மனிதன் தான்
மதத்தை உருவாக்குகிறான்
மதம் மனிதனை
உருவாக்கவில்லை.
மதம் என்பது ஒடுக்கப்பட்ட

ஒரு பிராணியின் புலம்பல்
மனமில்லாத ஓர்
உலகத்தின் உணர்ச்சி
உயிரில்லாத
நிலைமைகளின் உயிர்.
மதம் மக்களுக்கு
அபின் போன்றது.
மக்களுக்கு மதம்
சந்தோஷத்தை அளிப்பதாகப்
பிரமை காட்டுகின்ற மதத்தை
ஒழிக்க வேண்டுமென்று கோருவது
மக்களுடைய உண்மையான
சந்தோஷத்தைக் கோருவதாகும்.

- கார்ல் மார்க்ஸ்

 

மார்க்ஸீயம் எப்போதும் மதத்தை மக்கள் விரோத சக்தியாகவே கருதுகின்றது. ஒரு சமூதாயத்தின் பொருளாதார நிலைமையையொட்டி செயல்படும் போது சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் என இருநிலைகளில் இயங்கும் பிரிவுக்குள் இல்லாதவர்களிடம் சுரண்டும் முறையை ஆதரிப்பவர்கள் மதத்தையும் தங்களுடைய சுரண்டல் முறைக்கே சாதகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சுரண்டப்படுபவர்கள் (உழைப்பாளிகள்) தங்களுடைய அடிமை வாழ்க்கையில் திருப்தி அடையவும், தங்களுடைய அடிமை நிலையை உணராதிருக்கவும் மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 

அடக்கம், நிதானம், பொறுமை, திருப்தி போன்ற குணங்களுக்கு புனிதத் தன்மை கொடுத்து ஒருவித அடிமைத்தனத்தின் வெளித்தோற்றத்தையே ஊக்குவிக்க முற்படுகின்றது. மதத்தில் ´பகுத்தறிவு´ சிந்தனைக்கு எப்போதும் முட்டுக்கட்டை போடுகிறது. இது இப்படித்தான்; இதை கடவுளின் பெயரால் சொல்கிறோம். எவ்வித எதிர்வினையும் இல்லாமல் ஏற்றுக்கொள் என்கிறது.

 

மதம் ஏழை மக்களுக்கு கடிவாளம் போன்றது. கடிவாளம் சரியாகப்  பூட்டப்பட்டு நேர்கோட்டில் சென்றுக் கொண்டிருக்கும் போது சுரண்டுபவர்களின் செயல்களுக்கு சாதகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. எல்லாம் அனுசரிப்பதிலும், அடங்கிப்போவதிலும் தொடர்ந்து தந்திரமாக செய்லபட்டுக் கொண்டிருக்கிறது மதம்.

 

காரணம் காரியம் எல்லாவற்றிற்கும் இல்லாத ஒன்றின் மீது பாரத்தை போட்டு, "பொருளில்லார்க்கு அவ்வுலகம் காத்திருப்பதாக ஏதோ ஒரு கூற்று கூறிக்கொண்டிருக்கிறது. தன் சொந்த நலத்தில் நாட்டம் செலுத்திவிடாதபடி கற்பனை கதைகள், சொர்க்கம், மறுவாழ்வு, அமோகமாக காத்திருக்கிறது என்று ஏதோ சமாதானம் சொல்லி பிரம்மையில் வைத்திருக்கிறது மதம். மதத்தால் இது தவீர வேறொன்றையும் மானிட வர்க்கத்திற்கு தேவையான நலன்களை எப்போதும் செய்துவிட முடியாது.


தமிழச்சி
21.03.2009