இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம் உள்ளுர் தேசிய செல்வங்களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள்ளையாகும்.

 

இந்த வகையில் வாழைச்சேனையிலிருந்த காகிதத் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இங்கு தொழில் புரியும் 1350 தமிழ், முஸ்லீம் ஊழியர்கள் தமது வேலையை இழக்கும் அபாயத்திலுள்ளனர்.

 

தமிழ்பகுதியிலிருந்த மூன்று முக்கிய பெரிய தொழிற்சாலைகளான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பன மூடப்பட்ட நிலையிலும் இறுதியில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மூடிவிட இனவாத சிங்கள அரசு முயல்கின்றது.

 

40 வருட பழமைவாய்ந்த இந்த தொழிற்சாலையை திட்டமிட்ட இனவாத சூழ்ச்சியில் கடந்தகாலத்தில் நலினப்படுத்தப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த பழைய இயந்திரங்களின் மூலம் ஊழியர்களின் சொந்த முயற்சியில் உச்ச உற்பத்தியைப் பெற்று வந்தனர்.

 

இந்த தொழிற்சாலையைக் கொண்டு கிடைக்கப்பெற்ற வருமானத்தில் கட்டப்பட்ட எம்பிலிபிட்டிய காகித ஆலை நட்டத்தில் இயங்கிய காலத்திலும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை கைகொடுத்துப் பாதுகாத்தது.

 

இன்று திறந்த பொருளாதாரக் கொள்ளையின் ஒரு வடிவமான உலகமயமாதலின் தொடர்ச்சியில் காகிதம் மீதான சுங்க தீர்வையை அரசு ரத்துச் செய்வதன் மூலம் வெளிநாட்டுக் காகிதம் மலிவு விலையில் வெள்ளமாக இலங்கைக்குள் பாய்கிறது.

 

இதனால் அரச நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்கள் வாழைச்சேனைக் காகிதத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் வாழைச்சேனைக் காகித ஆலையில் உற்பத்தியான 3500 தொன் காகிதம் தேங்கி பாதுகாக்க வசதியின்றியுள்ளதுடன், மீள் உற்பத்தியாக சேமித்த காகிதமும் தேங்கத் தொடங்கியுள்ளது. மீள் உற்பத்தியைத் தடுக்குமாயின் அல்லது வெளிநாட்டு உற்பத்திக்கு மலிவு விலையில் செல்லுமாயின் இதைச் சேகரிக்கும் வறுமையிலுள்ள குடும்பங்கள் மேலும் பட்டினிச் சாவுக்கு நகர்த்தப்படுவர்.

 

இன்று உலகவங்கியின் கட்டளையை நிறைவு செய்ய அதுவும் அதைத் தமிழ்ப்பகுதியில் நடத்திவிட இனவாத அரசு தனது சிங்கள மேலாதிக்க நிலையில் நின்று செயல்படுகிறது. இன்று இலங்கையில் தேவை தமிழ் சிங்கள் மக்கள் இணைந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். இதை விடுத்து தமிழ்ப்பகுதி என கண் மூடின் மறுபுறம் இருப்பதை இழப்பதற்கு முதல்காலடி எடுத்து வைப்பதாக இருக்கும்.