எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
யாரும் குற்றங்களை இழைக்கவில்லை
என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன.

குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்
மிக மிக கொடிய இரவுகளை
பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே

அவர்கள் சொன்னார்கள்.
எல்லாருடைய கைகளிலும்
குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன.

சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும்
சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும்
சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும்
எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற
குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும்
தந்திரம் வாய்ந்திருக்கின்றன.
குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில்
அவர்கள்
வாழ்வதற்கு எதிராக

சட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
யுத்தகால நிகழ்வுகள்
எவ்வளவு கொடுமையானவை என்பதை
குருதி பிறண்ட முகத்துடன் மிகவும் காயமுற்ற குரலுடன்
உலகின் எல்லாக் குழந்தைகளும்
அழுதபடி சொல்லின.
யாரும் படைகளை திரும்பப்பெறுவதாயில்லை.

எல்லாச் சந்திகளுக்குமாக கிளைமோர்களும்
எல்லா நகரங்களுக்குமாக குண்டுகளையும்
முழுப் பூமிக்கு எதிராக அணுகுண்டையும் தயாரித்தார்கள்.
அனைத்து மனிதர்களுக்கும் எதிராக
துப்பாக்கிகள்தான் அலைகின்றன.
குழந்தைகளின் உலகத்தை கொடுமையாக சிதைத்தார்கள்.
எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில்
யுத்தம் நடந்துகொண்டேயிருக்கிறது.
எங்காவது குழந்தைகள் அஞ்சி பதுங்கியிருக்கிறார்கள்.

எல்லா விசாரணைகளும் யுத்த வெற்றிகளையே
பட்டியலிடுகின்றன.
கிண்ணங்களை பரிமாறி மேலும் களங்களை திறக்கின்றன.
அதிகாரத்தை வடிவமைப்பதைப் பற்றிய
எண்ணத்திலே தொங்குகின்றன.
மூடப்பட்ட கிடங்கை திரும்பவும் கிண்டத்தொடங்குகிறார்கள்.
சிப்பாய்களின் கைகளில் சோர்வடையும்
துப்பாக்கிகளை இறுகப் பற்றச் சொல்லுகிறார்கள்.

ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில்
குழந்தைகளை ஒளித்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் எறியப்பட்ட குண்டுகள்
ஆறாதிருக்கின்றன.
அமெரிக்கப் படைகள் உலகம் எங்கும் நிறைகின்றன.
எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி
அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள்.
அவர்கள் எதையோ பெறுவதற்காகவும்
நிகழ்த்துவதற்காகவும்
புன்னகை மிகுந்தபடி கூடுகிறார்கள்.
எல்லோருமே யுத்தக் குற்றவாளிகாக இருப்பதை
தந்திரமாக மூடுகிறார்கள்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.
_____________________
{02.11.2009 யுத்தக் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது}

- தீபச்செல்வன்

http://www.vinavu.com/2009/11/14/saturday-poems-12/