மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்
மறிக்கின்ற இந்து மதமும்,
மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்
வாள்தூக்கும் மகம்மதி யமும்,
வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை

`மகாத்மீயம்' என்னும் நிலையும்,
வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்
மதிப்பைப் பறித்தெ றிந்து,
பாடின்றி வாழ்ந்திட நினைத்திடும் பாதகப்
பார்ப்பனர், குருக்கள், தரகர்,
பரலோகம் காட்டுவார்' என்கின்ற பேதமையும்
பகைமிஞ்சு கடவுள் வெறியும்,
ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற
அவ்வுரிமை நாளும் இங்கே
அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட
அழகுசெந் தமிழ்வை யமே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt253