இன்று ஒரு பக்கச் சார்வான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களை அறைகூவி அழைக்கிறார்.தனது தேசத்தின் தலை நகரான Tiflis நோக்கி நகரும் இருஷ்சியப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு அரசியல் நாடகத்தில் அமிழ்ந்துபோகிறார்.இவர் ஒரு "அப்பாவி-தனது அரசியல் கணிப்பின் தவறினால்" தனித்துப்போன அரசியல் வாதியாகவும்,அந்தக் காரணத்தால் தவறான மதிப்பீடுகளால் பிரிந்துபோன தென் ஒசாத்தியாவை மற்றும் அப்சாசியன் மாகாணங்களை ஜோர்ச்சியவோடு இணைக்கும் இராணுவ நடவடிக்கையில் இறங்கியதாகவும் மேற்குலக ஊடகங்கள் காதினில் பூ வைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளன.நாமும் போதாதற்கு

 இவ் நிகழ்வுகளின் பின்னே அலைகிறோம்.இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் துவக்கி வைத்தவர்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிப்பதாக நாடகம் போடுகின்றனர்.தமக்கும் ஜோர்ச்சிய இராணுவ நடவடிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்பதாகவும்,தாம் இருஷ்சியாவைக் கண்டிப்பதாகவும் ஓலமிடுகிறார்கள்.இதுவொரு பரீட்சார்த்த யுத்தம்.இங்கே,இருஷ்சியா தனது இறையாண்மையைக் காப்பதற்கானவொரு போராட்டத்தில் தன் இருப்பை நிலைநாட்டுகிறது.

 

நாம் இது குறித்துக் கருத்துச் சொல்வதைவிட இந்த யுத்தத்துள் நிலவும் கேந்திர-புவிகோள நலன்கள் குறித்துக் கருத்துகள் முன்வைப்பதில் கவனத்தைக் குவிக்கிறோம்.எங்கள் வாழ்வும்,சாவும் ஏன்-எதற்கு என்றே அறியாதவொரு நிலையில் நமது தேசம் உருக்குலைகிறது.இந்தச் சூழலில் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இருஷ்சியப் பொருளாதார நலன்களின்வழி நகரும் அரசியல்-பூகோள வியூகங்கள் உலகை யுத்த நெருக்கடிக்குள் தள்ளித் தத்தமது நலன்களை அடைய முற்படும் தருணங்களில் அப்பாவிச் சிறுபான்மை இனங்கள் அழிந்துபோகிறார்கள்.இதன் தொடர்ச்சியில் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழிச்சிகள் யாவும் வல்லரசுகளின் அரசியல் இலாபங்களுக்காகப் பலிகொள்ளப்படும் இந்த நூற்றாண்டில்,நாம் வந்தடையும் அரசியல் என்னவென்பதும்,எம்மிடம் எஞ்சம் விடுதலை எதுவென்பதும் கேள்வி.


இதைக்கடந்து,கடந்த சில தினங்களாக நடைபெறும் யுத்தத்தின் மூலம் என்ன?இவ் யுத்தத்தைக் கொண்டு நடாத்த முனைந்த சக்தி எது? சாகஸ்வல்லி என்பவர் உண்மையில் தனது அப்பாவித்தனமான கணிப்பினால் இவ் யுத்தத்தை ஆரம்பித்தாரா? என்பதற்கு ஓரளவு விடை தேடுவதில் கவனத்தைக் குவிப்போம்!

"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று ஓலமிடுவதிலும் மத்திய ஆசியாவிலும்,ஐரோசியவிலும் நிகழும் அமெரிக்க நலன்கள் நமக்குப் புலப்படுகிறது.

 

"ஜோர்ச்சியாவின் சுயாதிபத்தியத்தை மதிக்க வேண்டும்"என்றும் "உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்கு வரவும்"என்று ஜேர்மனிய அதிபரான அம்மணி மேர்க்கல் அங்கேலா அழுது வடிகிறார்.

 

ஐயா சார்க்கோசி ஆடிப்போய் உடனடியாக ஜோர்ச்சிய விரைகிறார்.

 

உலகத்துக் கிறித்தவர்களின் தேவ தூதன் போப்(பு)பாண்டையர் இந்த நூற்றாண்டின் ஈராக் அவலத்தைத் தன் அங்கிக்குள் மறைத்தபடி இருஷ்சியாவுக்குக் கட்டளையிடுகிறார்:"கிறிஸ்தவத்தின் பெயரால் யுத்தத்தை நிறுத்தி முடிவுகாணவேண்டுவது உலகக் கிறித்துக்களின் பெரு விருப்பம்"என்று கிறித்துவம் அகிம்சையைப் பேணுகிறது.

 

ஜேர்மனிய வெளிநாடடமைச்சர் ஸ்ரையின் மாயர் தனது உலகக் கூட்டாளிகளான அனைத்து நாடுகளினதும் வெளித்துறைமந்திரிகளுக்கும் ஓய்வின்றித் தொலைபேசுகிறார்.ஜோர்ச்சிய யுத்தத்தால் அழியும் மக்களைக் காப்பதற்காகக் கடும் பிரயத்தனஞ் செய்கிறார்களாம்.நல்லது!

 

இந்தக் கௌகசுஸ் யுத்தம் (KaukasusKrieg) அண்மித்துவரும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுகிறது.இது,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து பூகோள அரசியல் வியூகத்தினது மிகப் பெரியவொரு வெளியைத் தாங்கியுள்ளது.ஈரானைச் சாட்டுவைத்து,போலந்து மற்றும் செக் குடியரசுள் நிறுத்தப்படப்போகும் அமெரிக்க ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்துக்கும் இவ் வலயத்துக்கும் அதிகம் தொடர்புகளுண்டு.இதன் தொடராக இருஷ்சியாவின் முதுகெலும்பை உடைக்க முனையும் அnமிரிக்கக் கூட்டணிக்கு-நேட்டோக்கூட்டணிக்கு மிக அவசியமானவொரு அரசியல் சதுரங்கக்காயாக ஜோர்ச்சிய இருக்கிறது.கௌகசுஸ் வலயமானது புவியற்படி 1100 கிலோமீட்டர் நீளமான மடிப்பு மலைத்தொடர்களைக்கொண்டு கருங்கடலிலிருந்து கஸ்பிஸ்சன் கடல்வரை விரிந்து கிடக்கிறது.இவ் மலைத்தொடரின் உச்சியானது 5642 மீட்டர் உயரத்தில் கம்பீரமாகக் கொலுவற்றுள்ளது.இந்த மலைத்தொடர்களினது பிராந்தியம்(Territorium)இருஷ்சியா,ஜோர்ச்சியா,ஆர்மேனியன்,அசர்பைட்சான் வரை விரிந்து மேவிச் சிறியவொரு பகுதி துருக்கிவரை நீண்டுகிடக்கிறது.இங்கே,(ஐம்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்வதால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பல்மொழி-பண்பாடுகளுடையவர்களாகவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்களுமாக இருக்கிறார்கள்.இங்கே,புவிப்பரப்புள் நிலைபெற்றுக்கிடக்கும் கனிவளங்களே இவ்பிரதேசத்தின் கேந்திர அரசியலைத் தீர்மானிக்கிறது.அமெரிக்காவுக்கோ அன்றி மேற்கு ஐரோப்பாவுக்கோ இப்பிரதேசம் ஒரு முக்கியமானவொரு அரிய உயிர்வாழ்விக்கும் வலயமாக இருக்கிறது.400.000.ஆயிரம்(நான்கு இலட்சம்)சதுரக்கிலோமீட்டர் உடைய இந்தப்பிரதேசத்தில் நடந்தேறும் அரசியல் முழு உலகத்தையும் வேட்டையாடும் அரசியலாக விரியும் பொருளாதார இலக்குகளைக்கொண்டியங்குகிறது.

 

இந்த இலக்குகளை அறியாதவர்கள் ஜோர்ச்சியவென்பது அமெரிக்காவுக்கும் இருஷ்சியாவுக்குமிடையிலான பனிப்போரை ஆரம்பித்து வைத்ததாகச் சொல்வதில் இப்பிரதேசத்தில் ஜோர்ச்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார-நிதியீடுகளையும் அதன் கேந்திர ஸ்த்தானத்தில் தொடர்ந்து புதைத்துத் துருக்கிவரை வரும் எண்ணைக் குழாய்க்குமான இருப்புக்குறித்து மௌனித்தல் புரிந்துகொள்ளத் தக்கதல்ல.

 

தொடர் யுத்தம் நிச்சியமாகக் கடைப்பிடிக்கப்படும் தருணத்தில் இருஷ்சியா தான் விரும்பியவொரு இலக்கை அடைவதென்ற வியூகத்தின்வழி போராடுவதென்பதில் எனது கணிப்புத் தவறாகாது.இவ்யுத்தத்தின்மூலமாகத் தொடர்ந்து பற்றியெரியும் காடுகள்,நிலங்கள்-கட்டிடங்கள் இன்னொரு இலக்கைக் குறிவைக்கும்.அதுவேதாம் அமெரிக்க-ஐரோப்பிய உயிர்வாழ்வோடு அரசியல் செய்வதாக இருக்கும்.

 

உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரும் எண்ணைக் குழாய்"Baku-Tabilisi-Ceyhan-Pipeline(BTC)"என்பது அசைர்பைட்சான்,ஜோர்ச்சியா ஊடாகக் கருங்கடல் ஆழ்ந்து துருக்கிவரை மத்தியகடலூடாக ஐரோப்பாவை அண்மிக்கக் காத்திருக்கிறது.இதை நெருப்பிலிடும் அவலத்தை எதிர்கொள்ளும் தகமை யாருக்குண்டு?


இக் குழாயின்வழியாக அரேபிய மற்றும் இருஷ்சிய எரிபொருள் ஆதிகத்தில் ஐரோப்பா தங்கியிருப்பதைத் தவிர்க்க முடியும்.இதன் மிகப்பெரும் நன்மையாகவும் இருஷ்சியாவின் பொருளாதார ஆதிகத்தை முறியடிப்பதுமாக இருக்கும் இவ்வலயத்தின் மதிப்பு உலகத்தின் முன் மிக அதிகம்.


"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று அமெரிக்கா கத்துவதில் அதன் அரசியல் புரியத் தக்கது.1998 ஆம் ஆண்டு ஜேர்மனியச் சைற் பத்திரிகை ஈராக் யுத்த முன்னெடுப்பின் அடவாடித்தனமானது ஐ.நா.எல்லைகளை-சட்டத்தை மீறுவதாகவும்,ஐ.நா.ஒப்புதல் தரவில்லையென்றும் வாதாடியபோது -அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் திருவாளர் Brzezinski யிடம் கேட்கப்பட்ட நேர்முகத்தில் அவர் உதித்த முத்துக்கள் மிக அலாதியானது:

 

//zeit: Es gab dennoch keine offizielle Zustimmung der Vereinten Nationen zu Luftangriffen ...


Brzezinski: Es gab keine offizielle Ablehnung. Und es herrschte viel schweigende Zustimmung.//-
http://www.zeit.de/1998/48/ein_ende_finden

 


>>>சைற் பத்திரிகை: ஈராக்மீதான அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்கான அனுமதியை ஐ.நா.சட்டபூர்வமாக-உத்தியோக பூர்வமாக அனுமதிக்கவில்லை...

ப்பிறசின்ஸ்கீ: ஐ.நா.உத்தியோக பூர்வமாக விமானத்தாக்குதலை நிராகரிக்கவில்லை.அதாவது,மௌனமாக நமது திட்டத்தை-தாக்குதலை அனுமதித்துவிடுகிறது... <<<


இத்தகைய சூதாட்டத்தில் பூட்டின் கூறும் சதாம் இன்றைய ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி.அடிப்படையில் வல்லாதிக்கம் வைத்த சட்டத்தை கையிலெடுக்கும் பூட்டின் தரப்புக்கு அரசியல் பாடம் நன்றாகவே புரிகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.2008.