அன்பார்ந்த நண்பர்களே! வினவில் இலக்கியவாதிகளைக் குறித்து வந்த கட்டுரைகள் புதிய கலாச்சாரம் சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
முன்னுரை
சிறு பத்திரிகை உலகம் என்று அறியப்படும் இலக்கியவாதிகளின் உலகம் சில்லறைச் சச்சரவுகளாலும் குழாயடிச் சண்டைகளாலும்தான் தன்னை உயிர்ப்புடன் பராமரித்துக் கொள்கிறது. சும்மாவே சொறிந்து சுகம் காண்பவன் கையில் விசிறிக் காம்பு கிடைத்ததைப் போல இத்தகைய இலக்கியவாதிகளுக்கு இப்போது இணையம் கிடைத்திருக்கிறது. முன்பெல்லாம் டீக்கடைகளிலும், மதுக்கடைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும் மட்டுமே நடைபெற்று வந்த வாய்க்கலப்புகளும் கைகலப்புகளும் இப்போது இணையத்துக்கும் இடம் பெயர்ந்திருக்கின்றன.
வலைத்தளத்தின் மூலம் இலக்கியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் சார்ந்த விசயங்களுக்குப் புதிதாக அறிமுகமாகும் இளைஞர்களை இத்தகைய எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தமது குட்டைக்குள் இழுத்து முக்குகிறார்கள். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகள் உருவாக்கும் மலினமான ரசனைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அற்பவாதத்துக்கும் தனிநபர்வாதத்துக்கும் சமூக அக்கறையின்மைக்கும் புதிய வாசகர்களைப் பழக்குகிறார்கள். இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையிலான கம்யூனிச எதிர்ப்பையும் நஞ்சு போல ஏற்றுகிறார்கள்.
ஆளும் வர்க்கத்தின் அரசியலை கருத்துக் களத்தில் எதிர்த்துப் போராடுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு இவர்களுக்கு எதிரான போராட்டமும் அவசியமானது. புரட்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் குரல் கொடுக்கும் பல இளைஞர்கள் வலைத்தளத்தில் உருவாகியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. சமூக அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் துறைசார்ந்த அறிவும் கொண்ட இந்தப் புதிய எழுத்தாளர்களிடம் மேற்கூறிய இலக்கியவாதிகளுக்கே உரிய சில்லறைத்தனங்கள் இல்லை. அந்த வகையில் வினவு தளத்தில் இலக்கிய அற்பவாதிகளை அடையாளம் காட்டும் வகையில் வெளியான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஸ்டாலின் எதிர்ப்பு என்று தொடங்கி கம்யூனிச எதிர்ப்பின் இலக்கிய ஆயுதமாக ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்பட்ட சோல்செனித்சினைப் பற்றி புதிய கலாச்சாரம் இதழில் வெளியான கட்டுரையும் பொருத்தம் கருதி இத்தொகுப்பில் இடம் பெறுகிறது.
வலை உலகத்துடன் தொடர்பில்லாத வாசகர்களுக்கு சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள சில சொற்கள் புதியனவாக இருக்கக் கூடும். சற்றே முயன்றால் அவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.
தோழமையுடன்
ஆசிரியர் குழு,
பக்கம் - 56, விலை ரூ.25
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்