வாசகசாலைக்குள்
வந்து போனவர்களெல்லாம்
வாசித்து துப்பிப்போட்ட
வார தின கடதாசிப் பட்டாளம்
மல்லாக்க கிடந்த மாலையொன்றில்
சிட்டுக் குருவி நுழைந்ததுள்ளே

எல்லோரும் வாசித்ததை
தானும் வாசித்து
மண்டை கனத்தபடியே
வெளியேறியது அது

தெருவில்
போவோர் வருவோரெல்லாம்
தம்மை மூடி மறைத்தபடி
நிர்வாணமாய் நடந்தனர்
எல்லார் பிடரிகளாலும்
வாசித்துச் சாப்பிட்ட
புதினங்களும் புனிதங்களும்
ஒழுகிக்கொண்டிருந்தன

தலை சுற்றியது சிட்டுக்குருவிக்கு

எதிரில் தென்பட்ட
இடிந்த சுவரில்
தனது
மண்டையை மோதி
மயக்கம் போட்டு விழுந்தது சிட்டுக்குருவி.

விழித்துப் பார்த்தபோது
யாரோ அதற்கு
உடை அணிவித்துவிட்டு போயிருந்தனர்

இப்போது
தான்
நிர்வாணமாய்க் கிடப்பதை
முதன் முறையாக
உணர்ந்து கொண்டது சிட்டுக்குருவி.
(தமிழ் பேசத் தெரிந்த அனைத்து கம்யூட்டர்களுக்கு சமர்ப்பணம்)
http://www.uyirmei.com/2010/03/blog-post_13.html