உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. கல்வி மறுப்பதும், கல்வியைத் தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசியப் பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரிய ருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.


1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்தது. இது 2003-இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வருகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில் 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.


இலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.
ஆண்டு                                 பாடசாலைகளின்                              மாணவர்கள்
                                                   எண்ணிக்கை                                   எண்ணிக்கை
1946                                               5946                                                     5,93,000
1976                                               9683                                                   25,72,000
1992                                            10590                                                    42,89,000
1997                                            10983                                                    42,60,000
2000                                              9992                                                    41,90,000
2001                                              9987                                                    41,84,957


1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மாகாண ரீதியாக


மேற்கு                         80
மத்திய                        44
தெற்கு                         72
வடகிழக்கு              149
வடமேற்கு              101
வடமத்திய                18
ஊவா                           08
சப்பிரகமுவ             54
மொத்தம்                526


இதில் 2002-இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. 1990-க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத் தொடங்கிய அரசு, அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை


1990-களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும், இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாகத் தொடர்புடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடையத்தை ஆராயின், முதலாம் ஆண்டு வகுப்புக்கான மாணவர் அனுமதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.


1980               3,64,500
1985               3,72,000
1990               3,87,000
1995               3,42,000
1999               3,43,000
2001               3,30,000
2002               3,30,000


1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர் அனுமதி, 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய, கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும், அன்றாட பிழைப்புக்குச் சென்று திரும்பும் வசதி கருதியே பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக கொண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தாரை வார்ப்பது போல், கல்வியினை வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.


இதன் விளைவு திடீரென நிர்வாணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாகப் பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களைக் கொடுக்கும் புள்ளிவிபரங்களைத் தயாரித்து வெளியிடுகின்றனர். இதனடிப்படையில் 5 பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவனும், 18 பாடசாலைகளில் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களைத் தயாரிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். அப்படி அனைத்துக் குழந்தைகளும் சென்றால், அவர்கள் எங்கே செல்லுகின்றனர் என்ற காரணத்தையும், ஏன் இந்தப் பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூடத் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும், பாடசாலைகளின் அவலங்களுக்குக் காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளைப் பூச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.


. மறு தளத்தில் கல்வி மறுப்பைத் துரிதமாக்கவும், மாணவர்களே கல்வியை வலுக்கட்டாயமாக கைவிடும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும், பாடசாலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலைகளில் 75 முதல் 100 மாணவர் கொண்ட அதே நேரம், ஒரு ஆசிரியரே உள்ளனர். மாணவர்களின் கல்விக்குப் போதுமான ஆசிரியர்கள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அமுல் செய்யப்படுகின்றது. 2001-இல் 1 முதல் 15 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந் தன. 16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவர்களைக் கொண்ட 744 பாடசாலைகள் இருந்தன. 100 மாணவர்க்கு குறைந்த 2657 பாடசாலைகள் காணப்படுகின்றது. இந்தப் பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அமுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவர்களின் கல்வி நிரந்தரமாகவே முடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொள்கையாகி உள்ளது. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன், அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் ஏழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர். பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், தனியார் மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.


திட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க, கல்வியின் தரத்தைக் குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையைச் சிதைத்து தனியார்மயமாக்கலைத் துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தாமாகவே தனியார் கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்வியின் தரத்தைக் குறைக்கும் முயற்சியாக, பாடசாலை ஆசிரியர்களின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் (அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில்) அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகள் உரிய தகைமைகள் அற்ற அதிபர்களால் நிர்வகிக்கப் படுகின்றது. பொதுவாகப் பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுக்கிகளும், சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதவிகளில் தொற்றிக் கொள்கின்றனர். சமுதாயத்தின் அனைத்து சமூகச் சீரழிவுகளின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளனர். இவர்கள் கற்பித்தல், கற்றுக் கொள்ளல், சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும், பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவர்கள், மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர். அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் பள்ளியில் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும், மாணவர்கள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை ஏவுவது மட்டுமின்றி, அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்தக் கல்விச் சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.


பாடசாலைகளின் அதிபர் நியமனத்தில் இனவாத அரசியல் புகும் போது, தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு வழங்கிய இனவாத நியமனத்தில், அதிபர் சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்கள ஆசிரியர்களும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இப்படி அதிபர் சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியர்களும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதிபர் சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியர்களும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் ஏற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள்ள நக்கி பிழைக்கும் தகுதியற்றவர்களைக் கொண்டு நிரப்ப, மறுபுறத்தில் இனவாதம், திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும், வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார் 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.


ஒருபுறம் தகமையற்ற பொறுக்கிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டைப் படுகுழியில் தள்ளுகின்றனர். மறு தளத்தில் உயர் தகமையுள்ள உயர் கல்வி பெற்ற 26,000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர். எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியையும் சீரழிக்கின்றது. ஆசியாவில் உயர்ந்த கல்வித் தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படைத் தரத்தை நிர்ணயம் செய்வது கணிதப்பாடமாகும். இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல் பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஐPரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தமும் புலிகளின் கொள்கையும் இதை உருவாக்கினாலும், ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்புதான் இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழும்புக்கு அடுத்த மிகபெரிய நகர் வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா, உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிதமாகியுள்ளது.


26,000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம், 2003 இல் உயர்தரப் பரிட்சையில் 2,51,000 மாணவாகள் தேறிய போதும் 16,000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவர்கள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரிட்சை எழுதிய பின்னும் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும், அவர்களுக்குக் கையூட்டும் கொடுத்து வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும், உலக நகர்புற லும்பன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஓடவும், நாயைப் போல் அடிமையாக, அடிமைப்பட்டு வாலாட்டும் அற்பத் தொழில்களைத் தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேர்மையாக இளமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ, இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞர்களுக்கு இல்லாததாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மேற்கண்ட சமூகச் சீரழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே தெளிவுபடுத்துகின்றது. ஜனாதிபதி சந்திரிக்க, அவரது மகன் விமுக்திக்கு கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேர்ச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளார். இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார் காணிகளை வாங்கிக் குவித்துள்ளனர். இன்றைய (2003) காணி அமைச்சர் தன் மீதான காணி மோசடிக்கு பதிலளிக்கும் போது, இவற்றை ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார். உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும், சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது.