தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் “ஆதாரபூர்வமாக”ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் நடந்துவரும் ஆக்கிரமிப்பின் கதையை பாமரனும் புரிந்து கொண்டிருக்கிறான்.

 சோசலிச முகாம் என ஒன்று இல்லாத இன்றைய சூழலில் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகத் தானே உருவாக்கிய ஒரு சர்வாதிகாரியை (சதாம் உசேன்) வீழ்த்தவும், எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் இத்தனைப் பச்சையான பித்தலாட்டங்களில் ஈடுபடுகின்றன அமெரிக்காவும், பிரிட்டனும். எனில், ஏகாதிபத்தியத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய சோசலிசத்தை வீழ்த்த, இவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை அறிவு நாணயமுள்ள எவரும் ஊகிக்க முடியும். ஊகம் வேண்டாம். ஆதாரங்களைத் தருகிறோம். “என்ன இருந்தாலும் ஸ்டாலின் செய்த கொலைகள்….” என்று ஐ விட்னஸ் போலப் பேசும் அறிவாளிகள் தாங்கள் சோரம்போனது குறித்து வெட்கப்படுவார்களா?

 

 

பாட்டாளி வர்க்கத்தலைவன் ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கத்தலைவன் ஸ்டாலின்

“புதிய கலாச்சாரம்” பத்திரிக்கை மீண்டும் ஸ்டாலினிசத்துக்குத் திரும்புவதைப் போலத் தெரிகிறது. ஸ்டாலின் துதி பாடுவது அதிக மாகி வருகிறது” என்று சில நண்பர்கள் சமீபத்தில் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் “மீண்டும்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பது நாம் ஏற்கக் கூடியதல்ல. தோழர் ஸ்டாலின் உயர்த்திப் பிடித்த சித்தாந்த அரசியல் அடிப்படையில் இருந்து புதிய கலாச்சாரம் விலகிப் போயிருந்தால் தானே மீண்டும் அதற்குத் திரும்புவது என்ற நிலை வரும். புதிய கலாச்சாரம் எப்போதும் அங்கேதான் இருக்கிறது.

ஸ்டாலினது காலத்தில் தனிமனிதத் துதிபாடிகளாகவும், தனிமனித வழிபாடு செய்தவர்களும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கேடாகப் பயன்படுத்தி சதிகள் செய்து, இரகசியக் கொலைகள் புரிந்தவர்களும் தான் ஸ்டாலினுக்குப் பிறகு அவருக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி குணக் கொலைகள் புரிந்தனர். ஸ்டாலினைப் போல மீசை, புருவம், தலைமுடி, நடையும் உடையும் அணிந்து கொள்வதில் இருந்து ஸ்டாலின் என்ற பெயரைத் தம்பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்வது வரை பெருமைப்பட்டவர்களில்தாம் பலர் இன்று ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறு அலையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அத்தகைய அவதூறு அலைக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதுதான் புதிய கலாச்சாரத்தின் வரலாறு அன்றும், இன்றும்.

நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.

ஆனால் இந்த நண்பர்கள், “ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்” என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.

“சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக” கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.

மாபெரும் பாசிச சர்வாதிகாரி இட்லரும் அவனுடைய சகா ஜார்ஜ் புக்ஷ்சும்

மாபெரும் பாசிச சர்வாதிகாரி இட்லரும் அவனுடைய சகா ஜார்ஜ் புக்ஷ்சும்

1933 ஜனவரி இறுதியில், கொல்லைப்புற வழியே ஜெர்மனியின் பிரதமர் பதவியைக் கைப்பற்றினான் பாசிச இன கொலைவெறிய னும், யுத்த வெறியனுமான நாஜி இட்லர். அடுத்த ஐந்தாவது வாரம் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்தான். வாக்குப் பதிவுக்கு முதல்வாரம் ஜெர்மானிய நாடாளுமன்றம் ரைஸ்டாக் கட்டிடத்துக்கு சதிகார நாஜிக்கள் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டு பச்சைப் புளுகுணிப் பிரச்சாரம் செய்தனர். பின்னாளில் கம்யூனிஸ்டுகள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக நடந்த தேர்தல்களில் நாஜிக்கள் வெற்றிபெற்று அதிகாரத்தின் மீது தமது இரும்புப் பிடியை நிறுவினர். பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது. உடனே கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நாஜிக்களால் வேட்டையாடப் பட்டனர். முதல் சித்திரவதை முகாம்கள் இடதுசாரி ஆண்களாலும் பெண்களாலும் நிரப்பப்பட்டன.

வலதுசாரிப் பிற்போக்காளர்கள் அனைவரும் இட்லரின் பின்னே அணி சேர்ந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவன் பலம் பெருகியது. நான்காண்டுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் சட்டம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து யூதர்களை வேட்டையாடி வதை முகாம்களில் அடைப்பது துவங்கியது. இட்லரின் நாஜிசக் கோரமுகம் அப்பட்டமாகத் தலைவிரித்தாடியது. ஜெர்மனி ஆயுதமயமாவ தையும், இராணுவமயமாவதையும் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தங்களை இட்லர் கிழித்துப் போட்டான். ஜெர்மனி அதி வேகமாக ஆயுதமயமாகி, இராணுவ வல்லரசானது. இந்தச் சமயத்தில்தான் “சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் சர்வாதிகாரத்தின் கீழ் படுகொலைகள்” என்கிற கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இட்லரின் அமைச்சரவையில் பிரச்சார மந்திரியாக இருந்த பச்சைப் புளுகன் கோயபல்ஸ் ஜெர்மானிய மக்களிடையே நாஜிக் கனவை விதைக்கும் பொறுப்பேற்றிருந்தான். இன ரீதியில் தூய மக்கள் வாழும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மாபெரும் ஜெர்மனியை நிர்மாணிப்பதுதான் அந்த நாஜிக் கனவு. அன்றைய ஜெர்மனியைவிட மிகமிகப் பெரும் அளவிலான பூமிப்பரப்பு ஜெர்மனிக்குக் கிழக்கே இருந்தது; அது இன்னமும் வென்றெடுத்து, கைப்பற்றி ஜெர்மானிய தேசத்துடன் இணைக்கப்படவேண்டும். ஜெர்மானியர்கள் வாழ்வதற் கான புவிப்பரப்பில் மிகவும் இன்றியமையாத ஓர் பகுதி உக்ரைன் என்பதை 1925இல் எழுதிய தனது “மெயின் கேம்ப்” என்ற நூலில் ஏற்கனவே இட்லர் குறிப்பிட்டிருந்தான். தகுந்த முறையில் பயன்படுத் துவதற்காக உக்ரைனும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளும் ஜெர்மானிய தேசத்துக்குச் சொந்தமாக வேண்டியிருந்தது. ஜெர்மானிய (ஆரிய) இனத்துக்கான வாழுமிடத்தை உருவாக்குவதற்காக இந்தப் பிராந்தியத்தை நாஜிக்களின் போர்வாள் வென்றெடுக்கும் என்பது தான் நாஜிப் பிரச்சாரம்.

அப்பகுதிகள் ஜெர்மானியத் தொழில் நுட்பம், ஜெர்மானியத் தொழில் திறனைக் கொண்டு ஜெர்மனிக்கான தானிய விளைநிலமாக மாற்றப்படும். நாஜிப் பிரச்சாரத்தின்படி, உக்ரைனில் வாழும் மக்கள் தாழ்ந்த மிலேச்சர்கள்; முதலில் அவர்களை சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்து ஜெர்மனியர்களின் வீடுகளில், ஆலைகளில், வயல்களில், ஜெர்மானியப் பொருளாதாரத்துக்குத் தேவையான வேறெங்கும் வேலை செய்யும் கூலி அடிமைகளாக மாற்ற வேண்டும்.

உக்ரைனையும் சோவியத் ஒன்றியத்தின் இதரப் பகுதிகளையும் வென்றெடுக்க வேண்டுமானால் அதற்கெதிராகப் போர் தொடுக்க வேண்டும்; அதற்கு முன்கூட்டிய தயாரிப்பு செய்தாக வேண்டும். இந்த நோக்கத்தோடு கோயபல்ஸ் தலைமையிலான நாஜி பிரச்சார அமைச்சரவை ஒரு இயக்கத்தைத் துவக்கியது. “சோசலிசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் பொருட்டு ஸ்டாலின் திட்டமிட்டு பேரழிவுப் பஞ்சத்தை உருவாக்கினார்; அந்தப் பயங்கரமான காலகட்டத்தில் உக்ரைனில் பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள்”என்ற அவதூறை மையமாகக் கொண்டிருந்தது, அந்த நாஜிப் பிரச்சார இயக்கம்.

உக்ரைனை ஜெர்மானிய இராணுவம் “விடுதலை’ செய்ய வேண்டும் என்பதாக உலக மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதுதான் நாஜிப் பிரச்சாரத்தின் நோக்கம். பெருமுயற்சி எடுத்தும், ஜெர்மானியப் பிரச்சார நூல்களில் சில ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் “உக்ரைனில் பெருந்திரள் படுகொலை” என்கிற நாஜி அவதூறு உலக அரங்கில் பெரிய வெற்றிபெற முடியவில்லை. சோவியத் ஒன்றியம் குறித்த தங்கள் அவதூறு வதந்தியைப் பரப்புவதற்கு இட்லருக்கும் கோயபல்சுக்கும் உதவி தேவையாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அமெரிக்காவில் அத்தகைய உதவியைக் கண்டார்கள்.

ரடால்ஃப் ஹெர்ஸ்ட் இட்லரின் நண்பர் வில்லியம் ரடால்ஃப் ஹெர்ஸ்ட் — அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு பத்திரிக்கை முதலாளி. அந்நாட்டு மஞ்சள் பத்திரிக்கை உலகின் தந்தையாக விளங்கியவன். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான உளவியல் பிரச்சாரப் போரில் நாஜிக்களுக்கு உதவுவதற்கு இந்தக் கோடீசுவரன்தான் முன்வந்தான். அமெரிக்க செனட் சபை உறுப்பினரும், சுரங்க முதலாளியும், பத்திரிக்கை முதலாளியும் பெரும் பணமுதலையுமான ஜார்ஜ் ஹெர்ஸ்டின் மகன் வில்லியம் ஹெர்ஸ்ட். “சான்பிரான்சிஸ்கோ டெய்லி எக்சாமினர்” என்கிற அக்குடும்ப நாளேட்டின் ஆசிரியராக வில்லியம் ஹெர்ஸ்ட் 1885ஆம் ஆண்டு பொறுப்பேற்றான்.

ஹெர்ஸ்ட் பத்திரிக்கைப் பேரரசின் தொடக்கமாகவும் இது அமைந்தது. வட அமெரிக்க மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வலுவான செல்வாக்கு செலுத்துவதாக இந்தப் பத்திரிக்கை இருந்தது. அவன் தந்தை இறந்ததும், வில்லியம் ஹெர்ஸ்ட் தனது சுரங்கத் தொழில் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு, அந்த மூலதனத்தை இதழியல் துறையில் முதலீடு செய்யத் துவங்கினான். பாரம்பரியமிக்க “நியூயார்க் காலை இதழ்” என்னும் நாளேட்டை அவன் முதலில் வாங்கினான். அதை ஒரு பரபரப்பூட்டும் கிசுகிசு குப்பைப் பத்திரிக்கையாக மாற்றினான். அவன் செய்திக் கதைகளை என்ன விலை கொடுத்தும் வாங்கினான். குரூரமான அல்லது கிரிமினல் குற்றச் செய்திக் கதைகள் கிடைக்காத போது செய்திகளை உருவாக்கித் தரும்படி தன் நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் நிர்பந்தத்துக் குள்ளாக்கினான். பொய்களும் புனைச்சுருட்டுகளுமான குரூர, அக்கிரம, அட்டூழியங்களை உண்மைகளைப் போலத் தருவதுதான் உண்மையில் மஞ்சள் பத்திரிக்கைகளின் தன்மைகள்.

ஹெர்ஸ்டின் இத்தகைய பொய்கள் தாம் அவனைக் கோடீசுவர னாக்கின, பத்திரிக்கை உலகில் அவனை மிக முக்கியப்புள்ளியாக்கின. 1935லேயே உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவனாக விளங்கினான். அவனுக்கு 20 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்கள் இருந்தன. “நியூயார்க் காலை இதழை” வாங்கிய பிறகு பல நாளேடு களையும் வார இதழ்களையும் வாங்கினான், துவங்கினான். 24 வாரச் செய்தி ஏடுகள், 12 வானொலி நிலையங்கள், 2 உலகச் செய்தி சேவை கள், சினிமாவுக்கான செய்திகளைத் தரும் ஒரு தொழில் நிறுவனம், காஸ்மாபாலிடன் சினிமாக் கம்பெனி இன்னும் பலவற்றை நிறுவினான். 1948லேயே பால்டிமோ நகரில் அமெரிக்காவின் முதல் தொலைக்காட்சி நிலையத்தை நிறுவினான். ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் நாளொன்றுக்கு 1.3 கோடிப் பிரதிகள் விற்றன. சுமார் 4 கோடி வாசகர்கள் படித்தனர். அமெரிக்க மக்கட் தொகையில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் நாள்தோறும் ஹெர்ஸ்டின் செய்தியேடு களைப் படித்தனர். ஹெர்ஸ்டின் செய்திச் சேவைகள், திரைப்படங்கள் மற்றும் சங்கிலித் தொடர் செய்தியேடுகள் பெரும் எண்ணிக்கையில் மொழி பெயர்த்துப் பிரசுரிக்கப்பட்டதன் மூலம் அவனுடைய செய்திகள் உலக முழுவதும் உள்ள மேலும் பலகோடி மக்களை அடைந்தன.

பலப்பல ஆண்டுகளாக ஹெர்ஸ்டின் செய்திப் பேரரசு எவ்வாறு அமெரிக்க மற்றும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தின என்பதை இந்தப் புள்ளி விவரங்களே தெளிவுபடுத்துகின்றன. அது பிரச்சாரம் செய்தவைகளில் சோவியத் ஒன்றியத்தின் அணி வரிசை யில் இரண்டாம் உலகப் போரில் அöமரிக்கõ குதிப்பதை எதிர்த்ததும், 1950களில் நடந்த கம்யூனிச எதிர்ப்பு புதிய மெக்கார்த்திய வேட்டைக்கு ஆதரவு கொடுத்ததும் அடங்கும். படுபிற்போக்குவாதம், தேசியவாதம் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு வெறி ஆகியன வில்லியம் ஹெர்ஸ்ட்டின் கண்ணோட்டம். அவனது அரசியல் கடைக்கோடித் தனமான வலதுசாரி அரசியல். 1934இல் அவன் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டபோது தனது விருந்தாளியாகவும் நண்பனாகவும் நாஜி இட்லர் அவனை வரவேற்றான். இந்தப் பயணத்துக்குப் பிறகு ஹெர்ஸ்டின் செய்தி ஏடுகள் மேலும் தீவிரமான பிற்போக்கானவையாக மாறின. சோசலிசம், சோவியத் ஒன்றியம், குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரக் கட்டுரைகளை ஹெர்ஸ்டின் செய்தியேடுகள் தினந்தோறும் தாங்கி வந்தன. வெளிப்படையான நாஜி பிரச்சார நோக்கத்துக்காக தன்னுடைய பத்திரிக்கைகளைப் பயன்படுத்தவும் கூட ஹெர்ஸ்ட் முயன்றான். இட்லரின் வலது கையான கோயரிங்கின் கட்டுரைத் தொடர்களைப் பிரசுரித்தான். பல வாசகர்களின் எதிர்ப்புக்கள் அம்மாதிரியானவைகளைப் பிரசுரிப்பதை நிறுத்தவும், விநியோகத்தில் இருந்து திரும்பப் பெறவும் நிர்ப்பந்தித்தன.

இட்லரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு, ஹெர்ஸ்டின் பரபரப்பூட்டும் செய்தியேடுகள் “சோவியத் ஒன்றியத்தில் நடக்கும் அட்டூழியங்கள்” பற்றிய கட்டுக் கதைகளால் நிரப்பப்பட்டன. படுகொலைகள், பெருந்திரள் படுகொலைகள், அடிமைத்தனம், ஆட்சியாளர்களின் சுகபோகம், பரந்துபட்ட மக்களின் பட்டினி ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் நடப்பதாக நாள்தோறும் மிகப்பெரிய செய்திகள் இடம்பெற்றன. இவையெல்லாம் நாஜி ஜெர்மனியின் அரசியில் உளவுப்படையான கெஸ்டபோவால் ஹெர்ஸ்டுக்குத் தரப்பட்டவை. கையில் கத்தியுடன் இருக்கும் கொலைகாரனாக ஸ்டாலினைச் சித்தரிக்கும் சோவியத் ஒன்றியம் பற்றிய கேலிச் சித்திரங்களையும் அண்டப் புளுகுச் சித்திரங்களையும் தனது முதல் பக்கத்திலேயே ஹெர்ஸ்டின் நாளேடுகள் அடிக்கடி தாங்கி வந்தன. இந்தக் கட்டுரைகளை அமெரிக்காவின் 4 கோடி மக்களும், உலகம் முழுவதும் மேலும் பல பத்து இலட்சம் பேரும் நாள்தோறும் படித்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஹெர்ஸ்ட் ஏடுகளின் முதல் பிரச்சாரங்களில் ஒன்றாக, உக்ரைன் பஞ்சத்தின் விளைவாக லட்சக் கணக்கானோர் மடிந்து விட்டார்கள் என்கிற புளுகு இருந்தது. “சோவியத் ஒன்றியத்தில் 60 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார் கள்” என்கிற முதல் பக்க தலைப்புச் செய்தி “சிக்காகோ அமெரிக்கன்” என்கிற நாளேட்டில் வந்ததோடு 1935 பிப்ரவரி, 18ந் தேதி இந்தப் பொய் பிரச்சாரம் துவங்கியது. “குலாக்குகள் எனப்படும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக சோசலிச நடவடிக்கை என்கிற பெயரில் ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட கட்டாய நிலவெளியேற்றம் மற்றும் திட்டமிட்ட பெருந்திரள் படுகொலைகளின் விளைவாக உக்ரைனில் பஞ்சம் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு பல பத்து இலட்சம் பேர் மாண்டனர்” என்ற புனை கதைகளை நாஜி ஜெர்மனியிடமிருந்து நாஜி ஆதரவாளரான ஹெர்ஸ்ட் பிரசுரிக்கத் துவங்கினான்.

ஜெர்மானிய நாஜிப்பேரரசை கிழக்கே விரிவுபடுத்தும் நோக்கத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் இட்லருடைய திட்டத்தின் அங்கம்தான் இது. இந்த விடயம் பற்றிய உண்மையே முற்றிலும் வேறானது. 1930களின் ஆரம்பத்தில், சோவியத் ஒன்றியத்தில் உண்மையில் நடந்தது ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டம். அதில் பணக்கார நிலப்பிரபுக்களுக்கு எதிராக எழுச்சியுற்ற நிலமற்ற, ஏழை விவசாயிகள் கூட்டுடமைக்கானதொரு போராட்டத்தைத் துவங்கினர்; அது “கோல்கோசஸ்” எனப்படும் கம்யூன்களை நிறுவுவதற்கான போராட்டம். இம்மாபெரும் வர்க்கப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 12 கோடி விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அது விவசாய உற்பத்தியில் சற்றே உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியது; சில பகுதிகளில் ஓரளவு உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாகத் தொற்று நோய்களுக்குப் பலியாவோர் எண்ணிக்கையைப் பெருக்கியது. அந்த நேரத்தில் உலகம் முழுவதும் இம் மாதிரியான நோய்கள் பொதுவில் எங்கும் இருந்தன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

1918க்கும் 1920க்கும் இடையில் பரவிய “ஸ்பெயின் ஃப்ளூ” என்ற தொற்று நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2 கோடி மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது. ஆனால் தமது சொந்தக் குடிமக்களின் சாவுக்காக அந்நாடுகளின் அரசுகள் மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை. இந்த வகையான தொற்று நோய்களைச் சந்தித்தபோது அந்த அரசாங்கங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது “பென்சிலின்” மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; அப்போது மட்டுமே இம்மாதிரியான தொற்று நோய்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. 1940களின் இறுதிவரை அதுவும்கூட பொதுவில் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாக இல்லை.

கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே உருவாக்கிய ஒரு பஞ்சத்தால் உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் மாண்டதாக எழுதிய ஹெர்ஸ்டின் பத்திரிகைக் கட்டுரைகள் கற்பனையான அந்தக் கோரத்தைப் பற்றி பரபரப்பூட்டும் அதிர்ச்சியூட்டும் விவரங்களை விலாவாரியாக எழுதின. தமது கட்டுக் கதைகளை உண்மையானவை என்று காட்டுவதற்கான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி எழுதின. அதன் மூலம் முதலாளித்துவ உலகின் பொதுக் கருத்தை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றியும் பெற்றன. இதுதான் சோவியத் ஒன்றியத்தில் பலபத்து இலட்சம் பேர் மாண்டு போனதாக முதற்பெரும் புனைச்சுருட்டு தயாரிக்கப்பட்டதன் தோற்றுவாய். மேற்குலகின் பத்திரிக்கைகள் கட்டவிழ்த்துவிட்ட இந்த புனைச் சுருட்டுகள் காரணமாக எழுந்த எதிர்ப்பு அலையில் சோவியத் ஒன்றியம் தெரிவித்த மறுப்புரைகளையும் ஹெர்ஸ்டின் பத்திரிக்கைகளுடைய பொய்கள் பற்றிய முழுமையான அம்பலப் படுத்தல்களையும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்த நிலைமை 1934 முதல் 1987 வரை நீடித்து நிலவியது.

உக்ரைனிய குடும்பம் ஒன்றின் சித்திரப்படம்

உக்ரைனிய குடும்பம் ஒன்றின் சித்திரப்படம்

சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலின் பற்றிய மேற்குலகின் இந்தப் புனைச் சுருட்டுக்கள் எல்லாம் வெறும் அவதூறுகள்தாம் என்பதை கனடா நாட்டுப் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதி 1987இல் டோராண்டோ நகரில் பதிப்பித்த “மோசடி, பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரை உக்ரைன் பெருந்திரள் படுகொலை என்ற புனைவு” என்ற நூல் அம்பலப்படுத்தியது. அதுவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக சோவியத் ஒன்றியத்தின் சோசலிசம் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கும் படி தலைமுறை தலைமுறையாக உலக மக்களுக்கு அவதூறுகள் மட்டுமே தீனியாகப் போடப்பட்டன.

கலிஃபோர்னியா, பிவெர்லி குன்றுகளில் உள்ள தனது மாளிகையில் 1951இல் வில்லியம் ஹெர்ஸ்ட் இறந்தான். அவன் தனக்குப் பின் ஒரு பெரிய மக்கள் தொடர்புப் பேரரசை விட்டுச் சென்றான். அது இந்நாள் வரை உலகம் முழுவதும் பிற்போக்குச் செய்திகளைப் பரப்புவதைத் தொடர்கிறது. ஹெர்ஸ்டின் தொழிற் கழகம் உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது; அது 15,000 பேர் பணிபுரியும் 100 கம்பெனிகளைக் கொண்டிருக்கிறது. இன்று செய்தி யேடுகள், வாரமாத இதழ்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, தொலைக்காட்சி பிணைப்பு, செய்திச் சேவைகள் மற்றும் பன்முக ஊடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஹெர்ஸ்டின் பேரரசு. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோல்வி அடைந்ததோடு உக்ரைன் பற்றிய நாஜி கட்டுக் கதைப் பிரச்சாரம் நின்று போய்விடவில்லை. அந்த நாஜிப் புனைச் சுருட்டுகள் எல்லாம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் பிரித்தானிய எம்15 ஆகிய உளவு அமைப்புக்களால் கையேந்திக் கொள்ளப்பட்டன. அவைதான் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் ஒரு முதன்மையான இடத்தை எப்போதும் உறுதிப்படுத்தின. உக்ரைனில் பலபத்து இலட்சம் பேர் பட்டினியால் மாண்டார்கள் என்கிற கதை மீதுதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு தலை விரித்தாடிய கம்யூனிச எதிர்ப்பு மெக்கார்த்தியம் கூட காலூன்றி நின்றது.

1933இல் இந்தப் பொருள் மீது அமெரிக்காவில் ஒரு புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. “கிரம்ளின் மாளிகையின் கருப்பு நடவடிக்கை கள்” என்பது அந்நூலின் தலைப்பு. அமெரிக்காவில் வாழ்ந்த உக்ரைன் அகதிகள்தான் இந்நூலைப் பதிப்பிக்க நிதியளித்தார்கள்; இவர்கள் அனைவரும் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் பங்காளிகளாகச் செயல்பட்டவர்கள்; இவர்களைத்தான் “ஜனநாயகவாதிகள்’ என்று உலகின் முன் அடையாளங் காட்டிய அமெரிக்க அரசாங்கம் அரசியல் தஞ்சமளித்தது. அமெரிக்க அதிபராக ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதாவது 1980களில், உக்ரைனில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்; 1984இல் ஒரு ஹார்வார்டு பேராசிரியர் “ரஷ்யாவில் மனித வாழ்வு” என்கிற ஒரு நூலைப் பதிப்பித்தார்; இதுவும் 1934இல் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லாக் கட்டுகதைகளையும் திரும்பச் சொன்னது. 1930இல் நடந்ததாகக் கூறப்பட்ட நாஜிப் புளுகு 1984இல் மீண்டும் உயர்ப்பிக்கப் பட்டதை நாம் கண்டோம்; ஆனால் இந்த முறை “மதிப்புக்குரிய” ஒரு அமெரிக்க பல்கலைக் கழகம் என்கிற மூடு திரையின் பின்னே வந்தன. ஆனால் இதோடு நிற்கவில்லை.

இதே பொருள் குறித்து “சோகத்தின் அறுவடை” என்ற தலைப்பில் 1986இல் இன்னொரு நூல் வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ள ராபர்ட் கான்குவஸ்ட். இவர் பிரித்தானிய உளவுத் துறையின் முன்னாள் உறுப்பினர்! இந்த வேலைக்காக உக்ரைன் தேசிய அமைப்பிடம் இருந்து 80,000 அமெரிக்க டாலர் பணத்தை கான்குவஸ்ட் பெற்றார்; அதோடு இந்நூலின் புளுகுகளை அடிப்படையாகக் கொண்டு 1986இல் தயாரிக்கப்பட்ட “அவலத்தின் அறுவடை” என்னும் திரைப்படத்துக்காகவும் அவர் ஏராளமாகப் பணம் பெற்றார். 1930களில் நாஜிக்கள் கட்டுக்கதை பரப்பத் துவங்கியதில் இருந்து 1986இல் இந்த நூல் வெளியானதற்குள் உக்ரைன் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கையை 150 இலட்சமாக ஏற்றி விட்டார்கள்!


எவ்வாறாயினும் சரி, அமெரிக்காவின் ஹெர்ஸ்ட் பத்திரிக்கைக் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, புத்தகங்கள், திரைப் படங்களில் கிளிப் பிள்ளைகளைப்போல திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பலபத்து இலட்சம் பேர் உக்ரைன் பட்டினிச் சாவுக்கு பலியானார்கள் என்பதே முழுக்க முழுக்கக் கட்டுக் கதையாகும். “பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதை” என்கிற நூலில் இவையெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தாம் என்பதை கனடிய பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தனது நூலில் மிகவும் கவனமாகவும் சிரத்தையோடும் அம்பலப்படுத்தியுள்ளார்.

http://vrinternationalists.wordpress.com/2009/08/10/ஸ்டாலின்-மீதான-அவதூறு-ஹி/