குன்றின்மீது நின்று கண்டேன்
கோலம் என்ன கோலமே!
பொன் ததும்பும் "அந்திவானம்"
போதந் தந்த தே - டி - தோழி!
குன்றின்மீது...

முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வர்; அஃது
குறுகும் கொள்கை அன் - றோ - தோழி!
குன்றின்மீது...

கண்ணும் நெஞ்சும் கவரு கின்ற
கடலை, வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில் வேலோன் என்றார்;
வந்ததே போர் இந் - நாள் - தோழி!
குன்றின்மீது...

எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ?
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில வெற்பும் நன் - றே - தோழி!
குன்றின்மீது...

பண்ண வேண்டும் பூசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ண வேண்டும் சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண் - டார் - தோழி!
குன்றின்மீது...

அன்பு வேண்டும்; அஃது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
வன்பு கொண்டோ ர் வடிவு காட்டி
வணங்க என்று சொல் - வார் - தோழி!
குன்றின்மீது...

என்பும் தோலும் வாடு கின்றார்
"ஏழை" என்ப தெண்ணார் அன்றே
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ - ழி - வாழி!
குன்றின்மீது...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.10._காட்சி_இன்பம்_