தேசக் கருச்சுமந்து

போராடச் செல்வோனே!

சிங்களக் கொடுங்கோன் கண்டு

கிளர்ந்தவனல்லவா நீ?

 

உனது பெற்றோரைப்

பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,

உனது

கிராமத்தைக் கற்பழித்தபோது

ஆயுதந்தரித்தவன் நீ,

 

பாசிச அரசோ

அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!

புத்தனின்

 

பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்

உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!

 

 

மீளவும்

பாதகர்கள் தோழா,

பாதகர்கள் தோழா

பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழா!

 

என் தோழா,

இது கண்ணீர்த்தானம்

அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு

இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழா?

புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

 

நான் அழுகிறேன்,

என் இதயம் தினமும் ஓயாது நோகிறது

நான் யார்?

இனவாதியா,இடதுசாரியா?

எதுவுமே இல்லை!

 

மனிதன்

மகத்துவமாக வாழ்வதற்காக-நீ

போராடும் பொழுதில் நான் பார்வையாளன்

என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று

உன்னைக் கொன்றோம்

 

தோழா,

தனித்தாடா போராடுகிறாய்?

உனக்கு யாருமே இல்லையாடா?

எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்

திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்

துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

 

எனக்குப் பசிபோக்கிய பனை

உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட

எனக்கு வாய்க்கவில்லை!

 

ஓ…

தற்குறியான என் சுயமே

என் உடலை

அவனுக்கு-அவளுக்கு அரணாக்கு

நான் மற்றவரைக் கொல்லேன்

என்னைக் கொல்பவரையும் விடேன்

நீ

என் சுயத்தைக் கொண்டாய்

நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

 

அர்ப்பணிப்புடையவனே-தோழா!

தமிழன் நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை

நாம் ஒடுக்கப்பட்டவர்கள்

தொடர்ந்தும் உலகங்களாலும்

இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்

உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்

நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

 

நான் அறிவேன்

நீ பாசிஸ்டு இல்லை

எனது மாமியன் மகனும்

அக்காளின் மகனும் நீ

உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?

போடு குப்பையில் என் புரிதல்களை

மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய

நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

 

உன் வாழ்வுக்காக அழுகிறேன்

வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!

என் புதல்வனே!,தோழனே,மருமகனே,சோதரனே

சும்மாவடா சொன்னார்கள்

“தன் கையே தனக்கு உதவி” என?

 

இன்னொரு

வாழ்வுக்காக நான்

உனது அழிவை விரும்பேன்

நீ இந்த மண்ணின் மகன்

என்னை உனக்குள் புதைத்துவிட்டு

நான் உனக்காகக் கிறுக்குவேன்

இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

 

பார்வையாளனக இருக்கும் நான்

உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்

கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை

என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்

பாவி நான்,வஞ்சகன்

வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்

உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்

கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வன்-மகள் நீ

எனது குருதியின் துளியே

உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு

நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்

உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்

என் நிழலும் இருக்கிறது

 

என் தோழா!

உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,

உன் தேசக் கனவை அழித்தெறியவும்

உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்

நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

 

கைகட்டி,வாய் மூடி

வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு

உனக்கும் எனக்கும் தொடர்பற்ற

உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,

எனது மக்களின் மண விழாவுக்கு

வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்

நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி

எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

 

என் தோழா,

நான் வஞ்சகன்!

எனக்காக நீ உயிர் தருகையில்

உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்

எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,

விலைமதிப்பற்ற எனது தேசமே!

ஏனடா நான் பார்வையாளன் ஆனேன்?

உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து

நான் மட்டும் தப்பினேனா?

 

மகத்துவம் என்பதை

உனது வாழ்வினோடு சொல்பவனே,

உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்

இங்கு கண்டேன்16_01_09_ltte_0416_01_09_ltte_01

வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு

நான் உன்னைக் கொன்றுவிட்டேன்

உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

 

உன்னைச் சுற்றி வளைத்த

பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்

உலகத்தைத் தமக்கிசைவாக்கி

ஒவ்வொரு திசையிலிருந்தும்

உன்னைக் குறிவைத்திருக்கையில்

நீயோ

திடமான நெஞ்சை முன் நிறுத்தித்

தேசத்துக்காக

உனது உடலைக் காணிக்கை செய்து

என்னை எள்ளி நகையாடுகிறாய்!

 

என் உயிரே,உத்தமனே!

உணர்வுடையவன் நீ

உனது நரம்புகளில்

எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்

போ,போரிடு,போரிடு

வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு

என் தேசமானவனே!

உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

 

நீ எனது தேசம்,

நீ,எனது மொழி,

நீ,எனது மதம்,

நீ,எனது உடல்,

நீ,எனது வேர்,

நீ,எனது பூர்வீகம்!

நீ,எனது மகன்,

உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்

உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகனே!

 

என் தேசத்தின் வீரமே!

உனக்கு ஒரு பனைமரமாக இருந்து

அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்

உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு

எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது

என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

 

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்

உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது

உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது

உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது

இதயம் நோகிறது-நீ

போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்

உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது

உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்

நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

 

தோழா,

உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்

ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்

ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன

உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு

நீ

முதலில் அழிக்கப்படுகிறாய்

உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா

பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

 

என்னவனே(ளே)

எனது காதலா(லி),கண்ணைக் கசக்குவதால்

நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்

எனது அழுகை எனக்கானதே!

நீ, என்னை மன்னிக்காதே

எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை

உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

 

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்

உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்

எவருமே உனக்கு உறுதி தரவில்லை,

உனது மனத்தைத் திடமாக்கி

அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து

எதிரியின் மூஞ்சியில் துப்பு

அது எனது மூஞ்சி.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

17.01.2009