தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாகக் காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக்கிழமையை, செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாகச் சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்க மாட்டார் என்றாலும் அப்படித்தான் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட் ராமன் துயிலெழும் முகூர்த்தமும் சொல்லிவைத்தது போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

 

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வார நாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்து விடுபவர், விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்கு மூட்டையைக் கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியைப் பக்கத்து வீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு முடித்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் .. எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன்.

 

ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பது போல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன் சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

 

பற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க, அதிலிருந்து ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தர வயதுக்காரர்களைப் போலவே அவரும் நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு கூட விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்திக் கொண்டு வந்திருப்பதாக அவருக்குள் ஒரு நம்பிக்கை.

 

வழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில் நேசத்தைத் தெரிவித்தவர், நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தைப் படிக்க ஆரம்பித்தார்.

 

எப்போதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காபியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களைப் படிப்பது அமையும். காபியின் மணமும், விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடி ய அற்புத சுகம்.

 

"நீங்கள் ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட்டா? அப்படியெனில் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.''

 

"வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்க்கத்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமைத் தாகத்துடன், யாருமறியாத விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.''

 

"ஒரு வருடத்தில் கார், இரண்டு வரு டத்தில் வீடு, ஐந்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்.. இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்.

 

'' காபியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூய வெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காபி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார்.

 

 "வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கின்றோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்தச் சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம் . இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி.'' .


.அப்புறம் செல், லேண்ட் லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம் பெற்றிருப்பதைக் கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒரு பெரிய நல்லது நடக்கப் போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக் கொண்டிருந்தது.

 

விளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாகப் பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் மகன், ஆறாவது வகுப்பில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகும் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக் கடன் என்று மாதந்தோறும் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கி வைத்த சில பங்குகளில் பெயருக்கு வரும் ஈவுத் தொகை ..இந்த எல்லையை எப்படித் தாண்டுவது? அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது.

 

இல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே.. ஏதாவது நல்லது நடக்கலாமே..

 

மீண்டும் உற்சாகத்தை வரவழைத்தவர் குளித்து ரெடியானார். நிதானமாகச் சுவைத்து உண்ணக் கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட் சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை.

 

பத்து மணி ஆனதும் பதட்டமடைந் தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இருக்க வேண்டுமே, இல்லையென்றால் நடக்கப் போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால்? பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பான ஒன்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள்.

 

இப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன், " ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்'', காலணி போட்டுக் கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார்.

 

சட்டென்று ஒரு சந்தேகம் .. ராமானுஜமும் அந்த விளம்பரத்தை ப் பார்த்திருப்பாரோ .. என்ன இருந்தாலும் அவர் கூடப்போவதில் சம்மதமில்லை .. இல்லையில்ல .. கையில் இருக்கு ம் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர், பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளைப் பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்ட பத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாகச் சென்று விட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை.

 

கல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழில்திறமை தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய்ப் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள்.

 

ஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படிப் பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாகச் சிரித்து விட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இரு மனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாகச் சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாதச் சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்குத் தெரிந்தவர் யாரும் இருக்கக் கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார்.

 

அரங்கினைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேகச் சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல்முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள் .. .. சற்று முன்னரே வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ .. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது ....

 

அவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழி மறித்தது.

 

அந்தப் பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கி விட்டு பேச ஆரம்பித்தாள். "உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொழுதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே''. கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. "என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கின்றேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே'' .. இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது.

 

மற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக, ஆனால் உற்சாகமாக இருந்தார்.

 

மேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள்.

 

அடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியும் என்று நம்பும்படியாகவும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராகச் சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலமென மூவரைப் புதிய உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்; இதில் முறையே 20, 30, 40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளைச் சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கு ம்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப் பெருகினால் பத்து இலட்சம்.

 

இப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எண்களுக்கு ஏது முடிவு .. கூட்டம் கணக்கில் மனதைப் பறிகொடுக்க, வெங்கட்ராமன் மட்டும் தனக்குத் தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார்

 

தொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கின்றது .. எனினும் இவர்களை எப்படி நம்புவது?

 

அது புரிந்தது போல் நம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்தத் தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லாவகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையைச் சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாகக் கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு நம்பிக்கையின் பிரஷ்ஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை.

 

ஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே? ஏமாற்ற வேண்டும் என்று வந்து விட்டாலோ மொழி செயற்கைத்தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.

 

வெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை. சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்து வடையும், டிகாஷன் கலந்த காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட து. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல் அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனால் அப்போதும் அவர் ஒரு நிதானத் துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப் போல அவரை யாரும் ஏமாற்றிவிட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார்.

 

அடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பல மாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி. சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக "இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்துவிட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களைத் தவற விடாதீர்கள்'' என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது.

 

வந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும்  போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்தப் புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று.

 

டை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாகச் சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்ட மிட்டு நடக்கவில்லை, ரொம்பவும் தற்செயலாக நடந்தது. எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோமே என்ற எண்ணம் ஓடாமல் இல்லை.

 

இருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் நடந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவற விடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறிய முடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாக இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பக் கத்தைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.

 

"என்ன சார், கூட்டம் இன்னும் முடியலையே, முடிச்சுட்டுப் போகலாமே'' அதட்டலாகக் கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்ட மும், பயமும் மேலெழும்ப .. "இல்ல வேணாம்.. இருக்கட்டும்'' என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணி சேர்த்து வெளியேறி விடலாம் என்று திரும்பிப் பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.

 

பலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள் .. ஏன் எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டும் .. இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே .. இல்லையில்லை .. சிலர் வாங்காமலும் சென்றார்கள் .. அதுதான் சரியானதா .. திரும்பிச் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்கலாமா .. ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே .. மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே .. ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே .. நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை ..

 

அந்தக் குறுகிய தருணத்தில் இரு தரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களா என்று அலசத் தொடங்கினார். ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ ..விண்ண ப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்.. ஒரேயடியாக ஆயிரம் என்பதுதான் இவ்வளவு யோசிக்க வைக்கிறது ..

 

அந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணு அணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பது போல அவரது முகம் வாடி விட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகை தொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாகச் சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

 

வேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே ..கணக்குப் போட்டுப் பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம் 5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து ப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காபியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது

 

— வினவு www.vinavu.com