என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt128