குறிப்பு:1

தமிழ்த் தலைவர்களும்,அவர்களது அந்நிய எடுபிடி அரசியலும்:

 

நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.

 

ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?

 

இது புரட்சிகரமானதா?

 

எங்கள் எதிரிகள் யார்?

 

அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?

 

இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!

 

அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!

 

இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை! இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!

 

இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!

 

இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.

 

அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.

 

இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!

 

1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.

 

வட ஈராக் குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.

 

இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.

 

இங்கே, நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே, சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே! இதைக் கடந்த குண்டுவைப்புகள், இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன. நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!

 

இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!

குறிப்பு:2

ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்.

"Der Berliner Soziologe Dr. Andrej Holm.
wird aufgrundseiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;
er wurde verhaftet."-Konkret vom 10.2007.

அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.

 

அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.

 

இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.

 

அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது, நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.

 

இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.

 

குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

 

பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.

 

இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்