நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம்.

 

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த இந்த இயக்கங்கள், இறுதியில் அதே மக்களின் வாழ்வாதாங்களான வாழ்விடங்களை,பயிற்செய்கை நிலங்களை மற்றும் விவசாயத்தைச் சிதைத்தும், சந்தைப்படுத்தப்படும் கூட்டுறுவச் சங்கங்களை செயலற்றுத்தாக்கியபடி கொள்ளையடித்தும், மக்கள் விரோத அமைப்புகளாகச் சீரழிந்தன “விடுதலை” அமைப்புகள்.இன்று, நமது மக்கள் பலநூறு ஏக்கரில் விவசாயஞ் செய்துவந்த வலயத்திலுள்ளதும் அந்த விவசாயத்துக்கு நீராதாரத்தை வழங்கியதுமான கல்மடுக் குளம் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்துபவர்களென்றுத் தம்மைத்தாமே ஏகபிரதி நிதிகளாக்கியப் புலிப் பாசிச இயக்கத்தால் பாரிய குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டு(குளத்தின் அணைக்கட்டுக்கள்),மக்களின் கிராமங்கள்,விவசாய நிலங்கள் குடிமனைகள் யாவும் நீரில் மூழ்கி நாசமாகும் அளவுக்குப் போரியல் வியூகம் அமைந்துள்ளது பாசிசப் புலிகள்!

இது,நியாயமா?

நாசிகள் இத்தகைய செயலைச் செய்வார்கள்!

ஒரு விடுதலை அமைப்பு?

சிங்கள வன்கொடுமை அரசே

இதுவரை செய்ய முனையாத செயலைப்

புலிகள் செய்து தத்மைத்தாமே

பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்!

 

கடந்த 24.01.2009 அன்று கிடைக்கப்பெற்ற செய்தியை மையப்படுத்தித் தமிழ் நாளிதழ்கள் “கல்மடுக்குளம் புலிகளால்

உடைக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகப் பாதுகாப்பு அமைச்சுக் கூறுகிறது”எனும்படி செய்தி எழுதுகின்றன.இதில் இவர்களின் கருத்தென்ன?மௌனிக்கிறார்கள்!-;இதுதாம் தமிழ்த்தரப்புப் பத்திரிகைத் தர்மம்! தூ…

 

தமிழ்பேசும் மக்களினத்தின் அரசியல் இவ்வளவுதூரம் தமக்குத்தாமே நெருப்பைத் தலையில் கொட்டுவதாக இருக்குமென எவரும் நினைக்கவில்லை!எனினும்,அதுவே நடந்துவரும் இவ்வளவு நாள் அரசியலிலிருந்தும் நாமெதை உலகத்தின்முன் விட்டுவைத்துள்ளோம்? “நாம் பயங்கரவாதிகள்,தனியரசைக் கொண்டியக்கும் தகமை அற்றவர்கள்,மாற்றினத்தோடு சகஜமாக வாழ இலாயக்கற்றவர்கள்,போர் நெறிமுறையைக் கைகொள்ளும் திறன் அற்றவர்கள்.”என்பதைத்தாம்!இலங்கைச் சிங்கள அரசு இத்தகைய கயமைத்தனமான செயலைத் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ததாற்றாமே நாம் போராட வெளிக்கிட்டோம்?இதற்கு மனசுத்தியோடு பதிலளிக்கமுடியுமா?

 

கல்மடுக் குளத்தால் 1200 இராணுவத்தைக் கொன்றதையெண்ணி ஆனந்தக்கூத்தாடும் புலம்பெயர்ந்த காட்டுமிராண்டித் தமிழர்கள்,தமது சொந்த மக்களின் வாழ்வாதாரம் இதனால் மீளமுடியாதாளவுக்குப் பாதிப்படைந்ததை எண்ணுகிறார்களா?

 

உலகத்தில் நடந்த கொடுமையான போர்களில் பல, இத்தகைய நடாத்தைகளைச் செய்வித்த அரசுகளை மக்கள் விரோதிகளாகவும்,நாசிசப் பயங்கரவாதிகளாகவுமே உலகுக்கு அறிமுகப்படுத்தியது.சமீபத்தில் நாசிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு தமது வீரத்தைக்காட்டி மக்கள் விரோதிகளாகவும்,பாசிசிஸ்டுக்களாகவும் அம்பலப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

 

மக்களின் அதீத தேவையான நீராதாரத்தோடு விளையாடுபவர்கள் உலகத்தில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

 

நதிகளையும்,குடிநீர் ஆதாரத்தையும் நஞ்சாக்குவதற்கு முனைந்தவர்கள் உலகத்தில் நாசிகள் என்பது உலகறிந்தது.அவர்கள், அத்தகைய இழி நடாத்தைகளை மட்டுஞ் செய்வில்லை!மனித குல வரலாற்றில் மிகக்கெடுத்தியான அனைத்தையுஞ் செய்தவர்கள் நாசிகள்.இவர்களின் பாத்திரத்தை இப்போது அமெரிக்க அழிவு அரசியலும் அதன் இராணுவமும் செய்து வரும்போது, இதைவிஞ்சும் அளவுக்குத் தமிழ்த்தேசியச் சிறுமைமனங்களும் செய்து வரும் இத்தகைய குளக்கட்டுகள் தகர்ப்பு யுத்தம்-வியூகம் நாசியத்துக்கு ஒப்பானது!

 

நாம் அன்றே சொன்னதுபோன்று:”இலங்கை அரசின் ஆதிகத்தைத் தமிழ் நிலப்பிரதேசங்களிலிருந்து உடைக்காது,அதன் அரச வன்முறை ஜந்திரத்தை உடைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சில நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலோ அன்றிச் சில ஆயிரம் சிங்கள இராணுவத்தைக் கொல்வதாலோ தமிழீழம் விடுதலையடையாது”.என்பதை மீளவுஞ் சொல்லுகிறோம்.

 

இதனால் பாதிப்படைந்து பரதேசிகளாக மாறியவர்கள் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல.இலங்கையின் முழு மக்கள் சமுதாயமுமே.இதனாற்றாம் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசால் உலகத்துள் பிரச்சாரஞ் செய்யப்படுகிறது.இப்பிரச்சாரம் சரியானதென நான் ஏற்கிறேன்.

 

1:புலிகள் மக்கள் விரோதிகள்.

 

2:சொந்த மக்களின் அழிவில் அரசியல் செய்யும் இயக்க வாதிகள்.

 

3:தமது தலைவர்களின் சுகபோகத்துக்காக மக்களை அழிவுக்கிடுவதில் முதன்மையானவர்கள்

 

4:சொந்தச் சுகபோகத்துக்காக மக்களின் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் அடாத யுத்தத்தில் தமது இருப்பைக் காக்க முனைபவர்கள்.

 

5:மனித சமூகத்தின்மீது எந்தக் கொடுமையையும் கட்டவிழ்த்துவிட்டுத் தமது நலனைக் காக்க விரும்புபவர்கள்.

 

இதுவனைத்தும் பாசிசத்தின் குணாம்சமாகும்.புலிகள் தொடர்ந்து இதையே செய்பவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.மாவிலாறு நீர்த்தேக்கம் முதல் இன்றைய கல்மடுக்குள அணைக்கட்டுவரைப் புலிகள் செய்யும் மனிதவிரோத அரசியல் தமது சொந்த மக்களின் அழிவையே துரிதப்படுத்துவது.எனவே,புலிகள் அமைப்பு வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படவேண்டியவர்களே!

 

இத்தகைய நடாத்தையை எவர் மகிழ்ந்து கொண்டாடுகிறாரோ அவர்களும் மக்கள் விரோதிகளே!

 

நாம் மீளவுஞ் சொல்கிறோம்:

 

“புலிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு யுத்த வியூகங்களைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.மக்களின் வாழ்வோடு விளையாடும் பொய்மைத் தமிழீழக் கோசத்தைத் தொலைத்துவிட்டு, இருக்கின்ற போராளிகளையாவது காக்க முன்வரவேண்டும்.இதை விட்டுவிட்டு மக்களைக் கேடயமாக்கி வைத்தபடி ஒரு போரைச் செய்து தமிழீழம் காணமுடியுமெனில் உலகத்தில் உங்களைவிட மனிதவிரோதிகள்-முட்டாள்கள் எவருமில்லை.”

 

சிங்கள வன்கொடுமை அரசே இன்று குறிப்பிட்டளவு மக்கள் நலனுடைய அரசாகத் தன்னைக்காட்டும்போது, புலிகள் தம்மைப் பயங்கரவாதிகள்தாமெனப் பறைசாற்றும் மக்கள் விரோத நடவடிக்கை செய்வது எதனால்?

இக் கேள்விக்கு,”அவர்கள் பாசிஸ்டுக்கள்,எனவே அதைச் செய்கிறார்கள்.”என்ற பதிலைத் தவிர வேறென்னத்தை நம்மால் சொல்ல முடியும்?

 

கடந்தகாலத்தில் தமிழ்ச் சமுதாயத்துள் வாழ்ந்த முஸ்லீம் இனத்தை கிட்லரின் அதே அரசியல் நடாத்தைகள்மூலமாகப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டியோடவைத்துத் தம்மைப் பாசிஸ்டுக்களாக உலகுக்குக்காட்டினார்களே,அதே செயல்கள் மீளவும் புலிகளால் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டு, இலங்கை அரசையும்,அதன் சிங்களச் சியோனிசக் கருத்தமைவுகளையும் இத்தகைய நடாத்தைகள்மூலம் நியாயப்படுத்திவிட முடிகிறது.

 

புலிகளால் மக்கள் பட்டது போதும்.

 

போய்த் தொலையுங்கோடா தம்பிமாரே!

போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.

 

மக்களுக்கு, “கல்மடுக் குளக் கட்டை மீளக்கட்டி குடியிருப்பதற்கும்,விவசாயஞ் செய்வதற்கும் இலங்கை அரசைவிட்டால் வேறுயாரும் இல்லை”என்பதை மீளச் சொன்னதற்கு-செய்ததற்கு நன்றி!

 

ப.வி.ஸ்ரீரங்கன்

25.01.2009