கன்னித்தீவு என்று சொன்னால் தமிழகத்தில் சற்றேறக்குறைய அனைவருக்கும் அது ஒரு நாளிதழில் வரும் படக்கதை எனத் தெரியும். அந்த கன்னித்தீவு எங்கே இருக்கிறது என்று அனேகமா யாரும் தேடிப் பார்த்திருக்க மாட்டார்கள். கதையில் வரும் இடம்தானேப்பா, அதையாச்சும் தேடுவாங்களோ? கதை என்று சொல்லும்போது எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தை என்று நம் உறவுகளில் யாராவது ஒருவரிடம் நாம் கதை சொல்லிக் கேட்டிருப்போம் அல்லவா. கதை சொல்பவர்கள் எல்லோருமே பொதுவாக இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் " ஒரு ஊர்ல"...!!

 

அந்த ஒரு ஊர் எங்கிருக்கிறது, அந்த ஊரின் பெயர் என்னவென்று நாம் கேட்டதில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு பதில் நமக்கு கிடைத்திருக்காது.

 

இப்படி காணப்படாத ஊர்களும், தீவுகளும், இடங்களும் கதைகளில் குறிப்பிடப்படுவது ஒன்றும் புதிததல்ல. கதை சொல்லும் பாங்கில் இந்த அம்சம் பல்லாண்டுகளாக இருந்து வருவதுண்டு. அதேவேளை ஒரு சில இடங்கள் கதைகளில் இடம்பெறுவது போலவே உண்மையாகவே இருப்பதும் உண்டு. ஒரு சில கதைகளில் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, உண்மைச் சம்பவங்கள் கதைகளாக்கப்படுவதும் உண்டு. கதை எழுத சொல்லிக்கொடுப்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை நண்பர்களே.

 

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள உன்னான் மாநிலத்தில் இப்படியான ஒரு கதைரீதியிலான ஒரு இடமுண்டு. கன்னித்திவு போல, புராணக்கதைகளில் வரும் இடங்களைப் போல, இங்கே ஒரு பகுதி சாங்ரி லா என்று அழைக்கப்படுகிறது.

 

கனவுலகாக, சொர்க்கமாக கருதப்படும் ஷாங்ரிலா என்பது யுன்னான் மாநிலத்தில் உள்ள டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தை குறிப்பதாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த கனவுலக சொர்க்கமான ஷாங்ரிலா பகுதியில் தற்போது பிரச்சனை. இப்பகுதியின் சுத்தமான வனப்பகுதிகளின் வளங்களை பாதுகாப்பது தற்போதைக்கு அவசரமான தேவையாகியுள்ளது என்கிறார் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பசுங்கூடத் திட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் பை வென்ஃபெங்.

 

பண்டைக்காலந்தொட்டே இயற்கையோடு இயைந்த வாழ்வாக அமைந்த இந்த டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தைச் சேர்ந்த திபெத்தின மக்களின் வாழ்க்கை முறையே இந்த பேராசிரியரின் கவலைக்கும் கரிசனைக்குமான காரணத்தின் மூலமாகும். இந்த மக்களின் விசாலமான அகன்ற பரப்பில் அமைந்த வீடுகளில் சராசரியாக 200 கியூபிக் மீட்டர் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலான இயற்கையான வனப்பகுதியை அழித்தால் கிடைக்கும் அளவு மரங்கள். வீடுகளுக்குச் சென்று பார்த்தால் ஏன் இவ்வளவு மரங்கள் தேவை என்று நமக்கு புரியும். வீடுகளின் தரை, வீட்டைச் சுற்றிய வேலிகள், வீட்டில் படிக்கட்டுகள், உட்புறத் தடுப்புச் சுவர்கள், நாற்காலி, முக்காலி, மேசை என வீட்டுக்குள்ளே இருக்கும் மரப்பொருட்களுக்கு கூடுதலாக 10 கியூபிக் மீட்டர் மரங்கள், அதாவது மற்றுமொரு ஹெக்டேரில் 20ல் ஒரு பகுதிவனம் அழிக்கப்படுகிறது. அட இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. வீட்டில் குளிருக்கும் சமையலுக்கும் தீமூட்ட ஆண்டுக்கு 14 கியூபிக் மீட்டர் மரங்களை ஒவ்வொரு குடும்பமும் எரித்து சாம்பலாக்குகின்றன. ஆண்டுக்கு ஒரு குடும்பம் எரிபொருளாய் மரங்களை பயன்படுத்த 0.07 ஹெக்டேர் நிலப்பரப்பிலான காடு அழிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கே இப்படியென்றால் இப்பகுதியில் உள்ள மொத்த குடும்பங்களையும்கணக்கில் சேர்த்தால் ஷாங்ரில பகுதியின் வனப்பகுதி பற்றி பேராசிரியர் பை வென்ஃபெங் கவலைப்படுவதிலுள்ள தீவிரம் நமக்கு புரிகிறது.

 

1998ல் இப்பகுதியில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டபோதிலும், அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி 2004ம் ஆண்டில் டெச்சென் என்ற ஒரு வட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் கியூபிக் மீட்டர். வேறு விதமாகச் சொன்னால் 1100 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி மூளியாக்கப்பட்டது. இதில் 78 விழுக்காட்டு மரங்கள் எரிபொருளாகவும், 17 விழுக்காடு கட்டிடப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வு கூறுகின்றது. சீனாவின் ஃபூச்சியான் மாநிலத்தில் உள்ள மொத்த வனப்பகுதிக்கொ சமமானது இந்த ஷாங்ரிலா வனப்பகுதி. ஆனால் எரிபொருளாகவும், கட்டுமான பொருளாகவும் மரங்கள் பயன்பட இந்த வனப்பகுதி வெறுமையாக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியின் இயற்கைச் சூழலும் சிக்கலான நிலையில் உள்ளது. குளிரான தட்ப வெப்பச் சூழலும், இப்பகுதியின் மெல்லிய பூமியடுக்குகளும் மரங்கள் மீண்டும் வளரும் வேகத்தை பாதிக்கின்றன, தடுக்கின்றன. அதேவேளை இந்த ஷாங்ரிலா என்ற டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தின் மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது என்கிறார், இப்பகுதியின் வனமயமாக்க துறையின் முன்னாள் தலைவரும், இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஷாங்ரில பகுதி அலுவலகத்தின் இயக்குநருமான ஹெ சிங். இப்பகுதியின் திபெத்தின மக்கள் மேலும் அதிகமாக வீடுகளை கட்டுகின்றனர், வசதியானவர்கள் மிகப்பெரிய வீடுகளை கட்டுகின்றனர் இதனால் மேலும் மேலும் மரங்கள் வெட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

 

இந்நிலையில் இயற்கை பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அரசு சாரா அமைப்பு இந்தப் பகுதியில் சோதனைமுறையில் இரு பசுமைமயமாக்க திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தாவர அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே ஒரு பசுங்கூடம் தான், அதாவது பசுமையான கட்டிடம். குளிருக்கு வெப்பமேற்படுத்த சூரிய ஒளி ஆற்றலை சேமிப்பது, உள்ளே வெறுந்தரை, செஙகல், சிமென்டு என்று எந்த கட்டிடப்பொருளும் போடப்படாத வெற்றுத்தரை. சுவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூங்கில்களால் உருவானவை, ஆக மரங்களின் பயன்பாடு இந்த கட்டுமானத்தின் குறைவே. மற்ரொரு திட்டமான கேசா பசுமைப் பள்லீயில் மரங்களின் தேவை 60 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பாரம்பரிய கட்டிட பாணியும், புத்தாக்க முறையில் இயற்கைக்யோடு இயைந்த கட்டுமான அமைப்புமாக இந்த பசுமை திட்டப்பணிகள் கேட்பதற்கும், பார்பதற்கும் பிரமிப்பூட்டுகின்றன.

 

மறுபுறம், உள்ளூர் அரசுகள் விரைவில் இப்பகுதியில் திபெத்திய வீடுகளை சீரமக்க 2 லட்சம் ஒதுக்கவுள்ளதாக நம்பிக்கை கூறப்படுகிறது. விரைவில் இப்பகுதியில் மூன்று கிராமங்களில் இப்பணிகள் துவங்கும் என்கிறார் உள்ளூர் அதிகாரி ஒருவர்.

ஆக கன்னித்திவு போன்ற ஷாங்ரிலா பசுமையாக்கப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது

 

http://tamil.cri.cn/1/2007/03/05/62@49846_1.htm