தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும்

 கிடையாது என்று சொல்வதே, அதன் அரசியல் சூக்குமமாகும். காலனித்துவ காலம் தொடக்கம் பேரினவாத சக்திகள் படிப்படியாக தமது பேரினவாத தமிழ் விரோத செயல்களை செய்து வருகின்றது. இதை இன்று வெறும் புலிப் பயங்கரவாதமாக திரித்து உலகறியச் செய்கின்றது. ஒரு இனம் திட்டமிட்ட வகையில் பேரினவாதிகளால் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது.

 

இந்த பேரினவாதத்துக்கு துணையாக, அக்கம்பக்கமாக இரண்டு தமிழ் துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று கூறியபடி, அவர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைத்தபடி தமது துரோகத்தை அரசியலாக்க முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இரண்டு துரோகிகள் யார்?

 

1.புலிக் கும்பல்


2.புலியெதிர்ப்புக் கும்பல்

 

தமிழ் மக்களின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும் அன்றாடம் அழித்தபடி, இந்த துரோகிகள் தமிழ் மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுகின்றனர். மக்கள் தாம் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும் என்பதில் நம்பிக்கையற்ற இந்த துரோகக் கும்பல்கள், குறுங்குழுவாத அரசியலைச் செய்கின்றனர். தமிழ் மக்கள் தமக்காக போராட எந்த லாயக்குமற்றவர்கள் என்பதே, இவர்களின் அடிப்படையான அரசியல் கோட்பாடாகும். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இதனடிப்படையில் செயல்படும் இவர்கள், தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததும், கொடுப்பதும் அவர்களின் சொந்த வாழ்வியல் இழப்பையும் அவலத்தையும் தான்.

 

தமிழ் மக்கள் இந்த மக்கள் விரோத இரண்டு துரோக வழிகளிலும் சிக்கி படாதபாடுபடுகின்றனர். அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். இவர்களிடம் தமது சுய கவுரத்தை இழந்துவிட்டனர். நடைப்பிணமாக, தலையாட்டி பொம்மையாக மாற்றப்பட்டுவிட்டனர். தமிழ் மக்கள் எதையும் சுயமாக சிந்திக்கவோ, சுயமாக செயல்படவோ எந்த உரிமைற்றவராகிவிட்டனர். இதை வெறுமனே புலிகள் மட்டும் செய்யவில்லை. புலியெதிர்ப்புக் கும்பலும் சேர்ந்தே செய்தனர், செய்கின்றனர்.

 

20 வருடங்களுக்கு முன்னம் புலிகள் மாற்று இயக்கத்தை அழித்த பின், புலியெதிர்ப்பாக இந்த பிற்போக்கு கூறுகள் திரிபடைந்தன. அதற்கு முன் அனைத்து பழதான குழுக்களும் மக்களை எதிர்த்து நின்றன. இதனடிப்படையில் நூற்றுக்கணக்கான உள்ளியக்க படுகொலைகளை நடத்தினர். இதன் மூலம் மக்கள் நலன்களுக்கான போராட்ட கூறுகள் ஒழித்துக்கட்டப்பட்டன. மக்களுக்கான போராட்டம் என்பது, தேசவிடுதலைக்கு எதிரானதாக காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான துரோகத்தை அரசியலாக அரங்கேற்றினர்.

 

இப்படிபட்ட ஒரு அரசியல் தொடர்ச்சியில் தான், மக்கள் விரோத துரோகமே இந்தக் குழுக்களின் அரசியலாகியது. இதுவே புலியின் இயக்க அழிப்பின் பின், புலியாகவும் புலியெதிர்ப்பாகவும் சமூகத்தை பிளந்துகாட்ட முனைந்தனர். புலிகள் அனைத்தையும் தியாகம் துரோகம் என்று இரு வரையறையில் முத்திரை குத்தினர். புலியெதிர்ப்பு கும்பல் தாம் அல்லாத அனைத்தையும், புலியாக முத்திரை குத்தினர். மக்கள் நலன் சார்ந்த எந்த கூறையும், அதற்கான போராட்டத்தையும் தொடர்ச்சியாக புலிகளும், புலியெதிர்ப்பு துரோகிகளும் தமிழ் மக்களிடையே அனுமதிக்கவில்லை.

 

இயக்க ஒழிப்பின் பின்பும் அதற்கு முன்னமும் மக்களில் நம்பிக்கையற்று இந்தக் குழுக்கள், தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்பதை மறுத்து முதன்மையான துரோகிகளானார்கள்.

 

தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று இவர்கள் அன்று முதல் இன்று வரை கூறிக்கொள்வதன் மூலம், தமது மக்கள் விரோத பாசிச நிலையை அரசியலாக கையிலெடுத்தனர். தாம் போராடி தமிழ் மக்களின் விடுதலை பெற்றுத் தரப்போவதாக பறைசாற்றிக் கொண்ட இந்த துரோகிகள், மக்களை நாயிலும் கீழாக அடிமைப்படுத்தினர். மக்களை தமது தேவைக்கு பயன்படுத்தும் எல்லைக்குள் அடிமைப்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளை இன்றுவரை மறுத்து நிற்கின்றனர். அதை மீறுவதை துரோகமாக்கினர்.

 

புலித் தமிழீழம், புலியொழிப்பு ஜனநாயகம் என்று கூறியபடி, அனைத்தையும் இதற்குள் கட்டுப்படுத்தி சமூகத்தை அடக்கியொடுக்கினர், அடக்கியொடுக்குகின்றனர். மக்கள் இதற்கு வெளியில் சிந்திக்கவும், செயல்படவும் முடியாத வகையில், படுகொலை அரசியலை நடத்தினர், நடத்துகின்றனர்.

 

இதை சாதிக்க அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாகி விட்டனர். பேய்களுடனும், பிசாசுகளுடனும் கூடிக் குலாவுகின்றனர். அவர்களின் உதவியையும், வழிகாட்டலை பெறுவதுடன், ஆயுதங்களில் மட்டும் தங்கி நிற்கும் துரோகிகளாக உள்ளனர். இப்படி தமிழ் மக்களின் உள்ளேயான முதன்மையான எதிரிகளாவர். எதிரிக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தவிடாது தடுக்கின்ற, பாசிட்டுகளாக துரோகிகளாக உள்ளனர்.

 

கடந்த 20, 25 வருடமாக இவர்கள் கூறிக்கொள்வது, தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட மாட்டார்கள் என்ற மக்கள் விரோத பாசிசக் கோட்பாட்டைத் தான். இதைக் கூறிக் கொண்ட இந்த இரு துரோகக் கும்பலும், தமிழீழத்தையோ ஜனநாயகத்தையோ மீட்கவில்லை, மீட்கப்போவதுமில்லை. மாறாக அதை பரஸ்பரம் தத்தம் சொந்த துரோக வழிகளின் குழி தோண்டி புதைத்தனர், புதைக்கின்றனர்.

 

புலித் தமிழீழம் பெற தாம் அல்லாதவர் படுகொலைகளையும், ஜனநாயகத்தை பெற புலியொழிப்பு படுகொலைகளை அரசியலாக கொண்ட இந்த துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இதற்கு பல்வேறு மட்டத்தில் பேய்களும் பிசாசுகளும் உதவுகின்றனர். தமிழ் மக்கள் இதற்கு வெளியில் மூச்சுவிட முனைந்த போது எல்லாம், படுகொலைகள் மூலம் பதிலளித்தனர், பதிலளிக்கின்றனர்.

 

இவர்கள் தமது முரண்பாட்டின் இடையே, இரண்டு வழிதான் உண்டு என்கின்றனர். அதாவது புலித் தமிழீழம் அல்லது புலியொழிப்பு, இதை முன்வைக்கின்ற புலிகள், புலியெதிர்ப்பு வாதிகள் மட்டுமே உள்ளனர் என்கின்றனர். இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயல்படவும் யாருக்கும் அனுமதியுமில்லை, உரிமையுமில்லை. இது தான் உண்மை.

 

உண்மையில் மக்கள் தமக்காக தாம் போராடும் உரிமை கிடையாது என்று கூறும் இந்தக் கும்பல், அரசியல் படுகொலைகளையும் பாசிச வெளியாட்டத்தையும் அதன் மீது நடத்துகின்றனர்.

 

மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராடுவதை தடுப்பதில், புலிகள் முதல் புலியெதிர்ப்பு புலியொழிப்புவாதிகள் வரை ஊக்கமாக பங்காற்றுகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி யாரும் பேச முடியாது என்கின்றனர். அதற்குரிய காலம் இதுவல்ல என்கின்றனர். அனைத்தையும் தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பு ஜனநாயக மீட்பின் பின் என்கின்றனர்.

 

இப்படி கூறியபடி அனைத்தையும் இதற்குள் பரஸ்பரம் கட்டுப்படுத்தியபடி வெறியாட்டமாடுகின்றனர். தமிழ் மக்கள் தமக்காக தாம் சொந்தமாக போராட முடியாது என்பதும், அதை அவர்கள் செய்ய முடியாதவர்கள் என்று கூறும் இவர்கள், அதை தடுப்பதன் மூலம் சொந்த வலதுசாரி பாசிச சூறையாடலை தமிழ் மக்கள் நிலைநிறுத்த முனைகின்றனர்.

 

தமிழ் மக்கள் மீதான அனைத்து சமூக ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடுவதற்காக போராடுவதை தடுக்கின்றவர்கள் இந்த இரு துரோகிகளுமாவர். தமிழ் மக்கள் தாம் அணிதிரளவோ, அதை முன்வைத்து போராடவோ அனுமதிக்காது ஆயுத வன்முறையையும் ஊடக வன்முறையையும் கையாளுகின்றனர். தமது பாசிச அதிகார வெறிகொண்டு, தமிழ் மக்களை உள்ளிருந்து ஓடுக்குபவர்கள் வேறுயாருமல்ல, இந்த இரு துரோகிகளும் தான். இதை வேரறுக்காது, தமிழ் மக்களின் சொந்த விடுதலை கிடையாது.

பி.இரயாகரன்
30.08.2007