lankasri.com"பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாப்கான் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, "கான்ஆக்ரா புட்ஸ்' நிறுவனம் மற்றும் "வீவர் பாப்கான் கம்பெனி' போன்றவையும், தற்போது "டையாசெடில்' ரசாயனம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளன. "டையாசெடில்' பயன் படுத்தும் போது உருவாகும் ஆவியை, எலி ஒன்றை மூன்று மாதங்கள் சுவாசிக்கச் செய்ததன் மூலம், அதற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெண்ணெய்யின் நறுமண சுவை கொண்ட பாப்கானை தினமும் சாப்பிட்ட ஒருவர், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, "டையா செடில்' ரசாயனம் ஆபத்தை உண்டாக்கக் கூடியது என கண்டறியப்பட்டது.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1205740939&archive=&start_from=&ucat=2&