லைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் தமிழ் மணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்?.இ·து,தற்செயல் நிகழ்வல்லவென்று நாம் உணரத்தக்கபடி தமிழச்சிதம் தனிநபர்சார் காழ்ப்புணர்வு இயங்கி வருகிறது.இது,அவரது செயற்பாட்டிற்கு ஒருபோதும் அழகல்ல.சமூகச் சீர்திருத்தம் என்பதை அவர் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்த"அழகு"இங்கே முன் வைக்கப்படுகிறது! தொடர்ந்து பெயரிலியைத் தாக்கி விசனிப்பதன் வெளி "சகவோடிகளால்"நிறுவப்படும்போது-அங்கே,தமிழச்சிமீதான சுய செயற்பாடு அடிபட்டு,முன்னைய எதிர்பார்ப்பு எவரெவருக்காகவோ நிறைவேற்றப்படுகிறது.இதை இனம் காண மறுக்கும் தமிழச்சி தொடர்ந்து தனிநபர் தாக்குதலக்கு "இலக்கு"வைத்த பதிவுகளையே-பின்னூட்டங்களையே எழுதுகிறார்.

 

நாம், புரிதலில் நீண்ட பயணத்தைத் தொடரவேண்டும்.எமக்குப் புரியாதவைகளைச் சிறுவர்கள் மனத்திலிருந்துகொண்டு புரியவும் முனைகிறோம்.இதுவே அவசியமானதும்.ஆனால்,மற்றவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் தமது கருத்துக்கு உடன்பாடற்றுப்போனால் அவைகளை எதிரி(ர்)க்கருத்துக்கள் நிலையில் தள்ளப்பட்டு,தாக்குதலாக விரிவுறும்போது இன்றைய நிலை உருவாகிறது!இது தவிர்த்திருக்கூடியது.எனினும்,சமூக நிலைகளைப் புரிந்துகொண்ட முறைமைகளை யதார்த்தப்படுத்தத் தவறும் ஒவ்வொரு தருணத்திலும் இத்தகைய "தாக்குதல்-வசவு"மேலெழுந்து தாம்கொண்ட செயற்பாட்டையே கேலிக் கூத்தாக்கும் நிலைமைகளை உணர்வெழிச்சியின் உந்துதல் தந்துவிடுகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது ஓசை செல்லா களத்தில் இறங்குகிறார்!இது கூட்டு மனப்பாண்மையைக் குதறிவிட்டுத் தனிநபர்களின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்ட சில நபர்களின் மனவூக்கமாக முன்னெடுக்கப்படுகிறது.இங்கே,எந்த சமூக நலனும் முன்னிற்பதாகத் தெரியவில்லை.பொதுவான சமூக இயகத்தைப் புரியமறுக்கும் மேட்டிமைப் பண்பு புரிதலற்ற-ஆழ்ந்த அநுபவமற்ற சூழலில் தோற்றமுறும்.தமிழச்சி இதை உணர்வதிலிருந்து பின் வாங்கும் ஒவ்வொரு பொழுதும் காழ்ப்புணர்வே மேலெழும்.சரியான தெரிவைவிட்டுத் தடுமாறும் சூழலை மனிதவுணர்வு முன்னிலைப்படுத்தும்.இங்கு, மிக அவதானமாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.



சமூகமாற்றமென்பது தனிநபர்களால் செய்து முடிக்கப்படுவதல்ல என்பதை முதலில் எவர் புரிகிறார்களோ இல்லையோ தமிழ்மணம் மிக விரிவாக அதைத் தொட்டுள்ளது!தமிழச்சியின் பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வு"தமிழச்சி புரிய மறுக்கிறார்"எனும் உணர்வே.இன்றைய சமூக ஒழுங்குகள் யாவும் நிலவும் அமைப்புகளுக்கு இசைவாகவும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.இதைப் புரிந்துகொண்ட தமிழச்சி புரிய மறுத்தது சமூகத்தளத்தில் இதற்கெதிரான கருத்தாடலை எங்ஙனம் கொண்டு செல்வதென்பதே!

 

தனிநபர்சார்ந்த உணர்வுகளால் சுயமுனைப்பை முன் நிறுத்துவது நடுத்தரவர்க்கத்துக்கான பாரம்பரியமாகவே இருக்கிறது.நாம் சமூகமாற்றை விரும்புகிறோமெனில் முதலில் நம்மைக் கொன்றாக வேண்டும்.அங்ஙனம் கொன்றபின் நாம் முன்நிறுத்தும் செயற்பாட்டுக்குமுன் நம்மை முன் நிறுத்தும் செயல் அடிப்பட்டுப் போகும்.இதைத் தவிர்த்துவிட்டு நாம் மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட முடியாது.இது, பொது மனிதக் கூட்டுக்குள் வேலைத் திட்டத்தை முன் தள்ள முனையும் ஒரு அமைப்பின் செயற்பாட்டிலுள்ள முன் ஆலோசனைகளில் ஒன்று!மக்களிடமிருந்து கற்பதும் அதை(கற்றதை)அவர்களுக்கே மீள அளிப்பதும் செயற்பாட்டின் ஆரம்பப் புரிதல்களாக இருக்கிறது.இங்கு மாணவ நிலையிலேயே நாம் இருந்தாக வேண்டும்.நமது சிந்தையில் உட்புகுந்துள்ள படிமங்களைக் கொன்று குவித்துவிடுவதற்கு நீண்ட போராட்டம் தேவை.இதுவே தமிழச்சியிடம் நாம் காணும் பலவீனமாகும்.

 

தமிழச்சிதம் கடந்த-சமீபத்து எழுத்துக்கள் சுட்டும் உடற்கூறுகளைக் குறித்த பதிவுகளைப் பெரிதுபடுத்தும் நிலையற்ற எமக்கு-அவரது தாக்குதல் தனமான பொதுபுத்தி எழுத்துக்களையே பெரிதும் சலிப்புடன் பார்த்தது. பொதுவில் வலைபதியும் எவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு,மனித கெளரவம்,சுயமதிப்பின் தொடர் பங்கீட்டுச் சக மனித மேன்மை மதிக்கப்படாத அவரது போக்கு மிகவும் வருந்தத் தக்கது!எதிரிகள் நம்மை நாயிலும் கேவலமாக அவமதித்தாலும் நாம் பொது மனித கெளரவத்தை அவர்கள் பாணியில் நொருக்க முடியாது!இது புரட்சியல்ல.சிறுபிள்ளைத் தனம்.பெரும் பொறுபுணர்வுமிக்க அரிய செயல் வடிவத்தை(பெரியாரியம்)மிகவும் மலினப்படுத்திய நிலைமைக்குத் தமிழச்சிமட்டும் பொறுப்பேற்க முடியாது!-நாமும்தாம்!செயற்பாட்டை எங்ஙனம் முன்னெடுப்பதென்ற முயற்சிகளை ஓரளவு செயற் திட்டமாகக்கூட வரையறை செய்யாதவொரு சூழலைத்தாம் தமிழ்ச் சூழல்கொண்டிருக்கிறது.பெரியாரைச் சொல்லிப் பிழைப்புறும் கூட்டமாகப் போன முன்னாள் பெரியாரியத் தொண்டர்கோடிகள் இன்னாள் பெரும் முதலீட்டாளர்களானபின் இத்தகையபோக்கு நிலவத்தாம் செய்யும்!எனவே,தமிழ் மணம் இதைப் புரிந்துகொள்ளும் தருணத்தில் தமிழச்சியின் பதிவுகளைத் திரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்வதே சாலச் சிறந்தது.தமிழச்சி முதலில் இத்தகைய சூழலின் சுய விமர்சனப் புரிதலை முன் வைத்தாகவேண்டும்.

 

என்றபோதும்,கடந்த செயற்பாடுகளை,அதன் விளைவுகளைப் பார்த்து,நாம் தமிழச்சியை எத்தனைவிதமாக(நட்பாக-தோழமையாக) அணுகினாலும்,தமிழச்சி அதைக் கூர்ந்துணர முடியாது"தனக்கெதிரான தாக்குதலாகப் பார்த்திருக்கிறார்"தத்தளித்திருக்கிற தருணங்களில் அவர் எழுத்து தனிநபர் தாக்குதலாக சக பதிவர்களைத் தாக்கி இருக்கிறது.எனினும்,தமிழச்சி இது குறித்து மிகையான சுய மதிப்பீடுகளை உருவாக்கித் தாக்குதல்களை வார்த்தைகளினூடாகக் கட்டமைத்தபோது,அவரைத் தொடர்ந்து சிந்திக்கும்படி நாம் கட்டுரை எழுதினோம்.அதீத சுய மதிப்புத் தன்மீதான அழுத்தங்களைத் தனக்கெதிரான திசையில் விவாதமாக்கியது.இதைத் தமிழச்சி உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை "சகவோடிகள்"விட்டுவைக்காது தமிழச்சியை உருவேற்றும் எழுத்துக்களைப் பதியமிட்டபோது,இதன் வரிசையில் முன் நிற்பவர்கள் திருவாளர்கள் இலக்கி மற்றும் ஓசை செல்லா.இவர்களைத் தாண்டி நாம் இக்கட்டுரையூடாகச் சிலவற்றைச் சொல்ல முனைந்தோம்.அவ்வளவுதாம்.

 

தொடர்ந்து தமிழச்சி குறித்த கட்டுரை எதுவும் எழுதுவதில்லை.

"தமிழ் மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்" என்ற எமது நம்பிக்கை வீண்போகாது.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
25.03.2008