ன்றையவுலகில் "எது,எப்படி"என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.இதிலிருந்து மீண்டு விடாதவரைக்கும் இந்த அமைப்புக்குப் பாதகமில்லை.அப்படி இருத்தி வைப்பதற்கான தொடர் நிகழ்வுகள் மனித உடலை மையப்படுத்திய அரசியலாக விரிவுற்றுத் தொடரும்போது சமீபகாலத்து எல்லாவகைச் சமூக முன்னெடுப்புகளும் அந்தச் சமுதாயத்தின் அதீதத் தேவையோடு முரண்டுபிடிப்பதில் "பொது ஜனநாயகம்"பொலிவுறுவதாகவும் சுட்டிக் கொள்ளப்படுகிறது.இதன் தாத்பரியம் இன்னொரு வதைக்கான தொடர் நியாயங்களைச் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வகைப்பாடுகளை நமது சிந்தனா முறைக்குள் திணித்து விடுவதில் இன்றைய பொது அப்பிராயத்துச் சிந்தனா வகைப் பெறுமானங்கள் பாரிய பங்கை வகிப்பதாலும், அதன் அத்துமீறிய வகைமாதிரியானவொரு கருத்துத் திணிப்பாலும் நமது சமூக வாழ்வு எந்தப் பெரிய ஆர்ப்பாட்டமுமின்றித் தனித்தவொரு திசை(இருள்)வெளியில் தாந்தோன்றித்தனமாக விரிந்தபடி.


நாங்கள் தினமும் தங்கு தடையெதுவுமின்றிச் சிந்திக்கிறோம்.நமது நினைவுகள் எதையோ நம் வாழ்வுக்குள் குறித்துரைப்பதும் பின் திசை புரியாதவொரு மெல்லிய வலிக்கும் காரணமாக இருக்கிறது.எந்தத் திசைவழியுமின்றித் தனித்தியங்கும் அமைப்பாண்மை எமக்கிருப்பதாகக் கூறும் பெரும் கதையாடல்கள் இப்போது ஓய்ந்திருக்கின்றன.அவை எமக்குக் கடுப்பானவொரு உண்மையைச் சொல்லி ஓய்ந்திருக்கிறது.அந்தவுண்மைதாம் எமது வாழ்வின் அதீத தேவையாகி வருகிறது.உலகத்துள் உயிர் வாழ்வதற்கான எல்லா வகை உரிமைகளும் எமக்கு உண்டு.என்றபோதும் நாம் நமது இனம் சார்ந்த மதிப்பீடுகளால் தகவமைக்கப்பட்ட எமது இடைவெளிகளை மனிதக் கூட்டுக்குள் குறைத்துக் கொள்ளத் தக்கவொரு சிந்தனா முறைக்குள் அவசியம் கால் பதித்தாக வேண்டும்.இதன் அவசியத்துள் இருக்கும் நமது சமூகக் கட்டுமானம் எந்தப் பொருண்மையான யதார்த்தையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.வெறும் கூச்சலுக்குள் கோரப்படும் "நமது விடுதலை"என்பது அத்துமீறியவொரு யுத்தத்தைக் கோரி நிற்கிறது.இந்த யுத்தம் எவ்வளவு காலமாகக் கண்ணீரையும்,கடுப்பையும்,அழிவையும் நமக்குள் ஏற்படுத்தியதென்றவொரு பிரக்ஞை எமக்கு இதுவரை கைகூடவில்லை.நாம் தனித்தொரு வெளியில் "தேசியம்-சுதந்திரம்,தாயகம்"எனும் கருத்து வளையங்களுக்குள் கட்டுண்டு போயுள்ளோம்.இந்த வளையங்களுக்குள் பிற பெருந் தேசிய இனங்களொவ்வொன்றும் தமது பொருண்மிய வாழ்வைத் தக்க வைப்பதற்கான பொறியோடு வாழும்போது,நாமோ கற்பனாவாதப் பொருண்மியக் கூறுகளுக்குள் பல அர்ப்பணிப்புகளைச் செய்கிறோம்.

இந்த அபரிதமான விசையூக்கம் நமது மனங்களைச் சமாதனப்படுத்தும் ஒரு வகைமாதிரியானவொரு இயலாமைக்குள் எமது ஆற்றல்களை வைத்திருக்கிறது.இந்தச் சடுதியான இயக்கத்துக்கு உதவாத "பொது நிலை"எம்முள் சிதைவுகளை மிக வலுவாகச் செயற்படுத்துகிறது.நாம் பல கூறுகளாக உடைந்து சிதறுவதில் தோற்றமுறும் இடைவெளிகள் நமது வாழ்வின் தொடர்ச்சியை முற்றாக அறுத்தெறிந்து நமக்குள் பல் வகைப் பிரிவுகளின் எதிர் விளைவுகளைப் பின்னுகிறது.இங்கேதாம் நமது எதிரிகள் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறுகிறார்கள். இந்த நிலைமையைப் பெரிதுபடுத்தாமல் சிதைவுறுவோமெனும் போக்குள் காலாகாலமாக இருத்திவைக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தங்கள் தனித்துவங்களாக் கண்டெடுத்த ஈழப்போராட்டத்துக்கான நியாய வாதங்கள் இப்போது தவிடுபொடியாகி விட்ட நிலையில் மீண்டும் அதை வலியுறுத்தும் இன்னொரு வகைமாதிரிக்குள் வீழ்ச்சியுறுவது நியாயமற்ற போக்குத்தாம்.கடந்த கால் நூற்றாண்டாக நடைபெறும் சுயமற்ற அந்நிய நலக்கூறுகளுக்கானவொரு மனிதப் போராட்டம் நம் மக்களில் கணிசமானவர்களை விழுங்கி ஏப்பமிட்டுள்ளது. அதேபோன்றவொரு இன்னொரு விளைவு நமது சமூகத்தின் சிதைவாக விரிந்து, நாம் அந்நியத் தேசங்களில் ஏதிலிகளாகவும்,அடிமைகளாகவும் மாற்றமுற்றுச் சிதைவுறுகிறோம்.இத்தகையவொரு தாந்தோன்றித் தனமானவொரு அரசியல் பாதை எமக்குச் சாதகமற்றவொரு வாழ் சூழலைப் பிறப்பித்து இன்றுவரையும் தேசத்தின் விடுதலையெனும் பெயரால் இயக்கம் பெறுவதற்கானவொரு தார்மீக நியாயத்தை எமக்குள் நிலைப் படுத்துகிறதில் வெற்றியீட்டிவருவதும்,பின் அந்த வெற்றியால் விளைவுறும் அரசியலானாது நமது மக்களின்மீதான பாரிய அடக்கு முறையாக விரிவதில் தனது வர்க்க நிலை எதுவென்பதை உறுதிப்படுத்துகிறது.இங்கேதாம் நாம் வர்க்கஞ் சார்ந்தாற்றும் பொருள் நலன் சார்ந்த கோசங்கள் யாவும் நமது எல்லைகளை நாமே நிர்வாகித்து நம் மக்களைப் பலியெடுப்பதில் மிகக் கவனமாகத் தகவமைக்கப் படுகிறது.

யதார்த்தத்துக்குப் புறம்பானவொரு மதிப்பீடுகளைச் செய்வதும் பின் அதையே மிகச் சாதரணமானவொரு "பொதுச் சூழலாக"வரிந்து கட்டிச் செயற்பாட்டுக்கானவொரு மதிப்பீட்டை அதன் தயவில் கட்டிக் கொள்வதால் நாம் இன்று நடுத் தெருவில் நிற்கிறோம்.உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின,; யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி அரசியல் வெற்றியாகக் குவித்தபடி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது.நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது.

எந்தவொரு மனிதாயத் தேவைகளையும் உள்ளடக்காதவொரு யுத்தம் பொதுவில் மக்களால் செய்யப்படுவதில்லை.அத்தகையவொரு யுத்தத்தை வரலாறு வர்க்கப் போராட்டமாகவே உறுதி செய்திருக்கிறது.நாம் இதுவரை கண்டிருக்கும் ஒவ்வொரு யுத்தங்களின் பின்பும் பாரிய உயிரழிவு சாட்சியாகப் பின் தொடர்கிறது.இன்றைய இலங்கைக்குள் நடை பெறக் காத்திரக்கும் "யாழ்பாண"உரிமைப் போராட்டம் இலங்கைச் சிங்களத்து ஆளும் வர்க்கத்தின் இருப்பை நிலைப்படுத்துவதற்கானதல்ல. மாறாகச் சிங்கள அரசியல் ஆதிக்கத்தை நிலைப் படுத்துவதற்கானவொரு அதீத யுத்தம் மக்களைக் கொல்வதற்கான நியாயங்களை"இறைமை"எனும் கருத்தாக்கத்தால் சமன் படுத்திவிடுவதில் முழுப் பிரச்சாரத்தையும் முந்தியடித்துச் செய்கிறது.இங்கே இயக்கம்-அரசு எனும் இரண்டு அமைப்பாண்மையும் நேருக்கு நேர் நின்று மக்களை ஏமாற்றித் தமது சுய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

இவைகளின் பின்னே நிழலாகத் தொடரும் அந்நியக் கரங்கள் நமது வாழ்வைப் படு குழியுள் தள்ளியவொரு அரசியலை யுத்தச் சூழலுக்குள் மென்மேலும் விருத்தியாக்கி வருகின்றன.இந்தப்படுபாதகப் போக்கைத் தீர்மானிக்கும் உட்புறக் காரணங்கள் யாவும் ஒருதரப்பு நியாய வாதமாக்கப்பட்டு அதுவே அந்தந்தத் தேசங்களின் "இறைமை"என்ற கோசத்தோடு வெளியரங்குக்கு நியாயங் கற்பிக்கப் படுகிறது.இந்த இறைமைக்குள் மறைந்துபோய்க் கிடக்கும் வர்க்க நலனானது தேசத்தை, ஆளும் வர்க்கத்தின் மிகவுறுதியான இருப்புக்கானதாகவே இதுவரை உணரப்பட்டு வருகிறது.எனினும், இத்தகைய கோசத்தின் அதீத நோக்கானது மிக விருத்தியாகி வரும் பொருளாதாரத்தின் அதீதத் தேவையான சந்தைகளைப் பங்கீட்டுக்குள் கொணர்வதும், அதைப் பலப்படுத்துவதுமாகவே இருக்கிறது. இன்றைய இலங்கையானது மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்டு,நவீன போர்த் தளபாடத்துடன் இந்திய எல்லையில் உருப்பெறும் அந்நிய நலன்கள் நிறைந்த தேசமாகும். இந்தத் தேசத்தின் இராணுவப் பொறிமுறைகளை யார் முன்னிலைப்படுத்தித் வளர்த்து வருகிறார்களென்பதை நாம் ஓரளவேனும் புரிந்திருப்பதற்கான சந்தர்ப்பங்களை நாமே உருவாக்காது வெறும் யுத்த வாதங்களுக்குள் மூழ்கிக் கிடப்பதில் எந்தப் புத்திசாலித்தனமுமில்லை.


இலங்கையை இன்னொரு "எத்தியோப்பா-எரித்திரியா"வகை மாதிரியாக்கி வைத்திருக்கும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இந்திய நலன்கள் அந்தத் தேசத்துள் மலினப்படுத்தும் யுத்த முனைப்புகளானது எப்போதுமே நமது மக்களின் வாழ்வாதாரவுரிமைகளோடு பாரிய முரண்பாட்டைக் கொண்டிருப்பினும் அவை "ஜனநாயகம்,மனிதாபிமானம்,மனிதவுரிமை"எனும் மாய்மாலங்களால் அத்தகைய பாரிய முரண்பாட்டைப் பின் தள்ளிச் சிங்கள மூலதனத்தின் உறுதிப்பாடுகளையும் அதன் அத்துமீறிய அபிலாசைகளை நியாயப்படுத்துவதில் இத் தேசங்கள் முனைகின்றன. இதன் மெய்பாடு புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கு மிக வெளிப்படையாக இருப்பதில்லை.சிங்கள ஆளும் வர்க்கத்தின் அதீத பொருளாதார அபிலாசைகள் தமிழ் மூலதனத்துடன் போட்டியைக் கொண்டிருப்பது மிக இயல்பானவொரு முரண்பாடாகவே இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது.இதன் போக்கில் எந்த மாற்றமும் இதுவரை நிகழாதபடி இந்தியச் சகபாடிகள் இலங்கைக்குள் வலையை விரித்து காத்திருக்கிறார்கள். இது இந்தியப் பிராந்திய நலன்களெனும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது.இந்தியாவின் பாதுகாப்பு என்பது,எப்போதும் இந்தியாவின் சிறுபான்மைத் தேசியங்களின்-தேசங்களின் சிதைவைத் தக்கவைப்பதும், ஒருங்கமைந்த பாரிய இராணுவத்தால் உட்கொள்ளப்பட்ட ஒரு தேசம் எனும் போர்வைக்குள் இருத்திச் சுரண்டுவதாகவும் இருப்பது இன்றைய மெய்மையாகும்!இதற்கிசைவானவொரு முன்மாதிரித் தேசமாக இலங்கைத் தேசிய இனங்கள் இருத்திவைக்கப்படுவது செயற்கையாக ஒருங்கமைக்கப்பட்ட இந்தியாவிலுள்ள இருபதுக்கு மேற்பட்ட தேசங்களின் அடிமை வாழ்வுக்கு அவசியமாகிறது. இலங்கையெனும் ஒரு சிறிய தேசத்துள் இவ்வளவு குழறுபடிகளைச் செய்யும் அகன்ற இந்தியா,இலங்கைமீது எத்தகைய இராணுவப் பலத்தையும் புலிகள் மேற்கொள்வதைக் கண்கட்டிப் பார்த்திருப்பெதென்பது அதன் தற்கொலைக்கு நிகராகவே இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது. புலிகள் என்பது தமிழ்பேசும் மக்களின் தேசிய இராணுவமென்று அது கருதுவது கிடையாது. அந்நிய நலன்களின் வளர்ப்புப் பிராணிகளாகவே இந்திய ஆளும் வர்க்கத்துக்குப் புலப்படும் புலிகள் உண்மையில் தமிழ்பேசும் மக்களைப் பின் புலமாகக்கொண்ட-அவர்களின் நலனுக்கான விடுதலைப்படையென்பதும் ஒரு பகுதி உண்மைதாம்!புலிகளின் அந்நியத் தொடர்புகள் மற்றும் வர்க்க நிலை,அவர்களை அந்நிய நலன்களின் ஏவற்படையாகவே தொடர்ந்திருத்தி வைக்கிறது.என்றபோதும் அவர்களின் பின்னே தொடர்கின்ற இளைஞர்களின் கனவுகள் தமிழ்பேசும் மக்களின் நலன்களுடன் மிகவும் பின்னப்பட்டவை.

இந்த நிலையுள் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்த யுத்த முன்னெடுப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய நலன்கள் அனுமதிப்பது கிடையாது.புலிகளால் இலங்கையின் ஆதிக்கத்தை தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலத்திலிருந்து துடைத்தெறியுமொரு நிலையை இந்தியத் தேசம் விரும்புவது கனவிலும் இல்லை.புலிகளால் பாரிய நிலப்பரப்புகள் வென்றெடுக்கப்பட்டு,அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் அவை இலங்கையின் ஆதிக்கத்துள் உட்பட்டவையே.தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதரங்களை இலங்கையின் தயவிலேயே பெற்று வாழும் எந்தப் பகுதியும் அதன் ஆதிக்கத்துள் இருப்பது தவிர்க்க முடியாது.இதன் உண்மையைப்"பிரபாகரனுக்கு உணவு போடும் நாங்கள்,தமிழ் மக்களைப் பட்டுணி போடுவதற்கில்லை"எனும் சிங்கள தேசத்து அறைகூவலுக்குள் இனம் காணலாம்.

அற்பத்தனமாக அரசியல் கூச்சல்கள் போடுவதற்கு நாம் கடந்து வந்த பாதைகள் விடுவதாகவில்லை.தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்.நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்துள் மக்களை இருத்திவைப்பது எந்தக் காரணங்களுக்காவென்றாலும் அது மக்கள் விரோதப் போக்கே!

தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.இலங்கையில் வாழும் மக்கள் தமது விடுதலையைச் செய்வதற்கான யுத்தமானது தனியே சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரானதாக இருப்பதில்லை.அது சாரம்சத்தில் இந்தியாவுக்கு மற்றும் உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.இலங்கையிலுள்ள இரணுவத்தின் தோல்வி இறுதியில் இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்துக்கு அதை இட்டுச் செல்லும் என்பதை நன்குணர்ந்த அந்நியத் தேசங்கள் என்றைக்குமே சிங்கள இராணுவத்தைப் பலப்படுத்தியே வந்திருக்கின்றன.இத்தகைய பலப்படுத்தலை இந்திய ஆர்வம்,அதன் நலன்கள் மட்டுப்படுத்த விரும்பும் ஒவ்வொரு தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை அது பேசும் அல்லது தூக்கிப் பிடிக்கும்.இத்தகைய சித்து விளையாட்டை அது இலங்கைக்குள் செய்தே வந்திருப்பதை நாம் நன்றாய் அறிவோம்.எனவே, இலங்கை இராணுவமென்பது இந்திய மற்றும் அந்நியத் தேசங்களின் நன்களின் வாயிலாகக் கட்டப்பட்டவொரு பாசிச இராணுவமே.இதைக் கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முனையும் தந்திரோபாயத்துள் புலிகளின் இருப்புச் சாத்தியமாகிறது.இதுவரையான எந்த யுத்தமும் எமக்கு நன்மை பயக்கவில்லை.இனியும் அப்படியே.

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதையுணர்ந்த இந்தியா,இலங்கை அரசியலுக்குள் இருக்கும் சிறுசிறு கட்சிகளையும் குழுக்களையும் உசிப்பி விட்டுத் "தீர்வுத் திட்டம்"வரைந்து சமர்ப்பிக்கும் (சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்மொழிந்திருக்கும் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை மையமாகக் கொண்டு இறுதித் தீர்வு யோசனைகளை தயாரிக்க கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளது...)நிலைக்குள் தள்ளியது மக்களை ஏமாற்றுஞ் சதியுடன் சம்பந்தப்பட்டது.

எமக்கான சிந்தனைத் தளம் இதுவரை நம் நோக்கிலிருந்து எழமுடியாது போயிற்று.எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தரணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.

இந்த நிலையில் யாழ்பாணத்தைப் புலிகள் பிடிப்பதற்கோ அல்லது இலங்கை இராணுவம் வன்னியைப் பிடிப்பதற்கோ பெயர் விடுதலை அல்ல,மாறாக அந்நிய நலன்களின் அதீத முரண்பாடுகள் முட்டிமோதுவதென்தே உண்மை!

இதுள் நமது மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு அந்நிய மூலதனம் செழிப்பாகுவதற்கு எங்களுக்குள் இருக்கும் அரசியல் பெருச்சாளிகளும் உடந்தையாகி வருவது நமது மக்களின் சாபக்கேடே.

ப.வி.ஸ்ரீரங்கன்