சிறு குறிப்பு. 
"குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.
அது,தமது தலைமையையே காட்டிக்கொடுத்துக் கொன்றதன்பின்னே இப்போது கதைவிடும் அரசியல் வெளியகத் தமிழீழ அரசென்பதாகவும் விரிகிறது.இந்த நிலையில் தமிழ் ஆளும் வர்க்கத்து இன்னொரு பிரிவு புலிகளது ஐரோப்பியத் தலைமைக்கு மாறாக இலங்கை அரசோடு இணைந்த "மகிந்தாவை நம்பலாமா இல்லையாவென"ச் சரடுவிடுகிறது.இவர்களுக்குள் தமது வாழ்வைப் பறிகொடுத்த தமிழ்பேசும் மக்களது வாழ்வில் துரோகத்தலைமைகளது நெருக்குதலே தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.

இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.உளவியற் பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.இந்த நிலையாலேதாம் பிரபாகரனது மரணத்தையே புரட்டிப்போட்டுப் பொய்யுரைக்க முடிகிறது.இத்தகையத் தமிழ்ச் சிந்தனைப்போக்கிலிருந்தாம் இலங்கை அரசினது ஜோதிடர் மீதான கைது குறித்தக் கருத்தும் கட்டப்படுகிறது.இலங்கை அரசை மிக நுணுக்கமாக ஆய்ந்து அதன் போக்கை அம்பலப்படுத்த முடியாத தமிழ் ஊடகங்களுக்கு முன்னோடியாக இந்த பீ.பீ.சீ. தமிழ் செய்தியரங்கம் இருக்கிறது.

"இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் ஆட்சிக்கு வருவார் என்று ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடர் ஒருவர் கைதுசெயப்பட்டிருப்பதை பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.
சந்திரஸ்ரீ பண்டார என்ற அந்த ஜோதிடர், எதன் அடிப்படையில் அவ்வாறு ஆரூடம் கூறினார் என்று கண்டறிவதற்காக அவரை விசாரித்துவருவதாக பொலிஸ் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
கிரக நிலை மாற்றங்கள் காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டின் பிரதமர் அதிபராகிவிடுவார் என தனது வாராந்திர சஞ்சிகையில் சந்திரஸ்ரீ பண்டார ஆரூடம் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்ற இராணுவ வெற்றியை அடுத்து அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டில் பெரும் செல்வாக்கு காணப்படுகிற தற்போதைய நிலையில், இந்த ஜோதிடக் கணிப்பு வெளிவந்துள்ளது."

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

பீ.பீ.சீ.தமிழ, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சாஸ்திரியை முன்வைது இலங்கை அரசியலை மதிப்பிடுகிறது.அதையே சோபாசக்தியிடம்"இலங்கை அரசு ஜோதிடத்தையே சீரியஸ்சாக எடுத்துவிட்டதாக"கேள்வி தொடுக்கிறது.



இங்கே ஒரு அரசினது நடவடிக்கையின் பின்னே உருவாகியுள்ள முரண்பாடுகள்-வியூகங்கள் குறித்துக் கருத்தெழுப்பமுடியாத செய்தியாளர்களுக்குச் சோபாசக்தியாலும் தெளிவான அரசியற்போக்கை-மதிப்பீடுகளைச் சொல்ல முடியவில்லை!


மகிந்தா குடும்பத்தின் ஆதிக்கம்மீதான ஜோதிடரின் எதிர்வுகூறலுக்குள் இயங்கும் சமூக உளவியலில் உணரப்படும் அரசியல் சாணாக்கியம் அதன்மீதான அனைத்து அச்சத்தையும் இனங்காணத்தக்க இன்றைய போக்கில், இலங்கையில் பாசிசத்தின் உச்சக்கட்டம் கோலாச்சுவதை இனங்காணமுடியும்.பாசிஸ்ட்டுக்கள் தமது நிழலைக்கூடக் கண்டு அச்சமுறுபவர்கள்.அதனாற்றாம் பாசிஸ்ட்டுக்கள் கொலைகளைத் தாரளமாகச் செய்து தம்மைக் காப்பதற்கெடுக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுத் தேசத்தில் காட்டாட்சியைத் தொடருகிறார்கள்.இதற்கு உதாரணம் அவசியமில்லை!

இன்றைய இலங்கையைத் தகவமைக்கும் ஆசிய மூலதனத்தின் நகர்வில் மகிந்தாவின் இருப்பு மிகப்பிரதானமானதாக மாறுகிறது.அங்கே, ஜோதிடர் வடிவில் இயங்கும் கருத்து இதற்கு எதிர்மறையாக இயங்குகிறது.இதை அனுமதித்து இயக்கும் மூன்றாந்தரப்பு யாராக இருக்கும்?இதுதாம் இலங்கையினது அரசமட்டத்தில் இப்போதுள்ள கேள்வியாக மாறி ஜோதிடர் கைதுவரை நிலைமை மாற்றமுறுகிறது.மகிந்தாவைப் போட்டுத்தள்ளும் சதி இலங்கையில் நிகழும் என்பதை உறுதிப்படுத்தச் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்குமென இன்றைய அரச-கட்சி ஆதிக்கத்தில் நம்ப முடியும்.அன்று, பண்டாரநாயக்காவைப் படுகொலை செய்த புத்தபிக்கு ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றநிலையில் இன்றைய ஜோதிடருக்குள் புகுந்துகொண்ட பூதம் எது?

புலிகளை வேட்டையாடிய மகிந்தா குடும்பம்,வெறுமனவே ஜோதிடர் கருத்து என்று தமக்கு எதிரான அடுத்த நகர்வை விட்டுவிட அவர்கள் அடிமுட்டாள்களில்லை.திடமான அரசியல் திட்டமிடலுடன் இராணுவச் சர்வதிகாரத்தை ஜனநாயகத்தின் போர்வையில் அனுமதிக்கும் இலங்கைச் சட்டவாத அரசுக்கு இது மிக அவசியமான ஆய்வு-புலனாய்வுத் தேர்வுதாம்.

ஜோதிடர் தனது அரசியல் நடாத்தைகளை அல்லது தனக்குள் கசிந்த செய்திகளை மறைக்கப் "பிரபாவைத் தானே சூனியங் செய்து கொன்றதாக"ச் சொல்லித் தன்னையொரு மெண்டலாகக்காட்ட முனைதலின் பின்னே ஏதோவொரு உண்மை உறங்குகிறது.

இது, அடுத்தடுத்து இலங்கையில் நிச்சியம் குண்டுகளாக வெடிக்கும்.


இக் குண்டுகள் புலிகளது குண்டுகளாக இதுவரை காட்டப்பட்டபோது சிங்களவர்கள் தமிழ்மக்கள்மீது கறுப்படைந்தார்கள்.இனிமேல் புலிகளது இடத்துக்கு இன்னொரு எலிகள்-பூனைகள் வரவேண்டிய தேவை இருக்கிறது இலங்கையில்.உலகு தழுவிய வர்த்தக வலைப்பின்னல்-இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வறிதலையும் காவுகொண்ட நிலைவேறு,நம்மைக் கொத்தடிமைகளாக்கி விட்டபடி.இது,ஒரு அரசின்மீதான அனைத்துக் கேள்விகளையும் வெறுமனவே தமிழர்கள்-இலங்கை மக்கள்மீதான ஒடுக்குமுறையாகவே பார்க்கிறது.

இன்றைக்கு இலங்கையில் ஆங்காங்கே மேலெழும் அனைத்து அரசியல் அமுக்கமும் ஏதொவொரு தேசத்தின் நலனோடு பிணைக்கப்பட்டுளது.இங்கே மூன்றா முலக,வளர்முக நாடுகளின் வர்த்தகக் கூட்டானது தனது(இலங்கை ஆளும் வர்க்கம்) கேவலமான கூட்டுக்களால் மேலைத்தேசங்களின் நலனுக்கேற்றவாறு தமதும்,தமது மக்களினதும் வளங்களைக் கொள்ளையிட அனுமதிக்கின்றது.இந்த அனுமதியில் பழிவாங்கப்படும் ஒரு தேசம் எதிர்வினையாற்றும்போது நிகழும் அரசியல் தெரிவில் ஜோதிடரது குரலும் இணைக்கிறது.இங்கே,அவரைக் கைது செய்து விசாரிப்பது பிரபாகரனுக்குச் சங்கூதிய மகிந்தாவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது.


இத்தகைய செயற்பாட்டால்-அரசியல்-சமூகவாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்,அதையெதிர்க்கத் திரணியற்ற தமிழ் அமைப்புகள் மற்றும் குழுமம் இலங்கை அரசினது நடவடிக்கைகளை வெறும் மனம்போன போக்கில் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் பொதுபுத்திக்கிசைவான உளவியலுடன் உறவுடையதாகிறது.முன்னெப்போதையும்விட இன்று நமது தேசிய அலகுகளைக் காப்பதற்கான போராட்டம் அவசியமாகிறது.அதைக் கட்சியரசியலானது தனது நலனுக்கும்,அந்நிய நலனுக்கேற்றவாறும் கையகப்படுத்தி ,ஒரு கட்டத்தில் நீர்த்துப்போக வைக்கத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இதன் உச்சபச்ச வெளிப்பாடுதாம் புலிகளது "ஈழப் போராட்டம்"மற்றும் தலைமையினதும் போராளிகளதும் பூண்டோடான அழிவும் நடந்தேறியது.

வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு இயக்கி வருகிறார்கள்.அவ்வண்ணமே கட்சிகள்-இயக்கங்கள்-தொண்டு நிறுவனங்கள்,பூசாரிகள்,ஜோதிடர்கள்,மசிர்,மண் எனப் பலவும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
27.06.09