இசை -- மோகனம் தாளம் -- ஆதி

வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்கவே!

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு.
வாழ்க வாழ்கவே...

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.
வாழ்க வாழ்கவே...

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.
வாழ்க வாழ்கவே...

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt200