரம்பேர் வேலை செய்தாலும், அடுத்த ஷிப்டுக்குபோதிய ஊழியர் நியமிக்கப்படாததால், பிற்பகலில் எந்தப் பிரிவும ;இயங்குவதில்லை.

பயிற்சி மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தி பிற்பகலில் இப்பணிகளைச் செய்யவைக்கிறது, நிர்வாகம். போதிய அளவுக்கு மருத்துவர்கள் ஊழியர்களை நியமிக்காமல் நிர்வாகம் ஏய்த்து வருவதோடு, "அட்மிஷன் டே' என்ற முறைப்படி, ஓய்வின்றி தொடர்ச்சியாக 31 மணி நேரம் கட்டாய வேலையும் எடுபிடிவேலையும் வாங்குவதையும் கண்டு குமுறிய பயிற்சிமருத்துவர்கள், கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதலாக, 8மணி நேர ஓய்வை தாங்களே நடைமுறைப்படுத்தும் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தை ஆதரித்த பு.மா.இ.மு திருச்சி அரசு மருத்துவமனையின் அவலம், நிர்வாகத்தின் அலட்சியம், மனித உரிமைகளை மீறி பயிற்சி மருத்துவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தும் கொடுமை பற்றிய செய்திகள் நாளேடுகளில் வெளிவரும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. தொடர்போராட்டம் காரணமாக விசாரணை செய்ய மருத்துவக்கல்வி இயக்குனர் வந்த போது, பு.மா.இ.மு. தலைமையில் பயிற்சி மருத்துவர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

நேர்மையான விசாரணை நடத்தக்கோரி மருத்துவமனையெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசை ஏவி நிர்வாகம் கிழிக்க முற்பட்டபோது, பயிற்சி மருத்துவர்களும் சிகிச்சை பெற வந்த பொதுமக்களும் போராடித் தடுத்தனர். பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம் முன்னேறுவதைக் கண்டு அஞ்சிய நிர்வாகம், பரிசோதனைக் கூடங்கள் முறையாக இயங்கும் வகையில் ஷிப்டு முறையில் போதிய அளவுக்கு ஊழியர்களை நியமிக்கவும், தொடர்ச்சியாக 31 மணி நேரம் வேலை செய்யும் பயிற்சிமருத்துவர்களுக்கு 6 மணி நேர ஓசூவு அளிக்கவும் ஜனவரி 4ஆம் தேதியன்று உறுதியளித்துள்ளது. உறுதியான போராட்டத்தால் கிடைத்த இம் முதற்கட்ட வெற்றியோடு முடங்கிவிடாமல், வென்டிலேட்டர் முதலான அவசியமான சாதனங்களைப் பொருத்தாமல் இன்றுவரை நிர்வாகம் இழுத்தடிப்பதை அம்பலப்படுத்தி, பு.மா.இ.மு. தலைமையில் திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிற்சிமருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வருவதோடு, மக்களைத்திரட்டி அடுத்தக் கட்டப் போராட்டத்தைத ;தொடர ஆயத்தமாக pவருகிறார்கள்.-

பு.ஜ.செய்தியாளர்