என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று
வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்
என்மா னத்தை ஈவேன்" என்று
மறுத்து, நான்வரும் வரைபொருத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
என்வீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
"ஏன்"எனில் அதட்டலென் றெண்ணு வாளோ?
"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ?
"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்
பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
"காத்திருக் கின்றேன், கட்டழ கே"என
உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.
ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
காத்தி ருப்பது கழறினேன்; உவந்தாள்.
ஒருநொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt214