விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த வியாபாரிகள், கூலிக் காசுக்காக மக்களை நிலங்களில் இருந்து பிரித்து வீசுகிறார்கள். இன்றைய இந்தியாவின் மக்கள் விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, நோய்க்கு தரமான மருத்துவமின்மை, ஆரம்பக்கல்வி மறுக்கப்படுதல், வேலையிழத்தல் என ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் இன்றைய தினத்தில் காலம் காலமாக வாழ்ந்த நிலங்களை அவர்கள் பறி கொடுத்து விட்டு எங்கோ அரசு கொடுக்கும் தரிசு நிலங்களில் குடிசை போட்டு வாழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மழைக்காலம் தொடரும் என்ற எண்ணத்தில் சென்னை நகரம் முழுக்க ஆயிரக்கணக்கான குடிசைப் பகுதி மக்களை கூவக்கரையோரங்களில் இருந்து இரவோடு இரவாக அப்புறப்படுத்தி செம்மஞ்சேரிக்கு அனுப்பியிருக்கிறது அரசு. அந்த இரவில் சாலையோரத்தில் அமர்ந்திர்ந்த ஒரு குடிசை வாசியிடம் பேசிய போது அவர் சொன்னார் “ சார் நாங்க மொதல்ல கே.கே. நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பக்கம் குடியிருந்தோம். அங்கே எங்க குடிசை எல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிங்க எங்களை அங்கே மீண்டும் குடியேற அனுமதிக்கவில்லை. நாங்க அங்கிருந்து இங்கே வந்து குடியேறினோம். (பச்சையப்பன் கல்லூரிக்கு பின்பக்கம் உள்ள கூவக் கரையோரம்) “ என்று சொன்னார். கே.கே. நகரில் இருந்து இந்த ஏழைகள் இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகாலம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் குடியிருந்த கே.கே.நகர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி தனியார் குடியிருப்புகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

கடல் மலை விற்பனைக்குசென்னை ஆயிரம்விளக்கில் இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை; கோடீஸ்வர நோயாளிகள் சிகிட்சை பெற்றுக் கொள்ளும் உயர் தர மருத்துவமனை. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ சமீபகாலத்தில் சந்திக்கும் பெரிய பிரச்சனை டிராபிக் நெருக்கடி அகலமில்லாத சாலை, முண்டியடிக்கும் வாகனங்கள் என அப்பல்லோ திணறிப் போக அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது அப்பல்லோவின் அழகை தொல்லைப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கும் கூவமும் அதை அண்டி வாழும் ஏழைகளும்தான். ஒரே நாளில் மாநகராட்சி அதிகாரிகள் வந்தார்கள் அவர்களை அப்புறப்ப்டுத்தினார்கள். இப்போது அந்தக் கூவத்தின் மேல் பகுதியை மட்டும் நீளமாக மூடி அதை பார்க்கிங் பகுதியாக விஸ்தரித்திருக்கிறார்கள். என்பதோடு இடது பக்க குடிசைப்பகுதியை ஒரு குட்டி பூங்காவாக மாற்றி அதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். இப்போது அந்த இடம் ஏழைகள் நுழைய முடியாத எழில் மிகு சென்னையாக இருக்கிறது.

அரசு புறம்போக்கு நிலங்கள் என்பது ஒரு காலத்தில் ஏழை மக்களின் நிலங்களாக இருந்தன. அவர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப ஒரு குடிசையைப் போட்டு அங்கு வாழ்வார்கள். ஆனால் இப்போது அரசு புறம்போக்கு நிலம் என்பது தனியார் முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள். அரசியல்வாதிகள், ரௌடிகள், ஆகியோரின் சொத்துக்களாக மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் சென்னையை பங்கு போட்டு கபளீகரம் செய்து விட்ட இந்த திருடர்கள் இப்போது சென்னைக்கு வெளியே உள்ள நிலங்களை குறிவைக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூர் சென்ற போது வயல் வெளிகளை எல்லாம் பிளாட் போட்டு விற்க அறிவிப்பு செய்திருக்கிறார்கள். எல்லாமே முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள்.

இன்னொரு ஐந்து ஆண்டுகள் கழித்து உத்திரமேரூர் செல்லும் போது அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும். ஆனால் தொழிற்சாலை வருவதால் அப்பகுதி மக்களுக்கு பயன் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் தனியார்துறை தொழில் வளர்ச்சி  என்பது உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி மட்டுமே வளரும் வல்லமை கொண்டது. முதலில் அவனுடைய நிலங்களை அவனிடம் இருந்து பிடுங்குவது பின்னர் அந்த விவசாயியையும் அவரது குடும்பத்தையும் குறைந்த கூலிக்கு தன் கம்பெனியிலேயே வேலைக்கும் வைத்துக் கொள்வது. காலம் காலமாக நீடித்து வரும் இந்த சுரண்ட்ல் வடிவத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் தொழில் வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு. தஞ்சையில் ரசாயான ஆலை அமைக்கும் டி,ஆர். பாலுவும் இதையேதான் சொல்கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பெயரால் அரசே நிலங்களை சூறையாடும் கொடுமை.

இன்றைய தேதியில் நாற்பதாயிரம் படையினரைக் கொண்ட போர் நடவடிக்கையை மாவோயிஸ்ட் போராளிகள் மீது தண்டகாரன்யா மாநிலங்களில் ஏவியிருக்கிறது இந்திய அரசு. ”ஆபரேஷன் கிரீன்கன்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்போர் பயங்கராவாதிகளுக்கு எதிரானப் போர் என்று பிரகடனப்படுத்துகிற இந்திய அரசு, ஒரு பக்கம் மாவொயிஸ்ட் மக்கள் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை அழித்தொழித்து விட்டு தண்டகாரன்யா மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியார் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது.இப்பகுதியில் ரப்பர், தேயிலை, உள்ளிட்ட ஏராளமான இயற்க்கை வளங்கள் தொடர்பாக 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டிருக்கிறது இந்திய அரசு. இந்த ஒப்பந்தங்களுக்கு விரோதமாக மக்களிடம் நிலம் இருப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. நந்திகிராமில் சி,பி. எம்மின் அடவாடித்தனமான முதலாளிகளுக்காக விவாசியிகளைக் கொன்றதும் அதற்காகத்தான். அதனுடைய தொடர்ச்சிதான் லால்கரில் தொடங்கி வடகிழக்கு எங்கும் பரவி வருகிறது.

நாட்டில் எல்லையோர மாநிலங்களாக இப்பழங்குடி மக்கள் நீண்டகாலமாக தங்களின் பல்வேறு சிவில் உரிமைகளுக்காகவும், பொருளாதார, உழைப்பு உரிமைக்காகவும் போராடிவருகிறார்கள். துவக்கத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தமிழகம். கேரளம், கர்நாடகம் போன்ற பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய நக்சல்பாரிகள் இப்போது ஒன்றிணைந்த மாவோயிஸ்டுகளாக வடக்கு-மத்திய-கிழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் பூர்வீக நிலங்களை தங்களிடமே ஒப்படைக்கக் கோரும் அம்மக்களின் நியாங்களை காது கொடுத்துக் கூடக் கேட்க தயாரில்லாத மத்திய அரசு, அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறது. ஆனால் நிலம் உள்ளிட்ட அவர்களின் ஏனைய கோரிக்கைகள் எதையும் அரசு செவிமடுக்கத் தயாரில்லை. காரணம் நிலம் மக்களிடம் இருப்பதை அரசு விரும்பவில்லை. இது வடகிழக்குக்கிற்கு மட்டுமான பிரச்சனையில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளின் போது கச்சத்தீவு மீட்பும் ஒரு கோரிக்கையாக இங்கே வைக்கப்படுகிறது. ஆனால் கச்சத்தீவு மீட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எஸ். எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடல், கடற்கரை, அதை அண்டிய பிரதேசங்கள் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் எண்ணிலடங்கா ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்திய அரசு. நிலம் எப்படி தனியார் முதலாளிகளுக்கோ அது போல கடலும் தனியார் முதலாளிக்குத்தான்.

வன்னியுத்தத்தின் முடிவையும், தமிழக மீனவர் பிரச்சனையையும் இன்று சரியாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆரமபத்தில் எங்கள் கடலில் வெறும் கட்டுமர மீன்பிடிப்பு மட்டுமே இருந்தது. பின்னர் விசைப்படகு வந்தது. அப்போது கட்டுமர மீன்பிடிப்பை விசைப்படகுகள் அழித்தது சிறிய கண்ணிகளைக் கொண்ட வலைகளைப் போட்டு மீன்பிடித்ததால் கட்டுமர மீன்பிடுத் தொழிலாளர்கள் அடியோடு பாதிக்கப்பட்டார்கள். தமிழகம் முழுக்க கடற்கரை எங்கும் இது மோதலாக வெடித்தது. ஆங்காங்கு கொலைகளும் குண்டு வீச்சுகளும் கூட அப்போது நடந்தது. கட்டுமர மீன்பித் தொழிலில் பாரம்பரீய மீனவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்தனர். விசைப்படகு வந்த போது பெரும் பண்ணைகள் லட்சக்கணக்கில் செலவு செய்து விசைப்படகு வைத்து பெரும் பொருள் ஈட்டினர்.

ஆனால் இந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் சொந்த சகோதரனின் தொழிலை நாம் பாதிப்படையச் செய்து அவன் வீட்டு உலையில் மண்ணள்ளிப் போடுகிறோம் என்ற அக்கரையற்று அவர்களுக்கென்று வகுப்பப்பட்ட விதிமுறைகளையும் மீறி கட்டும்ர எல்லைக்குள்ளேயே மீன் பிடித்து அவன் பிழைப்பைக் கெடுத்தனர். கடைசியில் நாற்பது நாள் மீன்பிடிக்கக் கூடாது என்று மீன் குஞ்சுகள் பெருக்கக் காலத்தில் தடை எல்லாம் கொண்டு வந்து இன்று அது நடைமுறையில் இருந்து வந்தாலும் விசைப்படகுகளில் அசுர வளர்ச்சியும் தொழில் சார் அறம் கடந்த மீன் பிடித்தலும் கட்டுமர மீனவர்களின் வாழ்வைச் சிதைத்தது என்பது உண்மை.

அன்றைக்கு கட்டுமர மீனவர்களுக்காக பேசவோ அவனுடைய வாழ்க்கைப் பாடுகள் குறித்துப் பேசவே எவருமே இல்லாமல் போயினர். பெரும் பண்ணைகள் கடலோர கிராமங்களைக் கட்டுப்படுத்தி தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இன்று  கடந்த இருபது ஆண்டுகளாக கட்டுமர மீனவனின் வாழ்வில் வீசிய சூறாவளி விசைப்படகு மீனவனின் வாழ்விலும் வீசுகிறது. எளியவன் என்பதால் இவர்கள் கட்டுமர மீனவர்களை வதைத்து முன்னேறினார்கள். ஆனால் இப்போதோ இந்த விசைப்படகு மீனவர்களின் முன்னால் நிற்பது பன்னாட்டு பகாசுர மீன் பிடிக் கப்பல்கள். தங்களின் வீட்டு முற்றம் வரை வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். என்ன? என்று கேட்கு யாரும் இல்லை. கட்டுமரங்கள் கரையொதுக்கி வைக்கப்பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக விசைப்படகுகளும் கரையேற்றப்படுகின்றன? ஏன்?

தொடரும்….

வெண்மணி

http://www.vinavu.com/2009/12/18/privatization-of-nature/