சுமார் 2000 - ஆண்டுகளுக்கு முன் "சாணக்கியர்" என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் எழுதிய "அர்த்த சாஸ்திரம்"


என்னும் நீதி நூல்... மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ், வல்கியர், ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

 


இந்த சாணக்கியன் மன்னர்கள் கஜானாவை எப்படி நிரப்புகிறார்கள் என்பதைப் பற்றி சொல்கிறார் : அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன. அதில் ஒன்று; இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி பின் அதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. "அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம். "



இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்."



"தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்."சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்ளை நம்பாத மக்களிடத்தில் தான் "தீர்த்தம்" உபயோகப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். இப்படி கடவுள் பெயரை உபயோகித்து மன்னர் காலத்தில் நடந்த சூழ்ச்சிகளை சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் மிக அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.



***

 

அந்த காலத்தில் போலிச் சாமியார்களோ, பணத்திற்காக துறவி வேடம் போட்டு தங்கள் சுயநலத்திற்காக பணம் களவாடப்பட்டதில்லை. அப்படி நடந்தாலும் மன்னர் தன்னுடைய தொழிலுக்கு வேட்டு வைக்கப்படுகிறதே என்று சிறைசேதம் செய்திருப்பான். ஆனால் இன்றைய காலத்தில் நம் சமூகத்தில் சாமியார்களின் எண்ணிக்கை மிகுதியாகி கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கின்றனர்.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1149%20
இந்த பதிவை படித்துப் பாருங்கள். இவர்களைப் போன்று தான் தற்போது உருவாகிக் கொண்டு வருகிறார் டென்மார்க் அபிராமி. இந்த சாமியார்களுக்கும் அபிராமிக்மிக்கும் இருக்கும் வித்தியாசம் இவர் அய்ரோப்பாவில் வசிப்பது. இவரைப்பற்றி ஏற்கனவே ஒருமுறை பதிவு போட்டிருந்தோம்.


http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_15.html பெண் சாமியார்கள், ஆண் சாமியார்கள் என்று பாராபட்சம் இல்லாமல் சாமியார்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் இருந்த போதிலும், மறு பக்கம் புதிய சாமியார்களின் வரவும் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.



சில வருடங்களுக்கு முன்பு கூட சாய் பாபா மீதிருந்த குற்றச்சாட்டையும், தில்லுமுல்லுகளையும் பி.பி.சி தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. சாய்பாபாவின் பித்தலாட்டம்



***

எது எப்படி இருந்த போதிலும், டென்மார்க் அபிராமி செயல்பாடுகள் மிகுந்த நகைப்புக்குரியதாகவே இருக்கின்றன. அம்மன் சாமிபடத்தில் தன்னுடைய முகத்தை ஒட்டி வைத்த போஸ்டர்களை வெளியிடுவதும், அகோரமான தோற்றத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டும் வாயில் இருந்து ரத்தம் ஒழுகுவது போன்றும் படங்களை வெளியிட்டு தமிழ் மக்களிடம் பயம் கலந்த பக்தியை உருவாக்க முற்படுகிறார்.



"பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான "ஆபி டூபாய்" ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருந்தது இவரின் செய்கைகளுக்கும் பொறுந்தும். சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள் தான் அதிகமாகப்பலனை அளிக்கிறது. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்துபணம் திரட்டும் வழி முன்காலத்தில் தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஓயவில்லை. டென்மார்க் அபிராமியும் அம்மன் தன்னுள் இருப்பதாக பிதற்றுகிறார்.



நம் மக்கள் சிந்திக்காததால் தான் இன்னும் "கடவுள் உணர்ச்சி" அல்லது மனிதனை கடவுளாக பாவித்துக் கொள்வது இருக்கிறது. நாம் நினைக்கக்கூட இழிவானது என்று கருதும்படியான செயல்களை உடையதாகத் தான் நம் இந்துக் கடவுள்கள் இருக்கும் போது மனிதனாக நம்மை போல் இருக்கும் ஒருவர் எப்படி கடவுளாக முடியும்?



சமுதாயச் சீர்திருத்தத்திலே முதலாவது காரியம் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டியதாகும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி அவனவன் அறிவுப்படி நடந்து கொண்டானானால் கடவுளும் இருக்க மாட்டார். இந்த போலிச் சரியார்களும் உருவாகமாட்டார்கள்.



***

 


தந்தை பெரியார் சொல்கிறார்...

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:
1- Physicians Cure. 2- Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன்.



எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்! சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்! ("குடிஅரசு"- 1947)



ஆனால் வெட்கக்கேடு! அய்ரோப்பாவில் இருந்துக் கொண்டும், தமிழர்களாகிய நாம் மானம், சூடு, சொரணை, ரோஷம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருசிலர் செய்யும் சமயம் சார்ந்த சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடுகிறோம். அய்ரோப்பாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் செருப்புக்கு பூசை செய்துக் கொண்டிருக்கிறார்கள்! டென்மார்க் அபிராமியின் செருப்புக்கு சுவீச்சர்லாந்தில் பூசையாம்! அம்மாவும் திருவருள் எழுந்தருளப் போகிறாராம். சமீபத்தில் தான் அபிராமி பிறந்த நாள் அன்று கனடா நாட்டிற் க்கு செருப்பு அனுப்பப்பட்டு பூசை செய்து கழுவினார்கள்! இப்போது சுவீச்சர்லாந்தில் ....



நம்மைப் போன்றே ஒரு பெண் சதை, நரம்பு, ரத்தம் என பிண்டமாக இருப்பவர். வாழ்ந்த நாட்டில் பிரச்சனை. நம்மைப் போன்றே புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வசித்து வருபவர். திடீரென போட்ட சாமியார் ஆட்டம் இன்று எல்லை மீறிப் போய் செருப்புக்கு அதுவும் நாடுநாடாக விமானம் மூலம் செருப்பு செல்கிறது. அங்கிருக்கும் தமிழ் மக்களோ திருப்பாதுகை என பெயரிட்டு செருப்பு பூசை செய்துக் கொண்டிருக்கிறார்கள்!



பழி என்றால் - மானக்கேடு என்றால் - இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும் என்ற நீதிக்கு ஆளாக வேண்டிய தமிழ் மகன் வலியப் போய் இழிவையும், பழியையும், மானக்கேட்டையும் சம்பாதித்தக் கொண்டே இருக்கின்றான் என்றால் இதற்குச் சமயத்தின் பேரிலும் கடவுளின் பேரிலும் சாக்குச் சொல்வதென்றால் அது எப்படி அறிவுடைமையாகும்? இதை பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!



ஒரே ஒரு நிமிடம் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துப்பாருங்கள்! இவ்வளவு எடுத்துச் சொல்லுவதால் எங்களுக்கு என்ன லாபம்? இதே அபிராமி டாலர் வேண்டாம் ஈரோவில் காணிக்கை கொடுங்கள் என்று பக்தர்களிடம் கேட்பதற்கும் உள்ள வித்தியாசங்களையாவது நீங்கள் பகுத்துணர்தீர்களானால் போதும்!



***

 


"மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்."

(விடுதலை தந்தை பெரியார் - 14.03.1961)

http://thamizachi.blogspot.com/2008/05/blog-post_13.html