-சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.

லங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் இனம்சார்ந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளாலும், சிறுபான்மை இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்.

இவ்வொடுக்குமுறைகள் மனித நடாத்தையின் அனைத்துத் தளத்திலுமாக(நிலம்-பண்பாடு,மொழி,இன அடையாளம்,சாதிய,பெண் அடையாளம்,பிரதேசம்,ஆன்மீகம்,அறிவு-கல்வி,வரலாற்றுப் பெருமிதம்,உயிரியல்மரபு என…) நடந்தேறியது-நடந்தேறுகிறது!

இதன் பாதகமான பக்கத்தின் விளைவாகப் பல நிகழ்ந்தேறினெ:

>>இனம்சார் விடுதலை,தனித்தேசம்,புரட்சிகர ஐக்கிய இலங்கை,தொழிலாளர் வர்க்க விடுதலை இத்யாதி<< 

எல்லாம் தொடர்ந்த இலங்கையின் வரலாற்றில் அழிவும்,சூழ்ச்சியும் அந்நியர்களால் ஏற்பட்டுத் தமிழ் பேசும் இலங்கை மக்கள் இப்போது இராணுவ ஒடுக்குமுறைக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுத் திறந்தவெளிச் சிறையுள் வாழ்வதாகவெண்ணிச் சாகின்றார்கள்(சாவு எனப்படுவது அனைத்து மனித விழுமியத்தையும் உட்கொண்டது).

இந்நிலையில்,போராட்டப்புறப்பட்டவர்கள் செய்த அழிவு அரசியல்-போராட்டத்தில் பற்பல சிதைவுகள், நமது மக்களைப் பலியிட்டன.

புலிகள் என்பது, அதுள் பிராதான பரந்துபட்ட மக்கள் விரோதச் சக்தி.இது, இலங்கைப் பாசிச இனவாத அரசினது அதே தளத்தில் வைத்துப் பேசப்பட வேண்டியது(ஒடுக்குமுறையாளர்களை இனம்-மொழிசார்ந்து வகைப்படுத்தித் தமக்குரிய பொருத்தப்பாடு(சொந்த இனம்…) ஒத்ததை, ஓரளவேற்று மென்முறையாக அணுகுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்).

இந்தச் சக்தியின்(புலி-அரசு,மற்றைய இயக்கங்கள்-அந்நிய ஆர்வங்கள்) அனைத்துக் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகளும் இப்போது பகிரங்கமாக ஆய்வுக்குட்படுத்தி, மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் தேடியாக வேண்டும்.

இதன்பொருட்டு,இப்போது புதிய வியூகங்களாகத் தொடரும் அரசியலைக் கேள்விக்குட்படுத்தியாகவேண்டும்.

தோற்கடிக்கப்பட்ட மக்களினம் ஒருபுறம்.மறுபுறம், கடந்தகாலப்“போராட்ட“த்தொடர்ச்சி இன்னொரு புறமுமாக நமது மக்களைச் சிந்திக்க விடாது-வாழ்வைச் செப்பனிடவிடாது,இலங்கை அரசினது இராணுவ ஒடுக்குமுறையை மேலும் மக்கள்மீது திணிக்கும் அடுத்தகட்ட“போராட்ட“பாதையென அதே, கயமைமிகு இயக்க வாதம்!

இது,தகவமைக்கும் வியூகத்தின் தெரிவில்“மே 18 இயக்கம்“ஒரு குறியீட்டு அரசியலை எமக்குமுன் தள்ளுகிறது.அது,பரவலாக விளங்கத் தக்கது.

>>இதைச் செய்பவர்கள் யார்?,

அவர்களது கடந்தகாலத்தின் போராட்டப் பங்கு என்ன?<<

இதன் விளைவாக மக்கள் எங்ஙனம் இலங்கைப் பாசிச அரசுக்கு இரையாக்கப்பட்டார்கள்? என்பவைகள் நீண்ட கேள்விகள்.

கடந்தகாலத்தில், தீப்பொறியாக இயக்க அராஜகத்துக்கு எதிராக மேலெழுந்தவர்கள்,தமக்குள் இலக்குகளை வகுத்துக் கோலாச்சிய இயக்க அராஜகங்களுக்கும்-அந்நிய ஆதிக்கத்துக்கும் உளவு பார்ப்பவர்களாக மாறியது வரலாறு.பின்னாளில்,காலத்துக்காலம் மாறிவரும் சூழலில் தாம்சார்ந்த அரசியலை-சதியை,புரட்சியின்பேரால்-தமிழீழத்தின் பேரால் மக்கள் முன் வைத்தவர்கள் இப்போது,இந்தப் புலிப்போராட்டத்தின் தோல்வியில் மேலெழுந்த சூழலைத் தமக்காகத் தகவமைக்க மேலும் „மே.18 இயக்கத்தை“ நமது மக்களுக்குள் முன் தள்ளுகின்றனர்.இதுவே,பரவலாக விமர்சனத்துக்கான தேவையைத் „தீப்பொறி“க் குழுவின் வரலாற்று ரீதியான செயற்பாட்டின்மீது வேண்டி நிற்கிறது.

இதன் அடிப்படையில்,இன்று நம்முன் மீளவொரு கட்சிகட்டி, மக்களுக்காகப் போராடுவதற்குச் சிந்தாந்தத்தோடு(வியூகத்தின் தேசியவாதம்-தேசம் குறித்த கட்டுரை) முன்வந்திருக்கிறார் இரகுமான் ஜான்.கடந்த காலத்திலும் இதே பாணியாக „தமிழீழ“ மக்கள் கட்சி கட்டிச் செயற்பட்டார்.

இன்று,எனது விவாதம் இவைகள் நோக்கியது.

>இரகுமான் ஜான் என்பது ஒரு பொது அடையாளம்<அது,ஒரு அமைப்பின் குறியீடாகிறது!ஏனெனில்,காலத்துக்காலம் கட்சி-பத்திரிகை,சித்தாந்தமென இவரது தெரிவில் நமக்குமுன் தள்ளப்படுவது(இதைக் குறுக்கி,அவசரம்-தனிநபர் தாக்குதல் என்போர் ஒதுங்குக!இவர்கள் கடந்தகாலத்தில் தம்மால் முன் தள்ளிய தவறுகள் குறித்து இன்னும் மௌனித்திருந்துவிட்டு, நாம் கேள்விகள் கேட்கும்போது அதைத் தனிநபர் வாதம்-தாக்குதல் என்போர் கடைந்தெடுத்த அராஜகத்துக்கான இருப்பை மேலும் தொடர விரும்புவோரென்பது என் தாழ்மையான கருத்து)

இத்தகைய இயக்கப்பாட்டில்,கடந்தகாலத்தில் தீப்பொறிக்குள் நிகழ்ந்த இயக்க அராஜகத்துக்கு(இது மக்கள்மீது பொய்யுரைத்துத் „தமிழீழம்“ பேசிப் படுகொலை அரசியல் செய்தும், தமது அந்நிய எஜமானர்களுக்கு உடைந்தையான பாசிசத்தைத் தமிழ்பேசும் இலங்கை மக்கள்மீது மட்டுமல்ல அனைத்து மக்கள்மீதும் ஏவியது.), அதிகாரத்துக்கிசைவான போக்கு எங்ஙனம் நிகழ்ந்தது?இவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜான் தலைமையில் மிக நெருக்கமான மக்கள் நலனைக் காவுகொள்ளும் போக்கோடு,அதாவது, ஒன்று கட்சியாக அல்லது பத்திரிகையாக உருமாறினார்கள்.இந்த வகையில் இவர்களது தெரிவுகள் மக்கள் நலன் என்றும்,ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலையென்றும் சொல்கின்றனர்.

இந்தச் செய்கையின் வழி தம்மால் முன்தள்ளப்பட்ட இயக்கம்,பத்திரிகை முரண்பட்டு,அதிகாரத்துக்கு உளவு(சாதகமாக) ஆதிக்கச் சக்திக்குடந்தையாக இயங்க முற்படும்போது,அதை இயங்கவிட்டபடி,“மக்கள் நல-நேர்மையான,புரட்சிவாதி“இரகுமான் ஜான் வெளியேறிவிடுகின்றாரென, அவரது“தோழர்கள்“,விசுவாசிகள் கூறுகிறார்கள்.

சரி,இருக்கட்டும்.அவர் அப்பளுக்கற்ற >புரட்சிவாதியாக< இருக்கட்டும்.அவர் நேர்மையானவரென்றும் இருக்கட்டும்.

இந்த அடையாளம்,அல்லது முகத்தை அவருக்குப் பொருத்தும்போதாம் நமக்குள் கேள்விகள் எழுகிறது.
அக்கேள்விகள் வருமாறு அமைகின்றது:

காலத்துக்குக் காலம் இரகுமான் ஜான் முன்தள்ளிய செயற்பாடுகள் சீரழிந்து, ஒடுக்குமுறையாளர்களது உறுப்பாக மாறிப்போனதென்றால் அது குறித்து நீங்கள் பகிரங்கமாக >அப்போது< மக்களிடம் இதை அம்பலப்படுதாது எதனால்?

அன்று, புளட்டின் அராஜகத்துக்கு எதிராக நீங்கள் போராடியதென உங்கள் தீப்பொறியை 1985 ஆம் ஆண்டு முன் பகுதியில் மிக நெரிக்கடிக்குள்கொணர்ந்து, மக்களிடம் உண்மைகளைச் சொன்னதென்றும்,அராஜகத்தை-மக்கள் விரோதப் போக்கை மக்களிடம் கொணர்ந்ததாக இருக்கும் வரலாற்றில், தளம் மாறி மேற்குலக ஜனநாயகச் சூழலில் கட்சி-பத்திரிகை செய்தவர்கள்,தமக்குள் முரண்பாடு,புலிக்கு உளவு நிறுவனமாக மாறிய கட்சி,பத்திரிகையை,அதிலிருந்து வெளியேறிய ஜான், ஏன் மக்களிடம் >இதை< அம்பலப்படுத்தவில்லை?

தொடந்து இத்தகைய அமைப்பும்,அதன் கருத்தியல்-சித்தாந்த யுத்தமும் புலிக்கு முண்டு கொடுத்ததை >எதன்< பொருட்டு அனுமதித்தார் இந்த ஜான்?

தனது உயிரன் பெறுமதி கருதியா?

அல்லது, புரட்சியின்(…) தந்திரோபாயம் கருதியா?


அப்போது, இவரால் முன்தள்ளப்பட்ட கட்சி,பத்திரிகை புலிக்கு முண்டு கொடுத்து ஒரு இனத்தையே கொன்றுகுவிக்கும் அரசியலை, போராட்டத்தைச் செய்து மக்களைக் கொல்லும்போது,அங்கு பலியாகிய மக்களது உயிர் இவரது உயிருக்கு-புரட்சிக்கு(…) இணையானதில்லையா?

இது இப்படிக் கேட்பதில்லை நண்பர்களே!

இது அவசியமும் இல்லை.

இவர்கள் தமது கடந்தகாலத்துக் கள்ள உறுவுகளால் ஏதோவொரு ஆதிக்க சக்திகளுக்கு உறுப்பாகவே இருக்கின்றனர்.அதை, மேலும் தொடர்வதற்காக எதையும் புலிகளைப் போலவே மக்களிடம் முன்வைப்பதில்லை.மூடிய அரசியலினுள்,தமது சதி அரசியலைத் தொடர்வது இவர்களது திசை வழியாக இருப்பதால், மக்களிடம் அம்பலப்படுத்தித் தமது இலக்குகளை உடைக்க இவர்களது அந்நிய எஜமானர்கள் இவர்களை அனுமதிப்பதில்லை.

இப்போதுகூட, இரகுமான் ஜானைக் காப்பதற்கான அனைத்து முயற்சியின் தெரிவில்(அதே இயக்கவாத மாயை) ஏதோவொரு முறையில் „அவர் தவறு செய்தவர்“எனக் கருத்துக்கட்டியபடி, அவர் கடந்தகாலத்தில் தனது அரசியல் நடாத்தையைச் சுயவிமர்சனம் செய்யும்பட்சத்தில் அவரோடு இணைந்து வேலை செய்வதென்கிறார்கள்.

நல்லது.

புலிகளால் பாசிசம்-இயக்கச் சர்வதிகாரம் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டு, மக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பை-அதன் அரசியல் சதியை, மேலும் தேசியவிடுதலைப் போராட்ட இயக்கமாக அனுமதித்து, இவர்கள், இதுவரை கொல்வதற்கான சித்தாந்தைத் எந்தப் புரட்சியின் „வியூகத்தின்“ மூலம் மௌனித்துச் செயற்பட்டார்கள்?

மக்கள்மீது திணிக்கப்பட்ட யுத்தம், தேசியவிடுதலைக்கானதெனச் சொன்ன இவர்களது கட்சி,பத்திரிகை தவறு செய்கிறதென்றும்,உளவு பார்ப்பதென்றும் >ஜான் முரண்படுவதானால் <அவரது வெளியேற்றத்தின்படி, மக்களிடம் தவறான இயக்கத்தை அம்பலப்படுத்தாதுபோனது வரலாற்றுக் குற்றமில்லையா?

வெளியேற்றத்தை, உள் சுற்றாகக் கடிதத்தின் மூலம் வழங்குதலும்-காரணத்தை அதுள் எழுதுவதும்,சதிகார அரசியலை மேலும் இயங்கவிடுவதென்றுதானே அர்த்தமாகிறது?

இவையெல்லாம், அதுவல்ல.

தீப்பொறி,கோவிந்தனின் கொலையோடு, மக்கள் விரோத அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்தது.அது வெவ்வேறு சக்திகளால் வழிநடாத்தப்பட்டது.அதுள், இரகுமான் ஜான் தனது அரசியல் சதிகளைத் தன்னைப் பிடிகொடாது நடாத்தி, இதுவரை தன்னைத் தூய புரட்சிவாதியாகக் காட்டுகிறார்.இதுதாம், இன்று எதிர்ப்பு அரசியல் போராட்டங்களைத் தமக்காகத் தகவமைத்துத் திசை திருப்பும் ஆதிக்க சக்திகள் செய்யும் கைங்காரியம்.

இதுள், இரகுமான் ஜான், தன்னால் முன் தள்ளும் ஒவ்வொரு கட்சியும் தவறிழைத்தபோது, அதை மௌனமாக இருந்து அனுமதித்தபடி, தன்னை அதிலிருந்து உடைத்து, அதை மக்கள்மீது இயங்க அனுமதித்து வருவது>ஜான் தன்னைத் தொடர்ந்து உளவு சக்திகளுக்கிசைவான அரசியலில் மேலும் மறைவாக இருத்திக் கொள்வதற்கே<

இது, எந்தத் தவறையும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும்.

தம்மால் முன்தள்ளப்பட்ட அமைப்பின் கொலை அரசியலை மக்கள் கேள்வி கேட்கும்போது, தவறுளைத் தானே பொறுப்பெடுக்காது, பலரில்-மற்றவர்கள்மீது போட்டுவிட்டுத் தன்னைத் தர்காத்துக்கொள்ளும் உத்தி- கபட நாடகமே இது.வியூகத்தின் தலையங்கம் இதை உறுதிப்படுத்தும்!

இந்த வகைப் பேர்வழிகளுக்கு உலகு தழுவிய ஆதிக்கச் சக்திகளோடு நிறைந்த தொடர்புகள் இருக்கிறதா?

புரட்சிகரமாக மக்கள் போராடாதிருப்பதற்காக, அவர்களது புரட்சிகரக் கட்சியின் தோற்றுவாயை உடைத்துச் சில உதிரிகளைப் புரட்சிகரமாக இயங்க அனுமதிக்கும் மேற்குலக இராஜ தந்திரமே இவர்கள் மூலம் தெளிவாகிறது.இது, எப்போதும், காலத்துக்கு முந்திய கட்சிகள்-இயகத்தோடு ஒடுக்கப்படும் மக்களிடம் „கட்டியெழுப்பப்படும் அரசியலின்வழி அறிமுகமாககும்“.இறுதியில், அந்த மக்கள் கூட்டத்தை அடிமையாக்கிச் செல்லும்.

இதுவே,புலியிடமிருந்தும்,இப்போதைய >மே.18 இயகத்திடமும்< இருந்து நாம் கற்கும் பாடம்.இதைத்தாண்டி எந்த இரகுமான் ஜானும் மக்கள் நல அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை.

இங்கே, உண்மைகளைக் கண்டடையுங்கள்.

நானோ அல்லது எவருமே இன்றைய மக்களது வலியைத் தொடர்ந்திருத்தி வைக்க முயற்சிக்க முனையும்போது அதை அனுமதித்தல் சாபக்கேடானது.

>அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம்.<

கடந்த காலத்தைத் தோண்டிப் பார்த்து, சதிகளை முறியடித்து, மக்களைத் தமது சுய காலில் நிற்க அனுமதிப்பதும் அதன்வழி அவர்கள் தமது இன்னலுக்கு அவர்களே முகம்கொடுத்துத் தமது தலைவிதியைத் தாமே கண்டடைய வைப்பதும், உண்மைகளைப் பேசுவதன் மூலம் நடந்தேறும்.

இந்தவுண்மை நம்மைப்போன்ற சதிகாரர்களை முதலில் இனம் காண்பதற்கே.
ப.வி.ஸ்ரீரங்கன்

17.12.09