கிரீஸ் மாணவர் எழுச்சி அலை, பத்து நாட்களாகியும் இன்னும் ஓயவில்லை. ஆளும் வலதுசாரி அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்த பின்னரும் கலவரங்கள் தணியவில்லை. வாரக்கணக்காக தொடர்ந்த கலவரங்கள் காரணமாகத் தான்,

 நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினை என்பதையும், அதனை இல்லாதொழிக்க வேண்டிய அவசியத்தையும் கிரீஸ் அரசாங்கம் உணர்ந்து கொண்டது. (நமது அரசாங்கங்களும், இது போன்ற கலவரங்கள் நடக்கும் வரை காத்திருக்கிறார்கள் போலும்.) இருப்பினும் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் தான் மாணவர் எழுச்சிக்கு காரணம் என்ற போதும், அதை தவிர வேறு பொருளாதார நடைமுறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு தெரியாதாம். அதனால் ஏற்கனவே பாதிப்படைந்த தேசப் பொருளாதாரத்தை, கலவரங்கள் மேலும் பின்னடைய வைத்துள்ளதாக கிரீஸ் பிரதமர் கவலைப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தில் மட்டும் 400 க்கும் அதிகமான வர்த்தக ஸ்தாபனங்கள் தீக்கிரையாகியுள்ளன. நகரமத்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வைக்கப்பட்டிருந்த பாரிய கிறிஸ்துமஸ் மரம் கூட தீயிடப்பட்டது. (இது பண்டிகைக் காலமாகையால், வியாபாரத்தை அதிகரிக்க ஐரோப்பிய நகரத்தெருக்களில் சோடனை அலங்காரங்கள் காணப்படும் ) பொருளாதார பிரச்சினை காரணமாக பெருமளவு மக்கள், பண்டிகை காலங்களில் செலவிட அதிக பணமில்லாமல் இருக்கும் வேளை, பணக்காரர்கள் மட்டும் வழமை போல வாங்கிக் குவிக்கின்றனர். இது போன்ற வர்க்க வேறுபாடு தான், கலவரக்காரர்களை மக்கள் ஆதரிக்க காரணம்.

டிசம்பர் 16 ம் திகதி, ஒரு இளைஞர் குழு தேசிய தொலைக்காட்சியின்(NET) செய்தி நேரத்தின் போது, அந்த நிலையத்தினுள் புகுந்தது. அப்போது அந்த தொலைக்காட்சி, கிரேக்க பிரதமரின் பாராளுமன்ற உரையை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தது. சிறிது நேரம் அந்த ஒளிபரப்பு தடைப்பட்டு, தொலைக்காட்சி கமெராக்கள் புரட்சி வாசகங்களை தாங்கி இருந்த இளைஞர்களை படம் பிடித்தன. "தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டு, வீதிக்கு வந்து போராடுங்கள்" என்று கிரேக்க மொழியில் எழுதியிருந்த வாசகங்களை, நாடு முழுவதும் மக்கள் கண்டுகளித்தனர். அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.