இடி முழக்கங்கள்

இல்லாதது போல்
தோன்றும் காலமிது
..
வசந்தங்களின் வழியிழந்து
விடியலின் பூபாளங்கள் பொய்யாய்ப்
பழங்கதையாய் மெல்லப் போனதுவாய்
புரட்சியையும் தோன்றச் செய்யும்
புரட்டல்களின் காலமிது.
..
கல்கத்தாவின் வீதிகளில்
உறைந்த இரத்தத்தில்
உதிரக் கவுச்சியில்
இந்த தேசத்தின் புரட்சி
வரலாறு பொதிந்து கிடக்கிறது.
..
முதலாளித்துவம்
மார்க்கண்டேயவரம்
பெற்றதாய்
மறுபடியும் மறுபடியும்
உச்சாடனங்கள்!
..
நெரிக்கப்பட்ட குரல் வளைகளிலிருந்து
எழும்பிக் கொண்டிருக்கின்றன
சொற்கள் - இந்த முறை
வசந்தம் வந்தே தீரும்.
..