இன்னும் ஓரிரு தினங்களில் புத்தாண்டு மலர்ந்துவிடும்!இந்தாண்டும் நமது மக்களின் வாழ்வில் அமைதியான அரசியற் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கப்போறதற்கான எந்த நம்பிக்கையும் தோன்றவில்லை.நமது வாழ்வாதாரங்கள் தொடர்ந்து ஆதிக்கவாதிகளின் அதிகாரத்துக்குள் கட்டுண்டுகிடக்கிறது.இதனால் தொடாந்தும் கொலைகளும்,பாலியல் வல்லுறவும் அன்றாட வாழ்வாகிவிடுகிறது.

 

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்:

 

யாரும் பொதுப்படையான அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற “தேர்வுகளோடு” கருத்தாடுகிறார்கள்.இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய “புலியெதிர்ப்பு,புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு,ஆதரவு” என்ற நிலையிலுள்ளது.நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் “அரசுகள்”என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் “அரசியல்” தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அது தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.

 

இங்கே நடக்கின்ற “அரசியலானது”தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணிய+றும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.

 

இத்தகைய சமூகச் சூழலில்; புலம்பெயர் மக்களில் பலர் தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களில் “நன்மை தீமை” என்பவற்றை நோக்குகிறார்கள்.இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.இந்த இழி நிலையில் மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,இயக்கங்களின் அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த “மக்கள் விரோத அரசியலை” எங்ஙனம் முறியடிப்பது?இதற்குத் துணையாக மக்களை அணிதிரட்டி அவர்களின் நலனை முதன்மைப் படுத்தும் புதிய ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்புமில்லை.இதற்கானவொரு “பொதுச் சூழலை”எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம் எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.

 

மாற்றுக் கருத்தாளர்களும்,அவர்களின் குழி பறிப்பும்:

 

மேற்குலகுக்கு வரும் தமிழ் வானொலி,தொலைக்காட்சிpகளானலும் சரி,அல்லது மாற்றுக் கருத்தாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பழைய பெரிச்சாளிகளும்(குமாரதுரை,ஜெயதேவன்,ஆனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா வகையறாக்கள்)சரி தமது அரசியல் இலாபங்களுக்காகப் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றும் புதிய புதிய கூட்டுகளுடன் அணிசேர்ந்து தமிழரின் சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை(இதைப் புலியிடமிருந்து புரிந்து கொண்ட மூளையால் பார்க்கவேண்டாம்!புலிகளுக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது)நசுக்கித் தமது வாழ்வை மேம்படுத்தத் திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.இதைக் கவனிக்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழர்கள் “இயக்க வாத மாயையுடன்”எதிர்த்துக் கருத்திட்டு, அறிவால் வெல்ல முடியாது- அறிவின்றித் தவிக்கிறார்கள்.இவர்களிடம் இறுதியில் உணர்ச்சி வசப்பட்ட தூஷண வார்த்தையே ஆயுதமாகிறது.அப்பாவி மக்களை வழிப்படுத்தி,அவர்களிடமிருக்கும் போராட்டவுணர்வை,இயக்கவாத மாயையிடமிருந்து காத்து இந்த மக்கள் விரோத அரசியலை வென்றாக வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பதோ வேறான நிலை.நம்மில் பலரிடமுள்ள”Tamil mind”செயற்படாமல் இருக்கிறது.இது உயிருக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கிப்போயுள்ளது.இவர்கள் “We are the Free”என்று தப்பித்துக்கொள்வதற்குப் புலிகளின் மக்கள் விரோத அரசியலே காரணமாகிறது.இதனால் பதவிக்காக இனத்தையே பலியிடும் மூன்றாம்தர அரசியலை ரீ.பீ.சி. வானொலிக் குழு முன்னெடுக்கிறது.இதை அம்பலப்படுத்தும் கட்டுரையொன்றை தூண்டிலில் பரமுவேலன் கருணாநந்தன் எழுதியிருக்கிறார்.இது வரவேற்கத் தக்கது!இத்தகைய சூழலில் மக்கள் சார்ந்த நலன்களைத் தமது பதவிக்காகப் பொருள்தேடும் நோக்குக்காக இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் பயன் படுத்தி வெற்றி பெறுவதை இனியும் பார்த்திருக்க முடியாது.

 

பண்பாட்டு மௌனமும்,பண்பாட்டு இடைவெளியும்:

 

ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(;Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மொனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைகின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிறது.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை.இன்றைய வர்க்க அரசியலில் வர்க்கத்தைத் தாண்டிய எந்த மக்கள் நலனும் கிடையாதென்ற அடிப்படை அரசியல் அரிவரிப் பாடம்கூடப் புரியாது தம்மை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர்களாகவும் மற்றவர்களைச் சாடவும் உரிமையை எடுத்துவிடுகிறார்கள்.இதற்கு நல்ல உதாரணம் டி.சே.தமிழினின் கவிதை.இதற்கு சுட்டியெல்லாம் தந்து கட்டுரை எழுதுவது அவசியமில்லை.”.Microphysics is feeling its way into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of the Psyche!”-G.G.Jung இதுதாம் யுங்கின் கூற்றிலிருந்து இவர்களைப் பற்றி நான் புரிவது.இந்தப் புள்ளியே மிக மோசமானது.இது புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறதென்பதை மறந்துவிட்டுப் புது பாக்களைத் தொகுத்துவிடுகிறது.இல்லாதுபோனால் மற்றவர்களுக்குப் புதுப் புதுத் தொப்பியைத் தைத்து அழகு பார்க்கிறது.

 

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்;திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.இதனால் சிங்கள அரசு இந்தியாவோடு சேர்ந்து காய் நகர்த்தும் அரசியல்-ஆதிக்கப் போரை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாத வெறும் கையாலாகாத இனமாகத் தமிழ் மக்கள் சீரழிந்துள்ளார்கள்.இந்த நிலையில் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தின் பின் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பறிக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை கொலைகளும்,பாலியல் வல்லுறவும் எமது மக்களின் ஆன்ம பலத்தையே காவு கொண்டுவருகிறது.

 

இங்கே நேர்ந்தது என்னவென்றால்”ஆரு குத்தியும் அரிசியானால் சரி” என்ற தனிமனிதத் திருப்தியுறும் மனதின் பண்பாடே!இதுவேதாம் பண்பாட்டு மௌனத்தின் ஊற்றுமூலமாகும்.இதன் தொடர்ச்சியானது ஆயுதக் குழுக்களால் வன்முறை சார்ந்த சமூக ஒடுக்குமுறையாக விரிந்தபோது அதுவே பண்பாட்டு இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது.இதனால் நாம் உயிர் தப்பிவிடுவதே தனிமனித விருப்பாக நமது சமூகத்துள் முகிழ்த்தது.இந்த விருப்புறுதியின் தேர்வே இன்றைய படுகொலைகளின் நீட்சியாகும்.இதுதாம் நமது பண்பாட்டு மௌனம் தந்த அரசியலாகும்.

 

பண்பாட்டு இடைவெளியை, மௌனத்தை உடைக்கும் எழுத்து இயக்கம்:

 

இந்தச் சமூக அவலத்தின் காரணமாக எழுந்த எதிர்ப்பியக்கமாக நமது கல்வியாளர்களில் அற்பமான பகுதியினர் செயற்பட்டபோது அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.எங்கள் கவிஞர்கள் சிவரமணி தன்னையே அழித்தாள் இதைக் கண்ணுற்று,கவிஞர் செல்வியோ கடத்தப்பட்டுக் காணாதுபோனாள்.இருளின் தூதர்களான ஆயுதக் குழுக்கள் இந்த் தமிழினத்தின் ஆன்ம பலத்தையே உடைத்தெறிந்து அவர்களின் போராட்ட மனதைத் தகர்த்தபோது இதை எதிர்த்துக் கவிதை எழுதிய ஜெயபாலன் சேரன் போன்றவர்கள் இறுதியல் ஆயுத தாரிகளின் அற்ப சலுகைகளுக்காகப் பண்பாட்டு மௌனத்தைக் கடைப்பிடித்து,அந்தவகை அரசியலுக்குள் அமிழ்ந்துபோயினர்.செழியனின் அற்புத மான கவிதை வரிகள் இந்த மொனத்தை உடைக்கப் போரிட்டுக் கொண்டது.

 

“யேசுவே! நீர் தேடப்படுகிறீர். யேசுவே எங்கள் தேசத்தில் நீர் தேடப் படுகிறீர்.கிறிஸ்த்துவ தேவாலயமொன்றில் உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ,மாட்டுக் கொட்டிலொன்றில் வைத்தோ,மரித்துப் போன மனிதன் எவனாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப் படுவீர்…”என்றும், விசாரணையின் முடிவில் சிலுவையிலல்ல தேசத் துரோகியாக மின் கம்பத்தில் அறையப் படுவீர்” என்றும் செழியனின் எழுத்துக்கள் இந்த மௌனத்தை உடைக்கப்பாடுபட்டது. அந்தச் செழியன் கனடாவில் இன்று மௌனமானார்!

 

வனத்தின் அழைப்பை எழுதி என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரமணீஸ் என்ற இயற் பெயருடைய அஸ்வக் கோஸ் இன்று தினக்குரலில் பனுவல் பக்கத்தின் பொறுப்பைக் கவ்விக்கொண்டு மௌனமானார். எங்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி,சிவசேகரம்,கணேசலிங்கம்…இத்தகைய சூரர்களுக்கும் மத்தியல் தொடர்ந்து குரல் எறிந்து இந்த மௌனத்தை உடைப்பதிலும் மக்கள் நலன் அரசியலுக்குமாக நாம் போரிட்டு வருகிறோம்.இந்த நாமில் இரயாகரனும் இருப்பார்,ஸ்ரீரங்கனுமிருப்பார் இன்னும் சிலுரும் இருப்பார்.இந்த எழுத்து இயக்கம் அழியாது தன் குரலை இந்த மௌனத்துக்கெதிராக என்றும் எழுப்பும்.

 

உதிரிப் புலி எதிர்ப்பு:

 

இப்போது நடைபெறும் வானொலி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும் எதிரானவோர் அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ் உதிரிப் பதிப்புகள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகள் முடங்கியுள்ளார்கள்.பிராமணர்கள்போலதாம்; இன்றைய புலி எதிர்ப்புக் குழுக்களுக்குள்; உள்ள இலங்கையரச சார்பாளர்கள் தமது நலனுக்காக மேற்கூறிய தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வுக் கூறுகளையே அந்நியர்களுக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழினம் தனது அரிசியல் அபிலாசைகளை இன்னும் நம்பிக்கையோடு கனவு காணுகிறது.

 

சங்க காலத்திற்குப் பின் தொடர்ந்து பல அந்நிய ஆட்சிகளின் கீழ் தனது அடிமை விலங்கைப் புதுபித்துவரும் தமிழினம் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விடுதலை,சமத்துவம்,சகோதரத்துவம்,ஜனநாயகம் என்று முழங்கிய ஆயுதக் குழுக்களாலும்,அரசுகளாலும் ஏமாற்றப்படுவது நிசமாகி வருகிறது.இந்த இருள் சூழ்ந்த அரசியல் சமூக வாழ்விலிருந்து எமது மக்களின் வாழ்வை மீட்டு,அவர்களின் விடுதலையை அவர்களைக் கொண்டே போராடி வெற்றி பெற வைக்கும் “போராட்டத்தில்” எம்மை நாம் இணைத்துப் போராடி வருகிறோம்.இது அடுத்த புதிய ஆண்டிலும் இன்னும் அதிகமாக நமது மூளைகளை நாம் வருத்திப் போராடுவதையே கட்டியம் கூறுகிறது.

 

பிற்குறிப்பாக:

 

இந்த ஆண்டு பட்டுப்போய் அடுத்த ஆண்டு வரப்போகும் இந்தத் தருணத்தில்”நாமெல்லோரும் உயிர் தப்பி,நோய் நொடியின்றி வாழ வாழ்திக் கொள்கிறேன்!”என்பதைச் சொல்லிக் கொண்டு,வலைப் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தி,அதில் எழுதும் ஆலோசனைகளை அப்பப்ப தெரிவித்த அன்பன் டி.ஜே.தமிழினையும் கூடவே இணையத்தில் தமிழை யுனிக்கோட்டில் மாற்றிப் பதிவிட வசதி செய்த எனது நண்பர் சுரதாவையும் மனதாற நன்றியோடு நினைத்து, இப்போதைக்கு விடைபெறுகிறேன் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!- வணக்கம்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
30.12.2005