"பருவமே புதிய பாடல் பாடு" [தொடர்ச்சி]

 

[பத்து கட்டளைகள்]

 

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். 

 

மருத்துவன் என்ற முறையில், பல குடும்பங்களுக்கு ஒரு நண்பன், வேண்டியவன் என்று மதிக்கப் பட்டதால்,அவர்கள் குடும்ப நிகழ்வுகளில் நான் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபட வேண்டிய அவசியம் பல முறை நிகழ்ந்திருக்கிறது.

 

மாமியார் கொடுமை முதல், குழந்தையின் காதுகுத்து வரை, சம்பந்தமே இல்லாமல், முக்கிய மனிதனாகக் கருதப்பட்டு, ஆலோசனைகளும், பஞ்சாயத்து செய்வதும் சற்றே பழகிப்போன விஷய்ங்கள்!

 

அந்த முறையில் என்னிடம் வந்த ஒரு நிகழ்வு இது.

 

சற்று வசதியான குடும்பம்.

பெண்ணை கான்வென்டில் சேர்த்துப் படிக்க வைத்திருந்தார்கள்.

ஒரு 13 - 14 வயது இருக்கும்.

சென்ற வருடம்தான் வயதுக்கு வந்த சிறுமி.

 

என் க்ளினிக்கிற்கு வந்த ஒரு மூன்றாம் நபர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார்.

அந்தப் பெண்ணும், இன்னொரு இளவயசுப் பையனும் அடிக்கடி சேர்ந்து சுற்றுவதாக.சொன்னவரிடம் யார் அந்தப் பையன் என்று விசாரித்து,உறுதி செய்து கொண்டு, அவருக்கு நன்றி சொல்லி விட்டு, இரவு வீட்டிற்குச் செல்லுகையில், அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

 

பழகியவன் என்பதால், எப்போதும் போல் சாதாரணமாக வந்திருப்பதாய் நினைத்து வரவேற்று, ஒரு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்துவிட்டு[அது வாடிக்கை அந்த வீட்டில் எனக்கு!]ஊர்க்கதை பேச ஆரம்பித்தார் அந்தத் தந்தை.அவரிடம், நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்லணும். இது போல, விஷயம் என மெதுவாகச் சொன்னேன்.

 

முகம் சிவந்து, பல்லை நற நறவெனக் கடித்து, மனைவியை நோக்கி உறும ஆரம்பித்தார் அவர். 

 

"எல்லாம் இவளால வந்த வினை டாக்டர். எனக்கும் கூட நேற்றுத்தான் இந்த விஷயம் தெரிய வந்தது. இவ கொடுக்கற செல்லத்துல தான் அவ இப்படி ஆடறா" எனப் பொரிந்து தள்ளினார்.

 

இது நான் ஓரளவு எதிர்பார்த்த வினைதான் என்றாலும், இந்த நேரத்திற்கு இது ஆகற கதை இல்லை என்பதால், அவரை மரித்து," இது நேரம் இல்லை பழியை யார் மேல போடறதுங்கறதுக்கு. இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க என்று தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தது" என்றேன்.

 

"என்ன செய்யணும்ஙறீங்க? ஸ்கூலை மாத்த வேண்டியதுதான். அவ பின்னாடி கூடமாட போக வேண்டியதுதான் இனிமேல. வேர என்ன பண்னணும்னு சொல்லுங்க" என்றதும் எனக்கு வருத்தமாய் போய் விட்டது.

 

அடுத்தவர் மீது பழி போடலும், மகளைத் தண்டித்தலும் இரண்டுமே எனக்கு சரியாகப் படவில்லை.

 

அவரைப் பார்த்து,

"இது சரியானதாகத் தோன்றவில்லை. உங்க குடும்பத்துல ஒருத்தன் மாதிரி என்னை நடத்துவதால் நான் சொல்றதை நீங்க கேக்கணும். கோபப்படாம நிங்க உங்க பெண்ணொட பேசணும். என்னன்னு விசாரிக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக் [Just friends]கூட இருக்கலாம். அப்படித்தான் அது சொல்லும். அதை நீங்க நம்பணும். அட் லீஸ்ட் [at least] நம்பற மாதிரியாவது நடிக்கணும். பிறகு, பொறுமையா, ஆத்திரப்படாம, அவ கிட்ட, இது எப்படியெல்லாம் அவளையும், நம்ம குடும்பத்தையும் பாதிக்கும், இதுல என்னவெல்லாம் கவனமா இருக்க வேண்டிய விஷயம் இருக்குங்கறதை தெளிவா புரியும்படி சொல்லணும். பருவ காலத்துல இது மாதிரியான சில விஷயங்கள் நடக்கரது சகஜம்தான். இதைப் பெரிசு படுத்தி, அது அவமானப் படற மாதிரியோ, இல்லை மனசு பாதிக்கற மாதிரியோ நடந்துகிட்டீங்கன்னா, அப்புறம் உங்க பொண்ணு எப்பவும் உங்களை மன்னிக்காது. எனக்கும் அந்தப் பையனோட வீட்டைத் தெரியும். நான் அவங்க கிட்ட பக்குவமா இதைப் பத்தி சொல்லி அங்கேயும் பேசச் சொல்றேன். ஆனா, நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம் இதுல" என்றேன்.

 

அது போலவே நடந்து எல்லாம் சரியானது தனிக்கதை. 

இங்கு வேண்டாம்.

 

இதுதாங்க விஷயம்.

பருவம் ஆரம்பிக்கற நேரத்துல, ஒரு சில மாற்றங்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் நடக்குது.

 

இதுல பெற்றோர்களின் பங்கு என்ன, எப்படி நடந்துக்கணும் அவங்க என்பதைப் பார்ப்போம்.

 

ரொம்ப பெருசா பதிவு இருந்தா, நிறையப் பேரு படிக்க மாட்டாங்கன்னு எனக்கு ஒரு சக பதிவர் எச்சரித்ததால் கொஞ்சம் சுருக்கமா சொல்றேன்.

 

பத்து கட்டளைகள்

 

1. இந்தப் பதிவைப் படிக்கறவங்களுக்கு பல்வேறு வயதுகளில் குழந்தைகள் இருக்கலாம்.அதனால, சில பேர் இப்பத்தான் இதைப் பத்தி தெரிஞ்சுக்கற நிலையிலும் இருக்கலாம்.அவங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை.இதுதான் கடைசி நிலை.இப்ப விட்டீங்கன்னா, அவங்களை நீங்க பிடிக்கவே முடியாது. என் பெண், பையன் தப்பு பண்ண மாட்டான் என்கிற மனோபாவத்தைத் தூக்கி எறியுங்க. 

 

2. உடல் உறவு சம்பந்தமா உங்க குடும்ப வழக்கங்களைத் தெளிவாக பையன் பிள்ளைகளுக்கு, இதுவரை சொன்னது இல்லைன்னா, இப்பவாவது சொல்லியே ஆகணும். உடல் உறவு என்பது ஒரு இனிமையான அனுபவம்தான் என்றாலும், சற்று மன முதிர்ச்சி அடைந்த பின்னர் இதில் ஈடுபடுவதுதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்பதை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.

 

3. நெருங்கிப் பழகவும், அன்பைக் காட்டவும், உடல் உறவைத் தவிர பல வழிகள் உண்டென்பதைச் சொல்லிக் கொடுக்கணும்.

 

4. வயது, இருவரின் உடன்பாடு,[consensus] தடுப்பு முறைகள்,[contraception] அன்பு, [love], காதல்,[love for a particular person], நெருக்கம் [intimcy] அதனால் ஏற்படும் விளைவுகள் இவை பற்றி எல்லாம் ஒரு தெளிவான புரிதலை அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் தேவையான ஒன்று.

 

5. 'வேண்டாம்'[NO] 'கூடாது' [DON'T] என்ற சொற்களின் முக்கியத்துவத்தை ஆழமாக்ப் பதிய வைக்க வேண்டும்.

 

6. இது உன் உடல், உள்ளம். உன் சம்மதமின்றி எவருக்கும் இதில் ஆளுகை புரிய அதிகாரமில்லை. இதற்கான முடிவெடுக்கும் திறமையும், அதிகாரமும், உனக்கு மட்டுமே உள்ளது என்பதையும் அந்த உறுதி வளரும் வரை, பெற்றவர் துணையை நாடி இருப்பதின் அவசியத்தையும் வேரூன்றச் செய்ய வேண்டும்.

 

7. எதையும் அடுத்தவரிடம் சொல்லுதற்குப் பதிலாக, பெற்றவரிடம் வந்து சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிப்பதில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. குடும்பச் சூழலை அப்படி அமைத்துக் கொள்வதில், அப்பா, அம்மா இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. குழந்தைகள் உங்களைப் பார்த்து பயப்படும்படி செய்வதில் இனிமேல் ஒரு பெருமையும் இல்லை. மாறாகக் கேடுகளே விளயும். ஒரு நண்பனாக, தோழியாக உங்களைக் கருதுமாறு, அதே சமயம் உங்கள் மரியாதை குறையா வண்னம் நடந்து கொள்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.

 

8. தவறுதலாகவோ, தெரியமலோ அப்படி ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விட்டாலும், அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில், உங்கள் குடும்ப மரபின் படி தீர்மானமாக இருப்பது நன்மை பயக்கும். கருத்தடையோ,[contraceptives], சிதைவோ[abortion], வளர்ப்போ,[parenting] தத்து கொடுத்தலோ,[adoption] இவையெல்லாம் கூட சற்று முன்கூட்டியே இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு செய்து வைத்துக் கொண்டால் கூட தவறில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால், இதில் ஒரு தெளிவு இல்லையெனில், பிரச்சினை என்று வரும் பொது, இதன் மூலம் பலவித சங்கடமான விளைவுகள் வரலாம். இது நிகழும், நிகழ வேண்டும் என்ரு சொல்லவில்லை. ஆனால் ஒரு நிலைப்பாடு இருப்பது நல்லதல்லவா?

 

9. எப்படியெல்லம் ஒரு சிலரால் உடலுக்கும், மனதுக்கும் கேடு[abuse] விளவிக்க முடியும், அதற்கு எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை TV பார்க்கும் போதோ, அல்லது இது போன்ற நிகழ்வு ஒன்று அக்கம்பக்கத்தில் நடந்தாலோ, அந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான விவாதம் நடப்பது இவர்களுக்குப் பெரிதும் உதவும் .

 

10. பருவம் என்றதுமே, உடனே அது உடல் உறவு, திருமணம் பிள்ளை பெற்றுக் கொள்ளல், குடும்பம் நடத்துதல் என்றுதான் இல்லாமல், இது தவிர ஒரு சிலர், தனித்தும் இருக்க , இதிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இருக்கவும் கூட வாய்ப்புண்டு என்பதையும் சொல்லித் தர வேண்டும். இல்லையென்றால், நாம் ஏதோ சமூகத்தில் சேராத பிறவி என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் தடுக்க இது பயன்படும்.

 

அன்பும்,[love], பாசமும், [affection], குடும்ப நிலைகளும் [family values] காட்டி, பொறுமையுடனும், நிதானமாகவும் செய்தால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும், ஒரு அளவு வரை..... அவர்கள் தாங்கள் யார், தனக்கு என்ன வேண்டும், தன்னால் என்ன முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் வரும் வரை.

 

அதன் பிறகு.....?

 

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

 

கவலைப் படாதீர்கள்.

உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை அடுத்தது!

 

பெற்றவர்கள் அஞ்சும் அந்தப் பதினெட்டு!