``இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்.


விவசாயிகள் விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இன்னும் சில காலம் தொடர்ந்தால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புண்டு. விவசாயமும் விவசாயிகளும் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் அவர்கள் வகுத்த ஒப்பந்தங்களும்தான்'' - இப்படி மனம் கொதித்து பேசுகிறார் மாம்பாக்கம் விவசாயி வீரபத்ரன்.

கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கும் வீரபத்ரன், பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். பொருளாதாரத் துறையில் புகழ் பெற்ற பேராசிரியராக இருந்த எம்.ஜி.ரங்காவின் மாணவர். அரசு வேலை கிடைத்த போதும், விவசாயமே போதும் என்று இருந்துவிட்டார். மாம்பாக்கம் ஒன்றியத்தின் சேர்மனாகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். விவசாயிகளின் இன்றைய நிலை பற்றி அவர் மனம் புழுங்கிப் பேசிய பேச்சு இதோ...

''தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று சொல்லும் நிலைதான் பரவலாக இருக்கிறது. எல்லோருக்கும் கல்வி கொடுத்தார்கள். ஆனால், பண்டைய காலத்திலிருந்து விவசாயியின் குழந்தைகளுக்கு மட்டும் படிப்பே கொடுக்காமல் பாமரனாகத்தான் வைத்திருந்தார்கள்.

விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததற்கு காரணம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதுதான். உதாரணமாக, 1970ஆம் ஆண்டில் 35 குதிரை சக்தி கொண்ட ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய். அப்போது ஒரு மூட்டை நெல் (75 கிலோ) 45 முதல் 50 ரூபாய் வரை விற்றது. கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்ச ரூபாய். ஆனால், ஒரு மூட்டை நெல்லின் விலை 350 முதல் 400 ரூபாய்தான். கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். நெல்லின் பண்டமாற்று சக்தி (எக்ஸ்சேஞ்ச் வால்யூ) எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அன்று ஒரு டன் இரும்பு ஆயிரம் ரூபாய். இருபது மூட்டை நெல் விற்று ஒரு டன் இரும்பை வாங்க முடிந்தது. இன்றைய தேதியில் 75 மூட்டை நெல் விற்றால்தான் வாங்க முடியும்.

அன்று ஒரு மாடு ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய். அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 0.67 காசுதான். இன்று அதே டீசல் 35 ரூபாய்.

அன்று தினக்கூலி வெறும் 2.50. இன்று நூறு ரூபாய். அன்று ஒரு மண்வெட்டி விலை இரண்டு ரூபாய். இன்று ஒரு மண்வெட்டியின் விலை 90 ரூபாய்.

எதற்காக இத்தனைப் புள்ளிவிபரங்களைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இவை எல்லாம் ஒரு விவசாயிக்குத் தேவையான முக்கியமான இடுபொருட்கள். விலை பார்க்காமல் ஒவ்வொரு விவசாயியும் இதை வாங்கியே தீரவேண்டும்.

தவிர, விவசாயியும் சாதாரண மனிதன்தான் என்கிற முறையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவன் செலவு செய்தாக வேண்டியிருக்குது. உதாரணமாக, அன்று ஒரு சோப் விலை ஐம்பது காசு. இன்று அதே சோப்பின் விலை 12 ரூபாய். அன்று ஒரு பிஸ்கட்டின் விலை 50 பைசா. இன்று 11 ரூபாய். அன்று ஒரு வேட்டி இரண்டு ரூபாய்க்குள் கிடைத்தது. இங்கு 50 ரூபாய்க்கும் அதிகம்.

அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டைகள் விற்றால் பவுன் பார்க்க முடியும்.

1970 முதல் 2000 ஆண்டுக்குள் தொழிற்சாலைப் பொருட்களின் விலை 35 முதல் 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு உத்யோகஸ்தர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துள்ளது. ரூபாய் கணக்கில் முதலில் போடப்பட்ட திட்டங்கள் ஆயிரமாகி, லட்சமாகி, இன்று கோடிகளை தாண்டிவிட்டது. ஆனால், நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் 8 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை யார் இதை உருவாக்கினார்கள் அல்லது எதனால் உருவானது? இதை சீர்படுத்த எந்த அரசியல்வாதியிடமாவது ஏதாவது திட்டம் இருக்கிறதா? மற்ற எல்லாப் பொருட்களின் விலையும் அபாரமாக உயரும். ஆனால் விவசாயி விளைவிக்கும் பொருட்கள் மட்டும் அவ்வளவு உயராது என்றால் அது என்ன நியாயம்?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக் கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்களே ஒழிய, படிக்காத விவசாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்று அவர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை! பருத்தித் தற்கொலைகள் எத்தனையோ நடந்த போதும், அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பல விதமான எதிர்ப்புகளுக்கிடையே தனது சாதுர்யத்தை பயன்படுத்தி நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டு வந்தார். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணச் சங்கம், நில நிர்வாகச் சட்டம், விலை நிர்ணய சட்டம், விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் எனக் கொண்டு சட்டங்களை இயற்றினார்.

இந்தச் சட்டத்தின்படி, எல்லா விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை நிலம் உயர்ந்துள்ளது போல, விவசாயத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அந்த விலைக்குப் பின்பும் அதிகம் ஏறவும், இறங்கவும் முடியாத படிக்கு, உற்பத்தியாளர் சந்தைகள் வாரந்தோறும் அமைக்கப்பட்டது. தேவைக்கு மேல் உற்பத்தி காட்டாமல் இருக்க, அதாவது விவசாயிகள், விவசாயம் செய்யாமல் சும்மா இருக்க பண்ணை எப்படி மானியம் கொடுத்தார்கள்.

இன்று அமெரிக்காலும், கனடாவிலும் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கிறார்கள். கொடுத்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். மானியத்தை உரிமையோடு வசூல் செய்ய அங்கு சட்டமே உள்ளது.

நம் நாட்டில் அரசியல்வாதிகள், விவசாயிகளின் உண்மையான பிரச்னையைக் கண்டறிவதற்கு பதிலாக, மானியத்துக்கு மேல் மானியம் கொடுத்தார்கள். மின்சாரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். இதனால் பம்ப்செட் பயன்பாடு பெருகியது. நிலத்தடி நீர் அதாலபாதாளத்திற்குப் போனது. உரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என எல்லா விவசாயிகளும் உரத்தை வாங்கி நிலத்தில் கொட்டினார்கள். மகசூல் பெருகுவதற்குப் பதிலாக நிலம் பாழாய் போனது மிச்சம்.

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். பரிதாபப்பட்ட அரசாங்கம், வட்டியை ரத்து செய்ததே ஒழிய கடனை ரத்து செய்யவில்லை. இன்றும் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த ஜென்மம் முழுக்க உழைத்தாலும் விவசாயி கடன் இல்லாமல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
`விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'எங்களுக்குத் தேவை எந்த இலவசங்களும் அல்ல. எங்கள் குறைகளைத் தீர்க்கும் சரியான திட்டங்கள்தான்' என்று ஒரே குரலில் சொல்ல வேண்டும். அந்தக் குரல் அதிகார அமைப்பில் உள்ளவர்களின் காதுகளை எட்ட வேண்டும். தற்போது விவசாயியின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும். விவசாயத்திற்கு ஒரு மரியாதை கிடைக்கும்!'' என்று பொருமித் தீர்த்தார் வீரபத்திரன்.

ஆர அமர யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதில் நிறைய நியாயம் இருப்பது புரியும்.

http://samsari.blogspot.com/2007/04/blog-post_19.html