மாற்றுக்கருத்தும்,மௌனச் சொரூபமும்

 

>>>கலைச் செல்வனின் 3ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் "உயிர்நிழல்" சஞ்சிகையால் ஏற்பாடு செயப்பட்டு, எனது ஆரம்ப உரையுடன் தொடங்கப்பட்டது. எனது ஆரம்ப உரை கலைச்செல்வனுடனான நினைவுப் பகிரல் அல்ல மாறாக இலங்கைச் சமூகம் எவ்வாறான காலங்களைச் கடந்து வந்திருக்கின்றது. இந்தக் கால ஓட்டங்கள் எமக்களிக்கும் அனுபவங்களோடு இடப்பெயர்வையும் இணைத்து, புனிதங்கள் வழமைகள், மரபுகள், தொன்மங்கள் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதும் வேண்டியபோது மீறியதும், புதிய அடையாளங்களை தேடிக்கொள்வதும் வாழ்வைப் பரிசோதனை முயற்சியாகவோ ஓட்டிச் செல்வதும் அதன்மூலம் ஓர் உயர் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு கலாசார சமூகத்தை உருவாகி நிற்பதும் சிறு அமைப்புக்கள் கூட எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றவாறும் மிகைப்படுத்தல் எப்படித் தனிநபர் வழிபாட்டினை ஏற்படுத்துகின்றது. அதுவே அதன் தலைகீழ் வடிவத்தில் மோசமான தனிநபர் வசைக்கு இட்டுச் செல்வது...<<< தேசத்தில் நடராஜா சுசீந்திரன்.

 

"உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இத்தகைய தருணத்தில் குறிப்பிட்ட தனி நபர்களைக்கொண்டு தமக்குத் தோதான அரசியலை மக்கள்முன் விரிப்பதற்கான கைக்கூலி அரசியல் மிக வேகமானமுறையில் நடாத்தப்படும் வியூகத்துக்கு முகவர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள்."


"புரியுமா உனக்கு?
உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக்
கொண்டிருக்கிறது!
ஏன்,எதற்கென்று கேள்விகேட்ட
மக்களைக்
கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று,
இன்றோ
கொன்று குவித்த உடல்களின்
மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.
என்னே ஒரு
ஈழம்?
இதற்குத்தானா இவ்வளவு சாவுகள்?"

 

"ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்தச் சமூக உளவியலைத் தடுத்தாகவேண்டுமானால் மீளவும் இனங்களுக்கிடையிலான இனவாதம் மேலெழுந்தியங்க வேண்டும்.இனவாதத் தீயுள் மக்களின் உணர்வுகள் திணிக்கப்பட்டு இலங்கைவாழ் மக்களினங்களுக்குள் தொடர்ந்து பதட்டமான கொதி நிலை அரசியலைத் திட்டமிட்டு நடாத்தியாகவேண்டும்.இத்தகைய நிலையினால்மட்டுமேதாம் இயக்க இருப்பானாலுஞ்சரி அரச-பாராளுமன்ற இருப்பானாலுஞ்சரி இனிமேல் தொடரமுடியுமென்ற அரசியல் சூழல் இலங்கையின் பொருளாதார நிலைமையினால் உருவாகிறது.இத்தகையவொரு சூழலின்பால் உந்தித்தள்ளப்பட்ட இலங்கையின் எதிர்காலமானது அந்தத் தேசத்து மக்களுக்கான இருண்ட இராணுவப் பாசிச அரசாக விருத்தியாகிவருகிறது.இதுவே புலிகள்போன்ற அரசஜந்திரத்தைக்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் அவசியமானதாகும்.

 

இன்று இலங்கையில் இருவேறு அரச வன்முறை ஜந்திரங்கள் நிலைபெற்றுவிட்டன.இவை இருவேறு நிலப்பரப்புகளை ஆதிக்கத்துக்குள் கொணர்வதற்கான கடும் முயற்சியில் கட்சி-இயக்க ஆதிக்கமாக உருவாகிறது.இராணுவாதத்தையே சார்ந்தியங்கும் ஓட்டுக்கட்சிகள் ஒரு புறமாகவும் மறுபுறம் இராணவக் கட்டமைப்பையே தமிழர்களின் விடுதலைப் பரிணாமமாகப் பரப்புரை செய்தபடி ஆதிக்கத்தை நிலைப்படுத்த மக்கள் உரிமைகளைவேட்டையாடியபடி அராஜகத்தைக் கட்டவிழ்க்கும் வன்முறைஜந்திரமாக இயங்கும் புலிகள் மற்றும் குறுங்குழுக்களுமாக இலங்கையின் அரசியல் வரலாறே மாறிப்போயுள்ளது.

 

ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.

 

மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.தமிழ் பேசும் மக்களை அரசியல்ரீதியாக வேட்டையாடிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அரசியல் வங்குரோத்தே, சிங்களஅரசை- பயங்கரவாத அரசாக்கும் மூலகாரணத்தைக் கொண்டிருந்திருக்கிறது.இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளெல்லாம் தாமும் வன்னிக்கு வெளியில் வாழும் தமிழ்பேசும் மக்களைப்போன்று சமூக சீவியத்தைப் பெறுவதாகவே உணரப்படுகிறது.இனியுமொரு ஏமாற்றுப் போரை புலிகளின் நலனுக்காகச் செய்வதற்கு மக்கள் குறுக்கே நிற்கிறார்கள்.ஆனால்,மக்களின் ஜீவாதாரவுரிமைகளைக் கொச்சைப்படுத்தும் புலிகளின் அராஜக நடவடிக்கையானது இளஞ் சிறார்களை மீளவும் போருக்குத் தயார்ப்படுத்தும் ஈனத்தனமாக விரியும்போது,சமூக அக்கறையுடைய மனிதர்கள் இனியும் விட்டேந்திகளாக,விடுபேயர்களாக இருக்கமுடியாது.அப்படியிருத்தல் புலிகளின் தயவில் பதவி,பணம்,அந்தஸ்த்துப் பெற்றுச் செல்வச் செழிப்பில் புரளும் தமிழ்ப் பாசிஸ்டுக்களுக்குத்தான் முடியும்.

 

"நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும்
புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு
சேர்வதில்லை"

 

நெருக்கடிக்குள்ளானது தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வு.அது, மீளவும் சிதைவுற்றத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயமே போர்ச்சுமையினால் பெருமளவில் அழிந்து சிறைப்படும் தருணத்தைச் ஸ்ரீலங்காவின் சிங்கள ஆளும் வர்க்கம் கனவுகாண்கிறது.இந்த இலங்கையின் எதிர்பார்ப்பை மீளவும் யுத்தத்துக்கூடாகச் சாதிக்கத்தக்க அரசிலைப் புலிகளினது இராணுவ முகாம்-கடற்படை முகாம் தகர்ப்புப் போரட்டம் மெல்லச் செய்துவரும்போது,அந்த வியூகத்தைப் பலப்படுத்தும் அரசியலை மிக வலுவான தளத்தில் எடுத்துச் செல்பவர்கள் இலங்கை அரசின் பின்னும் இந்திய உளவுப்படையின் ஆதரவோடும் இயங்கும் குறுங்குழுக்களாகும்.இன்று,பிள்ளையான் தலைமையில் மீளமுடியாத பகை முரண்களை அறுவடைசெய்யும் குழப்பகரமானவொரு அராஜக அரசியலைக் கிழக்குமாகண மக்கள் அனுப்பவித்துவரும்போது அந்த மக்களுக்கு ஜனநாயகம் மெல்ல வழங்கப்படுவதாகப் புலம் பெயர்ந்த புலியெதிர்ப்பு அணியின் ஒருபகுதி சொல்லித் திரிகிறது.ஆனால்,கடந்த முப்பது ஆண்டுகளாகக் கொடிய யுத்த அரசியல் முன்னெடுப்பால் அழிந்து நாசமாகிவரும் மக்களின் வாழ்வாதாரங்கள் இன்றுவரையும் அந்த மக்களின் உயிர்வாழ்வுக்காகக் காத்து,அவர்களின் உரிமையாக்கப்படவில்லை.

 

மக்கள் திறந்த சிறைக்குள் அடைக்கப்பட்டு, இலங்கையரசின் ஆதிக்கத்துக்கான கைதிகளாக்கப்பட்டு அடிமைகளாக உயிர்வாழ நிற்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த யதார்த்தத்தில் ஏழை பாழைகளின் குழந்தைகளோ போருக்காகத் தமது குழந்தைத் தனத்தையிழந்து கொடும் துப்பாக்கி காவி-குண்டுகாவி வெடித்துச் சாகவேண்டும்!இத்தப் பெரும் அநீதியை இனிமேலும் மெளனமாகவிருந்து நாம் பார்க்கமுடியாது.இந்த "அற்பத்தனமான" சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.அதற்கான காரணம் நாமறிந்ததுதான்.அராஜமான படுகொலைகளால் புலிகள் இந்தவொரு வேலைத் திட்டத்தையும் செய்யமுடியாதபடி நம்மைச் சிதைத்து வருகிறார்கள்.மக்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் அதே காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைப் புலிகளும் தகவமைப்பதானால் இங்கே அதிகாரங்களைக் கைமாற்றும் போரே தொடர்கிறதென்ற உண்மையை மக்கள் அறியும் சூழலொன்று உருவாகிறதென்பதுண்மை.இந்த உண்மைகளைச் சிதைப்பதில் இனவாதம் ஆற்றும் அரசியலானது மிகப் பெரிதானது புலிவகைப்பட்ட இலங்கை அரசியலுக்கு.இதுவே தொடர்ந்து குண்டுகளாக இலங்கைவாழ் முழுமொத்த மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு ஆங்காங்கே வெடிக்க வைக்கப்படுகிறது.

 

இந்த மக்களிடம்"ஈழக்கனவு"இனியொரு பொழுது எடுபடுவதற்கான எந்தத் தார்மீகப்பலமும் அவர்களிடம் இல்லை.அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு இதுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.யுத்தம் என்பது எந்தத் தரப்பாலும் நியாயப்படுத்தப்பட்டு மக்களிடம் உயிர்பறிக்கும் ஒரு அரசியலாக மாற்றப்படுகிறது.இது முழு இலங்கை மக்களுக்குமே பெரும் ஆபத்தாக மாற்றப்பட்டு கொடிய இனவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது.இத்தகையவொரு இனவாதப் பிளவு அரசியலை மிகவும் விரும்புகின்ற அந்நியத் தேசங்கள் இலங்கையினதும் புலிகளினதும் யுத்த ஜந்திரத்துக்குத் தொடர்ந்து நிதியாதாரத்தை வழங்கி வருகிறார்கள்.மறுபுறமோ குறுங்குழுக்களை வைத்து மக்களின் உரிமையை மக்களே உணராத கருத்தியல்போரை நடாத்தி மக்களின் சுயவெழிச்சியை அடக்கி அழித்துவருகிறார்கள்.இதன் தொடர்ச்சியான அரசியல் பாச்சிலானது மக்கள் மத்தியில்தொடர்ந்து கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மனங்களை அச்சத்துக்குள் தள்ளி இலங்கையில் உயிர்வாழ்தலே சாத்தியமில்லையெனும் அளவுக்கு உணர்வோடு விளையாடி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து இடம்பெயரவைத்துச் சிங்கள ஆட்சியாளரின் பெருங்கனவைத் தமது நலன்களுக்கான தெரிவில் நிலைப்படுத்த விரும்புகிறார்கள்.


இதுவே,நமது மக்களின் அன்றாட வாழ்வாக இருக்கும்போது புலிகளின் விசுவாசிகள் இன்னும் "ஈழம்,விடுதலை,சுயநிர்ணயம்"எனும் கோதாவில் கதைவிட்டுப் புலம் பெயர் தமிழரிடம் உண்டியல்கிலுக்கித் தமது வரும்படியைப் பெருக்கி வருவதில் மிக முனைப்பாகவே யுத்தம் துணைபுரிகிறது.மொத்தத்தில் மக்களின் அன்றாடக் குருதி சிந்தும் பயங்கரமான கொடிய யுத்தம்,யுத்தத்துக்கு வெளியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையருக்கு ஏதோவொரு முறையில் நன்மை பயக்கும் ஊடகமாக இருக்கிறது.இந்தவொரு நிலைமையின் வெளிப்பாடாகவே இறுத்தித் தமிழன் இருக்கும்வரை "விடுதலைப் போர் தொடரும்"எனும் பாசிச யுத்தக் கோசம் மக்களின் உரிமைவடிவில் நமக்குள் மீளவும் விதைக்கப்படுகிறது.


"பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய
நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ..."

 

இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சா¡ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.(இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்)குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிச் செயற்பாடுகளும், இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.


இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது, அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக, அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் நாம் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.


இங்கு,நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.


ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டுவைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றன என்பதைப் பலதடவைகள் சொல்லியே வருகின்றோம்.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.இன்று புலிகள் இயக்க உடைவென்பது மிகச் சாதுரியமான இந்தியாவின் அரசியல் நடத்தையைச் சொல்வதற்கான எடுகோளாக இருக்கிறது.வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்லும் பிள்ளையான்-கருணா போன்ற அராஜகவாதிகள் கிழக்குக்கு ஜனநாயகத்தைக் காட்டும் விடி வெள்ளிகளான அரசியலில் எத்தனை வகையான "துரோகங்கள்"மலிந்துகிடக்கிறது!


தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரை இலங்கைப் போலிப் பொதுவுடமைவாதிகளும்-பாராளுமன்ற சகதியில் வீழ்ந்த கம்யூனிஸக் கட்சியும் ."அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்." இந்த வகையில் எதிர்தார்கள். இதனால் இனவொடுக்குறைக்கெதிரான முற்போக்குத் தன்மைவாய்ந்த போராட்டம் குட்டி முதலாளித்து இயக்கங்கள் வாயிலாக முன்னெடுக்கும் வராலாற்றுத் தவறுக்கு அவர்கள் ஒத்திசைவானார்கள்.புலிகளின் இருப்புக்கு இன்றைய இலங்கையின் இனவொடுக்குமுறைமட்டுமல்ல காரணம்.போலி இடதுசாரிகளினதும் தவறும் காரணமாக இருக்கிறது.இத்தகைய தவறேதாம் இன்று புலிகளால் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும்"துரோகி"எனும் பாசிசப் பொய் சொல்லித் துரோகமிழைக்கப்படுகிறது.இன்றைய அரசியலில் இலங்கை அரசை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓரளவு ஜனநாயகப் பூர்வமான அரசென்றும் கூறுவோர் உளர்.இவர்களினது மதிப்பீடு இலங்கை அரசின் கடந்தகால மதிப்பீட்டிலிருந்தெழுகிறது.எனினும்,இத்தகைய அரசைப் பின்னின்றியக்கும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நியத் தொடர்பு மற்றும் புலிகளுடான தேன் நிலவு யாவும் இன்று முழுமையான சர்வதிகார அரசவன்முறை ஜந்திரத்தை இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலெனும் வடிவில் உற்பத்தி செய்கிறது.இதுள் புலிகளே மிகப்பெரும் துரோகிகளாகி மக்களை ஒடுக்கும் இலங்கை அரசின் ஓட்டுண்ணிகளாகவும் இந்தியக் கைக்கூலியாகவும் இருக்கிறார்கள்.இதற்குக் பிரபா-கருணாவழி தோன்றிய புலிகள் நல்ல உதாரணமானவர்கள்.

 

"தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக்
கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக்
கிடங்கில் உருக்குலைந்தது"

 

இன்று புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளவட்டமானது பெரும் நெருக்கடிக்குள் வலிந்து வீழ்ந்துள்ளது.அன்று, மனிதப்படுகொலைகளை மறுத்து ஓடிய இந்த வட்டம் பெரும்பாலும் யுத்தத்துக்கு எதிரானதாகவும்,இலங்கை-இந்தியச் சதியையும் புலிகளின் அராஜகத்தையும் வன்மையாகக் கண்டித்து மக்களின் அதீத மானுடத் தேவைகளுக்காக் குரல் கொடுத்தது.இத்தகையவொரு தளத்தில் பல்தரப்பு வர்க்க நலன்களைக்கொண்டவர்கள் இணைந்து கருத்தாடியது யுத்தத்துக்கு எதிரானதென்ற மானுட அவசியத்துக்கான கருத்துநிலைகளால்தாம்.அங்கே, மானுட அழிவைத் தடுத்து நிறுத்துவதும் இலங்கையின் இனப்படுகொலையைத் தடுத்து மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக மக்களைச் சார்வதென்று நோக்கிருந்ததாகக் காட்டினார்கள்.என்றபோதும், இவர்களிடம் மண்டிக்கிடந்த அராஜக மனோபாவம் இயக்கவாதத்தைத் தொடர்ந்து விசுவாசிப்பதிலும் அதன் வாயிலாக வந்ததடையும் நிதி-பதவி எனும் இரட்டை ஆதாயங்கால் மனித விழுமியத்துக்குக் குறுக்கே நின்பதென்ற முடிவில் அவர்களை இயங்க அநுமதித்தது, இந்திய-இலங்கை மற்றும் புலிகளின் ஆதிக்கம்.


இன்றைய இழி நிலையான கருத்தாடல்களுக்குக் காரணமான அரசியல் காரணிகளைத் தேடுமிடத்து இந்த வட்டத்தின் அழிவுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமான முடிச்சை அவிழ்த்தவர்கள் புலிகளே என்பது மிகச் சாதுரியமாக அறியவேண்டியுள்ளது.எங்கே,மக்கள்நலன்சார்ந்த கோசங்கள் எழுகிறதோ அங்கே ஆப்பு வைக்கும் அரசியல் சூழ்ச்சியைப் புலிகள் செய்த வரலாறு நாம் அறிந்ததுதாம்.அன்றைக்கு புளட்டிலிருந்து பிரிந்த "தீப்பொறிக்கு"என்ன நிகழ்ந்ததென்பது பலருக்குத் தெரியும்.அந்தத் தீப்பொறிக்குள் ஊடுரிவிய புலிகள் அதையே மக்களிடமிருந்து அந்நியப்படத்தும் பாரிய செயலுக்காக அந்த அமைப்புக்குள்(குழுவுக்குள்) ஊடுருவி அதையே முற்போக்காய்க் காட்டி உலகத்தின் மூலைகளில் இடம்பெயர்ந்து இலங்கை மற்றும் புலிகளின் மக்கள் விரோதத்தை அம்பலப்படுத்திய முற்போக்காளரை வேவு பார்த்த கதைகளும் ஏராளம்."தீப்பொறிகள்"உள்நுழைந்த புலி உளவுப்படையானது புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களைக் கடந்த பதினெட்டாண்டுகளுக்குமுன்பே வேவு பாத்த வரலாறு நீண்டது.இதுதாம் இன்று மாற்றுக்கருத்தாளர்களை-இடதுசாரிகளை கருத்தியில் ரீதியாகத் "துரோகியாக்கும்"பாசிசக்கருத்தமைவுக்கு வழிசமைக்கும் வியூகத்தைப் புலிகளுக்கு இட்டது.இடதுசாரிகளைப் பிளந்து,அவர்களை இந்திய-இலங்கையின் கைக்கூலிகளாக்கியதும், பின் இன்னுஞ் சிலரைப் புலிகளின் எடுபிடிகளாகவும் கருத்துக்கட்டிய வியூகம் புலிகளின் மிகச் சாதுரியமான உளவுத் திறமைக்கே சாத்தியம்.


இன்று தெருக்களில் நின்று தெரு நாயைவிட மிகமோசமாகக் குரைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் வந்தடைந்த இறுதியிடம் ஒன்று புலிக்கோ அன்றி அந்நியச் சக்திகளக்கோ சேவை செய்வதில் முடிவடைகிறது.விரல்விட்டு எண்ணத் தக்க தோழர்கள் இன்றுஞ் சளையாது இவர்களை அம்பலப்படுத்தினாலும் அவர்களையும் புலிகள் தமது எடுபிடியாளர்களாக வடிவமைப்பதில் தீவிரமாச் செயற்படுகிறார்கள்.ஆக,மொத்தத்தில் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரிய எண்ணமுடையவர்களைப் பூண்டோடு காவுகொள்ளும் படுபிற்போக்கான கருத்தியல் யுத்தமொன்று மெல்ல உருவாகியுள்ளது.இதற்குத் தேசம் இணையம் மிக வசதியாகக் காய் நகர்த்துகிறது.இது இனித் தொடரப்போகும் மக்கள் விரோத அரசியலுக்கு நேரடியான எதிர்க் கருத்து நிலையொன்று உருவாகுவதைத் தடுக்கும் அதேவேளை, மக்களின் சுயாதீனமான முன்னெடுப்பை முடக்குவதாகும்.யுத்தத்துக்கெதிரான மக்களின் சமூக ஆவேஷம் அரசியல் முன்னெடுப்பாகவும் அதுவே போராட்டத் தெரிவை முன்வைத்து அமைப்பாவதையும் தடுக்கும் நரித்தனமான செயற்பாடே இன்று மாற்றுக்கருத்தாளர்களை வலிந்து வீழ்த்திய சதியாக மாறியுள்ளது.இது அழிந்துவரும் இனவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தி இனவாதத் தீயில் குளிர்காயும் அற்ப இயக்க நலனையும் அதன் இருப்பையும் காப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகவே உள்ளது.இங்கே இலங்கை-இந்தியச் சதிகளின் மிக விவேகமான பரப்புரைதளமாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் தமிழ் ஊடககங்கள் பல மாற்றப்பட்டு புலிகளுக்கோ அன்றி அந்நியச் சக்திகளுக்கோ சாதகமான ஊடகங்களாக உருவாகிறது.இதுள் தேசம் நெற்றின் இடம் எதுவென்பது நாம் எல்லோரும் புரிந்துகொள்ளதக்கதே.


இன்றைய அரசியல் சூழ்ச்சிகள் புலம் பெயர்ந்த மக்கள்மத்தியில் மாற்றுக் கருத்தாளர்களைத்"துரோகிகள்"எனும் கருத்தியில் கட்டமைவில் மிக நுணுக்கமாக வீழ்த்தி என்றைக்குமே புலிகளை நியாயப்படுத்தும் அரசியலுக்கு வலுச் சேர்க்கிறது.கணிசமான புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களை இலங்கை மற்றும் இந்திய உளவுப்படைகளின் முகவர்களாக்கிய கொடூரமான அரசியலுக்கு எந்த அமைப்பின் விவேகம் காரணமென்றால்?அது நிச்சியமாகப் புலிகளே என்பது விடையாக விரியும்.புதிய புதிய தெரிவுகளையும் அதுசார்ந்த குளறுபடிகளையும் ஊக்கப்படுத்திய இத்தகைய அரசியல் சூழ்ச்சி இறுதியில் செய்வது மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதே.இத்தகையவொரு அரசியலை உடைப்பதாக இருந்தால் முதலில் இலங்கையில் யுத்தத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தாகவேண்டும்.யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு மக்களின் குரல்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு ஜனநாயகச் சூழலின்றி இலங்கையில் இனங்களுக்கிடையிலான எந்தத் தீர்வும் சாத்தியமாகாது.ஈழத்துக்கான தார்மீக மக்கள் ஆதரவென்பது இனியொரு பொழுதும் சாத்தியமில்லை.மக்களின் அமைதிக்காக- வாழ்வாதாரத் தேவைகளே இதைத் தகவமைத்தது.இதைப் புரிந்துகொண்டு ஈழப்போரை நிராகரிப்பதும் அதே சாக்குவைத்து மக்களை அழிக்கும் இந்திய-இலங்கைச் சதியை முறியடிப்பதும் இன்றைய முற்போக்கு சக்திகளின் தலையாய முதற்கடமையாகும்.இதற்காக புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் தமக்குள் ஐக்கியமுறவது அவசியம்.ஆனால்,இந்த ஐக்கியத்தை உடைப்பதில் மக்களின் எதிரிகளின் கைகள் புலம்பெயாந்த மண்ணில் ஓங்கியுள்ளது.இதை மெளனமாக அங்கீகரித்தல் மக்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம்தாம்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

12.06.2008