கல்யாணம் ஆகாத பெண்ணே! - உன்
கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே!
கல்யாணம் ஆகாத...

வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் - உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி - "இந்த
வஞ்சகத் தரகற்கு நீஅஞ்ச வேண்டாம்."
கல்யாணம் ஆகாத...

பெற்றவ ருக்கெஜ மானர் - எதிர்
பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்,
மற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல
வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;
சுற்றத்தி லேமுதி யோர்கள் - இவர்
சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்.
கற்றவளே ஒன்று சொல்வேன் - "உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!"
கல்யாணம் ஆகாத...

தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்
தள்ளி யடைக்கப் படுங்குதி ரைக்கும்
கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;
கனத்தஉன் பெற்றோரைக் கேளே! - அவர்
கல்லொத்த நெஞ்சையுன் கண்ணீரி னாலே
நனைத்திடு வாய்அதன் மேலும் - அவர்
ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்!
கல்யாணம் ஆகாத...

மாலைக் கடற்கரை யோரம் - நல்ல
வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம்
காலைக் கதிர்சிந்து சிற்றூர் - கண்
காட்சிகள் கூட்டங்கள் பந்தாடு சாலை
வேலை ஒழிந்துள்ள நேரம் - நீ
விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்!
கோலத்தினைக் கொய்வ துண்டோ ? - "பெண்கள்
கொய்யாப் பழக்கூட்டம்" என்றே உரைப்பாய்.
கல்யாணம் ஆகாத...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt135