05_2006.jpg

அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சொற்றொடரின் முழுமையான பொருளை ஒரு இலக்கியம் போல உய்த்துணர்வதற்கு யாரேனும் விரும்பினால், அவர்கள் உடனே தமிழகத்திற்கு வரவேண்டும்.

            ""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.

 

            முதல்வர் நாற்காலியிலமர்ந்து மக்கள் தொண்டாற்றிய நிலையிலேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற "கொள்கை வெறி'யுடன் களத்திலிறங்கியிருக்கும் கருணாநிதி, எந்தப் பாதாளத்திலும் பாய்ந்து பதவி நாற்காலியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்.

            இந்த வந்தனோபசார கடைசி ஆட்டத்தில், உணர்ச்சிபூர்வமான ரசிகர்களாகவும் தன்னுணர்விழந்த பாத்திரங்களாகவும் அவ்வப்போது வாக்காளர்களாகவும் இருக்கக் கொடுத்து வைத்த தமிழக மக்கள், எந்தக் கணத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதைத் தாங்களே அறிந்திராத காரணத்தினால், ஆட்டத்தின் ""கிளைமாக்ஸ்'' காட்சிக்குத் தேவைப்படுகின்ற திகில் தன்மையைத் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கிறார்கள்.

            தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் தலைகளை மேய்கின்ற தொலைக்காட்சிக் ""காமெரா''க்கள் தரும் சித்திரத்தைக் காணும்போது ஒரு மிகப்பெரிய உள்நாட்டுப் போரைத் தமிழகம் சந்திக்கவி ருப்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் நெருங்கி கூட்டத்தினரின் முகங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது பொய்மை உடனே புலப்பட்டு விடுகிறது.

            ""உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்ட உங்கள் "அன்புச் சகோதரி'க்கு நேரம் போதாது என்பது உங்களுக்கே தெரியும்'' என்று தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார் அன்புச் சகோதரி. ஆனால், ""2 ரூபாய் அரிசி, கலர் டி.வி.'' என்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டவுடன் அவருக்கு நேரம் கிடைத்து விட்டது. உளவுத்துறை மற்றும் களவுத்துறை அதிகாரிகள் இணைந்து எழுதிக் கொடுத்த வசனங்களை ஜெ உரக்கப் படிக்கிறார். ""2,34,561 விவசாயிகளுக்கு ரூ. 18,43,323.47 பைசா வழங்கியிருக்கிறேன்'' என்பன போன்ற எண் கணித எழுச்சியுரைகளை அவர் எவ்வளவுதான் குரலை உயர்த்திக் கத்தியபோதிலும் கூட்டம் எதையும் கண்டு கொள்வதில்லை.

            கூட்டத்தை வாடகைக்குப் பேசிய மா.செ; ஒ.செ. மற்றும் மந்திரிகள், ""இரண்டு விரலைக் காட்டியபடி தொடர்ந்து கூத்தாடவேண்டும்'' என்று மட்டுமே "மக்களுக்கு' உத்தரவிட்டிருக்கின்றனர். எனவே, ""இலவசம் இலவசம்'' என்று புரட்சித்தலைவி எத்தனை முறை கூவினாலும், அதைக் கடுகளவும் சட்டை செய்யாமல் இரண்டு விரலைக் காட்டியபடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது, மக்கள் கூட்டம்.

            கருணாநிதியின் கூட்டமோ, "இலவசம்' என்ற சொல்லைத் தலைவர் உச்சரித்தவுடனே "திராவிட நாடு' என்ற சொல்லைக் கேட்ட போன்ற மனக்கிளர்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. சர்வாதிகார ஆட்சியை விரட்டுவதற்கான உத்வேகத்தை மக்களுக்கு வழங்கும் ஆற்றல், 2 ரூபாய் அரிசிக்கும், கலர் டிவிக்கும் தான் உண்டு என்ற இந்த அரசியல் கண்டுபிடிப்பின் விளைவாக, இனி ஆடித் தள்ளுபடி, கோடைத்தள்ளுபடி ஆகியவற்றின் வரிசையில் ""சர்வாதிகார எதிர்ப்பு தள்ளுபடி விற்பனை'' என்ற புதிய விற்பனை உத்தியை வணிகர்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார், கருணாநிதி.

            இந்தக் கேலிக்கூத்துகளுக்குத் தேவைப்படுகின்ற கூட்டத்தைக் கூட்டி, கூட்டத்திற்குத் தேவையான உணர்ச்சியையும் முன்கூட்டியே தட்டியெழுப்பித் தயார் நிலையில் வைப்பதற்காக தேர்தல் மேடைகளில் கூத்தாடுகிறார்கள் "குத்தாட்டக் கலைஞர்கள்'. இதுதான் தமிழகத்தின் தேர்தல் களம்.

            சர்வாதிகார ஆட்சி எதிர்ப்பு, குடும்ப ஆட்சி தடுப்பு, இலவச சைக்கிள், இலவச அரிசி, இலவச டிவி போன்ற எவையும் தோற்றுவிக்காத உணர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் மக்களிடம் தோற்றுவிக்கக் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள் சினிமாக் கழிசடைகள்.

            ஜெசசி கும்பலிடம் சினிமா எடுக்க கந்துவட்டிக்குக் கடன் வாங்கிக் கட்டமுடியாததால் 1996இல் "ஜெயாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து "தி.மு.க.வில் சேர்ந்து, ராஜ்யசபா உறுப்பினர் ஆகி, மனைவியின் டிவி கம்பெனிக்கு ""சன்'' டிவியில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வியாபாரமும் தேடிக் கொண்ட சரத்குமார் என்ற நடிகன் அவமானத்தால் துடிக்கிறார். ""சோனியா காந்திக்கு பூச்செண்டு கொடுக்க விடாமல் விரட்டினார் தயாநிதி மாறன்; மாநாட்டில் முன்வரிசையிலிருந்து என்னை கிளப்பிவிட்டார் பேராசிரியர்; நானிருக்க நடிகன் விஜய் வைத்து தபால்தலை வெளியிடுகிறார்கள்'' என்று கூறி மக்களிடம் நீதி கேட்கிறார்.

            ""என்னை ஜெ என்ன சொல்லி அவமானப்படுத்தினார் என்பதை வெளியில் சொன்னால் சமூக அமைதிக்கே ஆபத்து வந்துவிடும் என்பதால் பொறுமையாக இருக்கிறேன்'' என்று உறுமுகிறார் "தேவரினச் சிங்கம்' கார்த்திக்.

            மகளை வைத்துப் படமெடுத்து கடனில் சிக்கி, கரையேர வழியின்றி ""சன்'' டிவியைச் சரணடைந்த பாக்கியராஜ், ""அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு போதிய "மதிப்பு' இல்லையே'' என்று மருகுகிறார்.

            போயசு தோட்டத்துக்குப் போய் 3 சீட்டுக் கேட்டு மூக்கறுபட்டு வந்த தி.மு.க.வின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலர் டி.ராஜேந்தர், ""நான் எடுத்த படம் ஒருதலை ராகம், வைகோ என்பது ஒருதலை நாகம், அது கலைஞர் காலடியில் அமர்ந்திருந்த காகம்'' என்று முழங்குகிறார்.

            மேடையேறிய சிம்ரன், ""எனக்கு பேசத் தெரியாது'' என்று வெட்கப்பட்டதும் அ.தி.மு.க. வேட்பாளரான ரவுடி சேகர் பாபு அவருக்கு வசனம் சொல்லித் தருகிறார். ""அம்மா ஆட்சியில் தண்ணிப் பிரச்சினையில்லை, ரவுடிப் பிரச்சினையில்லை'' என்று அவர் சொல்ல, ""நோ வாட்டர் ப்ராளம், நோ ரவுடியிசம்'' என்று அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் சிம்ரன். இந்தப் பேச்சைக் "கேட்பதற்காக' மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்து நிற்கிறது ஒரு கூட்டம்.

            இதுதான் தமிழகத்தின் தேர்தல் களம். இந்தக் கழிசடைகள் யாரை நம்பி இத்தனை தைரியமாக மேடையேறுகிறார்கள்? இலவசத் திட்டங்கள் தோற்றுவிக்கும் அடிமைப் புத்தியைக் காட்டிலும் ஆபத்தான இந்த விபச்சார ரசனைக்கு மக்கள் ஆட்படுவது ஏன்?

 

            ""கொட்டுச் சத்தத்துக்கும் கூத்தாடிகளுக்கும் கூடும் கூட்டம் அவர்களை வேடிக்கை பார்க்குமேயொழிய அவர்கள் பேச்சைக் கேட்டு ஓட்டுப் போட்டுவிடாது. இதை வைத்து மக்களின் அரசியல், பண்பாட்டுத் தரத்தை அளவிட்டு விடக்கூடாது'' என்று நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியுமா?

 

            நடிகர்களும் நடிகைகளும் தோன்றும் நுகர்பொருள் விளம்பரங்களை முதலில் வேடிக்கை என்று எண்ணிப் பார்க்கும் மக்கள்தான் பிறகு அவற்றின் வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள். இந்தத் தேர்தல் வேடிக்கையும் கூடத் திடீரென்று தோன்றிவிடவில்லை.

            சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்களும், குடியரசு தினத்தன்று ஜனநாயக உரிமைக்குப் போராடும் செயல் வீரர்களும், மே தினத்தன்று தொழிற்சங்க முன்னணியாளர்களும், பெண்கள் தினத்தன்று பெண் உரிமை அமைப்பினரும், உழவர் திருநாளன்று விவசாயிகளும் தொலைக்காட்சியில் வாழ்த்து சொல்வதையோ, தத்தம் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதையோ பார்த்திருக்கிறீர்களா? மே தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் தொலைக்காட்சியில் தோன்றி ஆசியும் அறிவுரையும் வழங்கிய நட்சத்திரக் கழிசடைகள்தான் இப்போது தேர்தல் மேடைகளில் நேரில் தோன்றுகிறார்கள்.

            "இவர்களுக்கென்ன சம்பந்தம்' என்ற கேள்வியை அப்போதெல்லாம் எழுப்பாத மக்கள் கூட்டம், இப்போது மட்டும் எப்படிக் கேட்கும்? திரைப்படத்தைப் பார்க்கும்போது ரசிகன், ஓட்டுப் போடும்போது வாக்காளன் என்ற பிரிவினை வார்த்தைகளில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையில் ஒரே மனிதன் இரண்டாக இருப்பதில்லை.

            வீடு, பள்ளிக்கூடம், கோயில், சினிமா, அரசியல் போன்றவை வெவ்வேறு தளங்கள் என்றும் அந்த இடங்களுக்குரிய விதிகளும் விழுமியங்களும் வேறுவேறானவை என்றும் கருதப்பட்டது உண்டு. ஆனாலும், இவற்றுக்கிடையில் சீனப் பெருஞ்சுவர் எதுவும் இல்லை.

            பருவம் வராத பிள்ளைகள் பார்க்கத்தகாதவை என்று கருதப்பட்ட ""மிட்நைட்'' மசாலாக்களையும், தந்தையும் பிள்ளைகளும், சகோதரனும், சகோதரியும் சேர்ந்தமர்ந்து பார்க்க முடியாதவை என்று கருதப்பட்ட விரசக் காட்சிகளையும் குடும்பமே ஒன்றுகூடி ரசிக்கிறது; ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதற்கான இடங்கள் என்று கருதப்பட்ட பள்ளிகளின் விழாக்களில் தமது பிள்ளைகள் குத்தாட்டம் ஆடுவதைக் கண்டு பரவசப்படுகிறார்கள் பெற்றோர்கள். கோயில் திருவிழாக்களுக்குக் கூட்டம் சேர்த்து ஆன்மீகத்தை வளர்க்கவும் ""ரிகார்டு டான்ஸ்'' தேவைப்படுகிறது; அதே ""டான்ஸ் பார்ட்டி''தான் அரசியல் கூட்ட மேடைகளிலும் ஏறுகிறது.

            நடிகைகளை விலைபேசி மேடையேற்றும் போட்டியில் ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனதால், தி.மு.க.வினர் "அரசியல் ஒழுக்கம்' பற்றி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். இந்த ஒழுக்கசீலர்களின் ""சன்'' டி.வி.தான் மேற்சொன்ன முடைநாற்றத்தின் மூலாதாரம் என்பதையும், கலைஞர் பொதுவாழ்வுக்குப் பொன்விழா கொண்டாடியபோது அந்த மேடையில் அரங்கேற்றப்பட்டதும் கோடம்பாக்கத்தின் ""ரிகார்டு டான்ஸ்''தான் என்பதையும் அவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

            இது, கலாச்சாரச் சீரழிவு குறித்த ஒழுக்கவாத அங்கலாய்ப்பல்ல; அரசியல் சீரழிவின் நோய்க்குறிகளை அடையாளம் காணும் முயற்சி. லஞ்சத்தை வெறுத்த மக்களை, "லஞ்சம் தவிர்க்க முடியாதது' என்று காலப்போக்கில் அங்கீகரிக்கச் செய்ததைப் போல, போலீசு அராஜகங்களைக் கண்டு கோபமுற்ற மக்களை, "போலீசு என்றாலே அராஜகம்தான்' என்று ஏற்கச் செய்ததைப்போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும்கூடக் காசு கொடுத்தாகவேண்டும் என்று பழக்கியதைப் போல இந்த அரசியல் சீரழிவுகளுக்கும் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

            தான் போகின்ற இடத்திற்குத் தனது ரசிகர்களையும் சாதிக்காரர்களையும் இழுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் போன்ற கழிச டைகள் களத்தில் குதித்திருக்கிறார்கள். தன்னை பிழைப்புவாதியாகவும் தன் தாயை ஒழுக்கசீலியாகவும் தி.மு.க.வினர் சித்தரித்ததனால் கடுங்கோபமுற்ற வைகோ, ஜெயாவை வீட்டுக்கு அழைத்து, தன்னுடைய "குடும்பமே பிழைப்புவாதக் குடும்பம்தான்' என்பதைத் தொலைக்காட்சிக் காமெராக்களின் முன்னால் நிரூபித்துக் காட்டுவதன் மூலம் தன் நல்லொழுக்கத்தை நிலைநாட்டுகிறார்.

            ""புலிக்கு 35, சிறுத்தைக்கு 9, சிங்கத்துக்கு சைபரா?'' என்ற கார்த்திக்கின் தன்மான முழக்கமும், சரத்குமாரின் அவமானக் குமுறலும் அவர்களை அம்பலப்படுத்துவதைக் காட்டிலும், அவர்களால் உணர்ச்சியூட்டப்படும் சாதிக்காரர்களின் பிழைப்புவாதத்தையே பெரிதும் அம்பலமாக்குகின்றன. ஊழல் குற்றத்துக்காகத் தன்னாலேயே கைது செய்யப்பட்ட இந்திரகுமாரியையும், சேடப்பட்டியையும் கருணாநிதி வரவேற்கும் காட்சி, ஆபாசத்தில் நடிகர் செந்திலின் அரசியல் பிரச்சாரத்தையும் விஞ்சுகிறது.

            "பொறுக்கித் தின்பதற்காக ஓட்டுக் கட்சிகளிடையே நடைபெறும் இந்தப் போட்டியினூடாக இடையிடையே மக்களுக்குப் பொசிவதுதான் ஜனநாயகம்' என்ற புதிய இலக்கணம் அரசியல் அகராதியின் அதிகாரபூர்வ அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமே இப்போது பாக்கியாக இருக்கிறது.

            இந்தச் சீரழிவு, ஓட்டுப்பொறுக்கிகள் மட்டும் தனித்து நின்று நிகழ்த்திய சாதனை அல்ல. மறுகாலனியாக்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் "ஜனநாயகம்' என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதையே இந்த நிகழ்ச்சிப் போக்குகள் பிரதிபலிக்கின்றன.

            கொள்கையின் இடத்தை கவர்ச்சித் திட்டங்களும் கவர்ச்சி நடிகர்நடிகைகளும் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் நேரடியாகவே கைப்பற்றிக் கொண்டு விட்டனர். கோடீசுவரன் மட்டும்தான் வேட்பாளராக முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்து விட்டது என்பதை ஓட்டுக் கட்சித் தலைவர்களும் அறிவார்கள். ஆனால், அது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

            தற்போதைய ஓட்டுச் சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை. பொதுக்கூட்டம் முதல் மாநாடு வரை அனைத்துப் பணிகளுமே காண்டிராக்டர்களிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன. தொண்டர்கள் கொடிகட்டி, போஸ்டர் ஒட்டிய காலம் மலையேறி விட்டது. பிரச்சாரத்துக்கு நடிகர்களை மட்டுமின்றி, தொழில்முறை பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அமர்த்திக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தலைவர்களின் பாதுகாப்புக்கோ போலீசு அல்லது தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி. மக்கள் கருத்தை அறிவதற்குக்கூட கீழ்மட்ட கட்சி அமைப்புகள் தேவையில்லை. கருத்துக் கணிப்புகளையும் தனியார் ஏஜென்சிகளே செய்து கொடுத்து விடுகின்றன. தொண்டர்களுக்கான பணிகள் அனைத்தையும் "காசு' செய்து முடித்து விடுகிறது.

            காசுக்கு விலைபோகாத விசுவாசத்தையும், உழைப்பையும் தொண்டர்களிடம் கோருகின்ற கொள்கை எதுவும் ஓட்டுக் கட்சிகளிடம் இல்லை. இலவச டி.வி., சைக்கிள், வெள்ள நிவாரணம் முதலான "கொள்கைகளை' மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் தொண்டர்களே தேவையில்லை. இந்தக் "கொள்கைகளுக்காக' உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ள ஏழைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

            ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கவும் ஓட்டை உத்திரவாதம் செய்யவும் மட்டுமே நம்பகமான தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதையும் தனியார் ஏஜென்சிகளிடம் விற்பனையாளர்கள் மூலம் செய்து முடிப்பது சாத்தியம் என்பதால், கட்சி என்ற அமைப்பிற்கான அவசியமே ஏறத்தாழ இல்லாமல் போய்விட்டது.

            தொண்டர்களும் கட்சியும் தேவையில்லாமல் போய்விட்ட போதிலும் ஜனநாயகத்துக்கு வாக்காளர்கள் தேவைப்படுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் இந்தத் தேர்தலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக வாக்காளர்களை மாற்றுவதில் ஓட்டுப் பொறுக்கிகள் பெருமளவு வெற்றி பெற்றிருப்பதனால்தான், அவர்களுக்கு "ஜனநாயகம்' தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

            அதனால்தான் விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தொழிற்சங்க உரிமைகள் ரத்து செய்யப்படுவது, கல்வி, மருத்துவம், தண்ணீர் என அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது.. என மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தும், அவையெதுவும் இந்தத் தேர்தலில் எழுப்பப்படாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.

            மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, இழந்து வரும் உரிமைகள் பற்றியோ, உதிர்ந்து வரும் விழுமியங்கள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், இலவம்பஞ்சாய்ப் பறந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் இலவசமே உறுதியான, புரியக்கூடிய கொள்கையாக மக்களுக்குத் தெரிகிறது. உரிமையின் இடத்தை இலவசம் கைப்பற்றிக் கொண்டதைப் போல, மக்களுடைய தன்மானத்தின் இடத்தை சினிமாக் கழிசடைகளின் "அவமானக் குமுறல்' ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.

            "ஓட்டுக் கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள்' என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், அவர்களுடைய அயோக்கியத்தனங்களின் தன்மையை இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்றுவிடவில்லை. வறுமையும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் மக்களுக்கு வர்க்க உணர்வைத் தானாகவே ஏற்படுத்திவிடுவதில்லை. எதிரிகளைப் பற்றி மட்டுமல்ல, அவர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அவர்களுடைய அபாயகரமான நிலை குறித்த புரிதலையும் நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. புரட்சியாளர்கள் முன் உள்ள சவால் இதுதான்.

மு சூரியன்