காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,
கருங்குரங் கின்வா லிலே
கட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற
கழுதைதான் ஊச லாட
வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே
வெறிகொண்ட சாதி யென்னும்
வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி
மேதினி கலங்கும் வண்ணம்
வாணங்கொ ளுத்துகின் றான்என் பதும்வயிறு
வளர்க்கும்ஆத் திகர்க ருத்து.
மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும்
வாலையடி யோட றுத்தால்
சேணேறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும்
தீராத சாதி சமயத்
தீயும்வி ழுந்தொழியும் எனல்என் கருத்தாகும்
திருவார்ந்த என்றன் நாடே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt251