தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி மாவை, வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

வறுத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டிக்காம்பால் கிளறி விடவும். மாவு சிறிது ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசைந்து, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து மூடி, சற்று அழுத்தி விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து முடிக்கவும். இதை, எண்ணை தடிவிய இட்லித் தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து, ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: புட்டு மாவில் இந்தக் கொழுக்கட்டையை, சுலபமாகச் செய்யலாம். புட்டு மாவில் உப்பைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரைத் தெளித்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்துக் கிளறி, கொழுக்கட்டைப் பிடித்து வேகவைக்கலாம்.

நான் சிவப்பரிசி புட்டு மாவில் கொழுக்கட்டைச் செய்துள்ளேன். சுவையும், சத்தும் இதில் சற்று அதிகம்தான்.

 

http://adupankarai.kamalascorner.com/2008/09/blog-post_13.html