இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

 

""நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

 

""பொறுக்கி அரசியல்'' என்று சொல்லும்போது, இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்கிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்ததாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல்தான்.

 

பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:

 

காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியக் கிராம சமுதாயத்தில் பண்ணை அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத்தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கிடைத்து, குறைந்தபட் சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

 

வருடத்தில் பல நாட்கள் வேலைவாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு, ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரைகுறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள், படித்தும் வேலை வாய்ப்பின்றி, சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கெனவே நகரத்து குடிசைப்பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.

 

பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்ப்புறச் சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி, கள்ளச் சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோதச் சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களைப் பொறுக்கி அரசியலும் அதன் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.

 

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

 

பிற்போக்கு சித்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடிமறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், அவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி, தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

 

கவர்ச்சிவாதம் (பாபுலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர். உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய ""அண்ணாயிசம்'' பொறுக்கி அரசியலின்கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். ""முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்'' மூன்றும் இணைந்ததுதான் "அண்ணாயிசம்' என்று எம்.ஜி.ஆர். அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து "அண்ணா' யிசத்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது. அதேசமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது இதுதான் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுப்படுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீநிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமூகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே, ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் ""அன்பளிப்பு''களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்க ""இலவச அன்பளிப்பு''த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது இதுதான் எம்.ஜி.ஆரின் "அண்ணாயிசம் கவர்ச்சிவாதம்.'

 

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேத் காரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள், தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால், பிழைப்புவாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று, சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.

 

தலைவர்கள் மட்டுமல்ல; நகரவட்டங்கள் கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்புவாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எந்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதைப் பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்புவாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.

 

தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்கிறார்கள். மாற்று காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் வறட்சி தீ விபத்து போன்ற நிவாரணத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னின்று, அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீசு நிலைய வழக்குகள், வேலை வாய்ப்புகள் சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ""அங்கீகரிக்கப்பட்ட'' தரகர்களாக இருக்கிறார்கள்.

 

கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்புவாதிகள் கிராமப் பஞ் சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர். ஆட்சியில், கோவில்கள், வாரியங்கள், பள்ளிகல்லூரிகள் போன்ற சகல மட்டங்களிலும் கட்சி பிழைப்புவாதிகளுக்கு ""பொறுப்புகள்'' பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ""ஏற்பாடு'' செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார், எம்.ஜி.ஆர்.

 

பொறுக்கி அரசியல்: தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு

 

பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியம் பெருமை உண்டு. அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுகள், வட பாதிமங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே., சிவசைலம், மதுரை டி.வி.எஸ். போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். ஓட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்துச் சாதி, அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார். அந்தச் சாதி அரசியலை வீழ்த்தப் பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. ""பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்'' போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால், காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார், கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச. என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர், கருணாநிதி.

 

அவர்கள் திராவிட அரசியலின் ""பழக்கதோஷம்'' உள்ளவர்கள் கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் என்ற நிலையில், முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட் சியை உருவாக்கினார், எம்.ஜி.ஆர். இன்று, வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. ""எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்''தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம், பிழைப்புவாதம்தான் இவர்களின் லட்சியம், பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!

 

பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்

 

காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1967 தேர்தலில் பல மாநிலங்களிலும் தோற்கடித்தனர். மத்தியிலும் அக்கட்சி அற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா, மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி.பி.குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1971 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி, அரசியல்பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது, அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதேசமயம், பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.

 

குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்ந்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து, அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல, பொறுக்கிய அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூ ர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.

 

அவசரநிலை ஆட்சிக்குப் பிறகு, பிரச்சாரங்கள், விளம்பரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லா தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது, காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரு நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்ட கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிர தேசம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்ந்துள்ளது.

 

சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப் போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபர்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில், அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில்மயமாக்குவது, திறமைநிர்வாகத்துக்கு முதலிடம் தரப்போவதாக சவடாலடித்தவர், கவர்ச்சி வாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று தஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான ""இலவச அன்பளிப்பு'' திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறி வைத்துச் செயல்படுகிறார். எம்.ஜி.ஆர். பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலைபொறுக்கி அரசியல்:

 

காமராஜரின் காலத்தில் பண்ணையார் முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது, ""பழுத்த ஜனநாயகவாதிகள்'' அருவெறுப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத்துரையின் ""பெருந்தன்மை'', கருணாநிதியின் ""நிர்வாகத் திறமை'', பிறகு எம்.ஜி.ஆரின் ""மனிதாபிமானம்'' ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள், அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்குப் பீதியூட்டினாலும், ராஜீவ் பதவிக்கு வந்தபோது ""பரிசுத்தம்'' வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது ""பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு''ப் பீதியூட்டுகிறது.

 

""உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள். அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது'' என்று ""சமாதானம்'' சொல்கிறார்கள், போலி கம்யூனிஸ்டு கட்சியினரும், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்அரசியலுக்கு வெளியிலுள்ள ""பழம் தேசபக்தர்கள்'' ஆகிய ""பழுத்த ஜனநாயகவாதிகளும்.'' ஆனால், பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதிநிலை. காந்தியம், இந்து ராஷ்டிராம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப் போகும் நிலையில், நாடாளு மன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு, அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசிய வாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைந்ததைப் போல, கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்புவாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி.ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.

 

ஒழுங்குபடுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள், பொருளாதாரவாதத்தின் செல்வாக்கில் இருக்கிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் பிழைப்புவாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதாரவாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து, பாமரத்தனமான சோசலிச, கம்யூனிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவு ம், மார்க்சியலெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து, அதை முறியடிக்க முடியும்.

 

 • ஆர்.கே.

 

(புதிய ஜனநாயகம், 115 மார்ச் 1988 இதழில் வெளிவந்த கட்டுரை)