1. உவகை
(இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச்
சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள்.
அவன் வருகின்றான்.)

காதலன்
என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி!
(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)
காதலன்
வா பறந்து! வாவா மயிலே!
(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)
காதலன்
வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர்
குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.)

2. வியப்பு
(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி)
காதலன்
வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும்,
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்.)
காதலன்
சோம்பிக் கிடந்த தோகை மாமயில்
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.)

3. இழிப்பு
காதலன்
குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;
இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்?
உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.
காலடி ஓசை காட்டாது மெல்லஅக்
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக் குரியாய் உணர்க!
(தம்மை நோக்கி வரும் அத்தீயனை
இருவரும் பார்க்கிறார்கள்.)

4. வெகுளி (கோபம்)
காதலன்
வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்!
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!
(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன்
உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன்
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான். காதலி காணுகின்றாள்.)

5. நகை
காதலன்
நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன்
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
காதலன்
ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)

6. மறம் (வீரம்)
காதலன்
என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)
காதலன்
எவனோ உறையினின் றுருவினான் வாளை;
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்முடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!
(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை
உற்று நோக்கியிருக்கிறாள்.)
காதலன்
(தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)
அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?
முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது
இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்!
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்.
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்!
(வாட்போர் நடக்கிறது.)
காதலன்
மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின்பெயர் வாழி!
(வந்தவன் இறந்து படுகிறான்.)

7. அச்சம்
(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)

8. அவலம்
(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.)
காதலன்
ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள்.
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அன்பே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை?
எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்!
தனித்தேன், உய்விலை. தையலே, தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!

9. அறநிலை
கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொலோ என்ன இருத்தல் கூடும்?
வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின்
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt202